articles

img

மேகதாது - வரலாறு..! - சூர்யா சேவியர் 

மேகேதாட்டு எனும் கன்னட மொழிச் சொல்லையே மேகதாது என்கிறார்கள். அதற்கு ஆடு தாண்டும் என்று பொருள்.

காவிரி ஆறு ஓடிவரும் போது மிக குறுகலான பாதையுள்ள இடம் மேகதாது தான். ஆடு கூட எளிதில் தாண்டிவிடும் அகலம் கொண்ட பகுதி. எனவே அந்த இடத்திற்கு ஆடுதாண்டும் காவிரி என்று பெயர்.

இயற்கையின் உச்சபட்ச அழகை இங்கு காணலாம். பாறைகள் அனைத்தும் பலவண்ணங்களில் மின்னும் அழகுக்கு இணையான அழகை காவிரியில் வேறெங்கும் காண இயலாது. மேகேதாட்டு பகுதியோடு கர்நாடகத்தின் எல்லை முடிவுறுகிறது.

சிரபுஞ்சிக்கு அடுத்து அதிக மழை பெய்யும் இடம் பிரமகிரிமலை. காவிரி இங்கிருந்துதான் புறப்படுகிறது.மழை அளவு எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 5000 மில்லிமீட்டர்.காவிரி வடிவம் பெறுவது இதிலிருந்துதான்.

காவிரி தமிழகம்  வருவதற்கு யாருடைய அனுமதியையும் அவள் கேட்கவில்லை. தானே விரும்பி தேர்ந்தெடுத்துக்கொண்ட இல் வாழ்க்கை அது. அவள் வங்கத்திற்கு வராமல் போனால்,கன்னடம் என்ற பகுதி கடுகளவுகூட தேறாது. அவளை யார் தடுப்பது? ஒன்று தெரியுமா?  காவிரிக்கு மூன்று மொழிகள் தெரியும் எப்படி?

திராவிட மொழிக்குடும்பம் விரிவானது.திராவிட மொழிகள் மொத்தம் 27 என்று கண்டறியப்பட்டுள்ளது.அதில் ஒன்று குடகு மொழி.இந்த மொழியின் தனிச்சிறப்பு யாதெனில் தமிழ்,கன்னடம்,மலையாளம் மூன்றும் கலந்திருப்பதே.மூவருக்குமான உரிமையில்,ஒருவன் சொந்தம் கொண்டாடுவது ஏன்?

இந்திய வரலாற்றில் அதிககாலம் ஆட்சி செய்தவர்கள் இஸ்லாமியர்கள் 900 ஆண்டுகள்.அடுத்து சோழர்கள் 430 ஆண்டுகள்.விஜயநகர வம்சம் 340 ஆண்டுகள்.குப்தர்கள் 233 ஆண்டுகள். மவுரியர்கள் 137 ஆண்டுகள்.  சோழர்கள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு ஒரு வகையில் காவிரியின் செழிப்பே காரணம்.

இதில் முக்கியஅம்சம் என்னவென்றால் இராஜராஜனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் உள்ளது போல் 100 ஆண்டுகள் சோழர்கள் காவிரியின் உரிமையைக் கையில் வைத்திருந்தனர். எனவேதான் காவிரி உருவாகும் நீர்ப்பிடிப்புக்கு இன்றும் சோழவனம் என்றுதான் பெயர்.

காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சி இன்று நேற்றல்ல. மன்னர்கள் காலம் தொட்டே இருப்பதும், அதற்கு எதிரான யுத்தங்களும் நடந்தே வந்துள்ளது.

 

கி.பி. 1146 - 1163 காலகட்டத்தில், சோழ நாட்டில் இரண்டாம் ராஜராஜன் எனும் பேரரசன் ஆட்சி செலுத்தினான். இவன், கி.பி. 1133 - 1150-ல் வாழ்ந்த இரண்டாம் குலோத்துங்கனின் மகன்.  இந்த ராஜராஜன் ஆட்சி செலுத்திய காலத்தில் கர்நாடகத்தைப் போசளன் முதலாம் நரசிம்மன் என்பவன் ஆட்சி செய்துவந்தான். இவன், காவிரி வரும்வழியில் குறுக்கே செயற்கை மலைகளை ஏற்படுத்தித் தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்தான் என்கிறது காவிரி குறித்த வரலாறு.

இதனால், காவிரியில் நீர்வரத்துக் குறைந்துபோனது. தமிழகத்தில் அடங்கிய சோழ நாட்டில் உள்ள பாசனக் கால்வாய்கள் எல்லாம் தூர்ந்துபோனதையடுத்து நாட்டில் வறுமையும், பஞ்சமும் ஏற்பட்டது. இதற்காக நாடுதோறும், ‘பஞ்சந்தாங்கி’ ஏரிகள் வெட்டப்பட்டன. ஆனாலும் எந்தப் பயனில்லை.

அதற்காக, இரண்டாம் ராஜராஜன் சும்மா இருக்கவில்லை. கடும்கோபம் கொண்டான்; கர்நாடகத்தின்மீது படையெடுக்க நினைத்தான். ''தமிழகத்துக்குக் காவிரி நீர் உரிமையானது; அதைத் தடுக்க மைசூரு அரசுக்கு உரிமையில்லை. போசள வீரநரசிம்ம அரசுக்கு இந்திரனே துணையிருப்பினும் கவலையில்லை” என்று போர்ப் பரணி பாடிப் போர் தொடுத்தான்.

இந்தப் போரில் வெற்றிவாகை சூடிய இரண்டாம் ராஜராஜன், போசளன் முதலாம் நரசிம்மன் அமைத்திருந்த அணைகளைத் தகர்த்தெறிந்தான். மீண்டும் தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்தோடி சோழ நாடு வளம் கொழித்தது. இதன்மூலம் இரண்டாம் ராஜராஜன், ‘காவிரி கண்ட சோழன்’, ‘பொன்னிக்கு வழிகண்ட கண்டன்’ என்றெல்லாம் புகழப்பட்டான்.

இந்தப் போருக்கான செலவை ஈடுகட்ட, ‘காவிரிக்கரை விநியோகம்’ என்ற வரி விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தக்கயாகப்பரணி, ராஜராஜ சோழன் உலா, பெரிய புராணம், எரிபத்த நாயனார் புராணம், நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை மேற்கோள் பாடல் உள்ளிட்டவற்றில் சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் காவிரி நீருக்காகத் தமிழகமும், மைசூரும் மோதிக்கொண்டன. அந்தக் காலகட்டத்தில் மதுரையை ராணி மங்கம்மாளும், தஞ்சையை மராட்டிய மன்னன் சகசியும் ஆட்சி செய்தனர். அப்போது மைசூரை சிக்கதேவ மகாராயன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.

அவன், காவிரியின் போக்கை அணைகட்டித் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ராணி மங்கம்மாளும், சகசியும் பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோதிலும், காவிரி நீரை அணைகட்டித் தடுக்கும் மைசூரு மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்டு எதிராகக் களம் இறங்கினர்.

இதையடுத்து, இருவருடைய படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இந்தப் படைகள், மைசூரை அடைவதற்கு முன்னால் காவிரியின் குறுக்கே மைசூரு மன்னன் கட்டிய அணை திறமையற்றவர்களால் கட்டப்பட்டதால், தானாகவே உடைந்துவிட்டது.

அதன் பின்னர், காவிரியில் தடையின்றி நீர்வரத் தொடங்கியது.இந்தச் சம்பவங்களை எல்லாம் அறியும்போது, மன்னர்கள் காலத்திலேயே காவிரி நீருக்கானப் போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. அந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது அவருடைய சீடரான அனுமந்தையா, கர்நாடக முதல்வராகயிருந்தார். அந்தச் சமயத்தில், கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியிருந்தும் காவிரிக்கு நீரைவிட மறுத்தார் அனுமந்தையா.

இதனால் சீற்றம்கொண்ட ராஜாஜி, ''நீரை நீங்களாக விடுகிறீர்களா அல்லது நான் ராணுவத்தை அனுப்பி கிருஷ்ணராஜ சாகர் அணையை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளட்டுமா” எனக் கேட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அனுமந்தையா, அதன் பின்னர் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

'நடந்தாய் வாழி காவிரி'என்ற சிலப்பதிகார வரிகளை நினைவூட்டும் வகையில் ஒருகாலத்தில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது, தமிழக டெல்டா மாவட்டங்களைக் கடந்து, கடைமடை பகுதிவரை கரைபுரண்டு ஓடிய வரலாறு இங்குண்டு.

'சோழநாடு சோறுடைத்து...’ என்ற வழக்குக்கேற்ப, அப்போதெல்லாம் வயல்வெளிகள்  பசுமை போர்த்தியிருந்தன; முப்போக விளைச்சலால் விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமல்லாது, எல்லா மக்களும் குதூகலமாய் வாழ்ந்தனர். ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

இந்த மேகேதாட்டுவில் தான் கர்நாடகா தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த முனைகிறது.  மேகேதாட்டு அணைத் திட்டம் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்பட உள்ளது.

ரூ.5912 கோடி மதிப்பில் அமைய உள்ளது அந்த மேகதாது அணை. இந்த அணை காவிரியின் குறுக்கே அமைக்கப்பட்டால், தமிழர்களுக்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவு குறையும் என்ற காரணத்தால் இந்த அணை கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது தமிழக அரசு.

கர்நாடக அரசு மேகேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,  தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி வடிநில மாவட்டங்கள் காவேரி ஆற்று நீர்வரத்து இன்றி, தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று கருதுவதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டசபை 2015 டிசம்பர் 6 அன்று கூடி இத்திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால் கர்நாடகா அரசின் மேகதாது அணை வரைவுத்திட்டத்திற்கு ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்கிறது. மேகதாதுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயலே.

 

-சூர்யா சேவியர்

 

;