articles

img

அந்தப் பேச்சுக்கே இடமில்லை...

தில்லி எல்லைகளில் கடும் குளிரிலும் மழையிலும் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வக்கற்ற மோடி அரசாங்கம் தனது சூழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றத்தை பகடைக்காயாக பயன்படுத்த முனைந்தது. அவ்வாறு பகடைக்காயாக நீதிமன்றம் ஆகிவிட்டதோ எனும் ஐயப்பாடு உச்சநீதிமன்றத்தின் ஜனவரி 12 தேதிய ஆணைகள்  தோற்றுவிக்கின்றன. பகடைக்காயாக அல்ல! நீதிமன்றம் தெரிந்தேமத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என ஒரு சிலர்குற்றம் சாட்டுவதையும் புறக்கணிக்க இயலாது. உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை தொடர்ந்து வீழ்வது இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

12.01.2021 தேதிய உச்சநீதிமன்றத்தின் ஆணையின் சில அம்சங்கள்:

*    வேளாண் சட்டங்கள் அமலாக்கத்துக்கு தற்காலிகமாக இடைக்காலத்தடை!(சட்டங்களை அல்ல! சட்டங்களின்அமலாக்கத்துக்கு மட்டுமே, அதுவும் தற்காலிக தடை!

*   நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்படும். விவசாயிகள் அனைவரும் அக்குழுவிடம் தமது கருத்தை கூற வேண்டும். இந்த குழு 2 மாதங்களில் தனது கருத்தைநீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கும். (அந்த நான்கு பேர் குழு எப்படி தீர்மானிக்கப்பட்டது என்பது புதிர்!)

*    போராட்ட களத்தில் ‘வைக்கப்பட்டுள்ள’ பெண்கள்/முதியோர்/குழந்தைகளை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். (வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு பொருள் என்ன?)

* விவசாயிகளும் தமது நலனுக்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் வீடு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.தற்காலிக இடைக்காலத் தடையை விவசாயிகள் வரவேற்றாலும் ஏனைய அம்சங்களை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

தடை நம்பத்தகுந்ததா?
நீதிமன்றத்தின் ஆணைகள் குறித்து சட்டத்தின் கோணத்திலிருந்து பலரும் விமர்சித்துள்ளனர். சட்டங்கள்அரசியல் சாசனத்திற்கு முரண்பட்டதா? சட்ட விரோதமானதா? என்பதை பற்றி எதுவும் கூறாமல் குத்து மதிப்பாக நாட்டாமை பஞ்சாயத்து போல ஒரு தீர்ப்பு சொல்வது என்பது(நீதிமன்றத்தின் நோக்கம் தீர்வை உருவாக்க வேண்டும் எனும் நல்ல நோக்கம் இருந்தாலும்) நீதிமன்றத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என சிலர் விமர்சிக்கின்றனர். இந்த சட்ட சூட்சுமங்களுக்குள் செல்லாமல் விவசாயிகள் மிகத்தெளிவாக தாம் ஏன் நிராகரிக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளனர்.

போராட்ட களத்தில் இருக்கும் எந்த விவசாய அமைப்பும் நீதிமன்றத்தை அணுகவில்லை. தமக்கு மத்தியஸ்தம் தேவை எனவும் கோரவில்லை. இந்த பிரச்சனை என்பது எங்களுக்கும்  எங்களது அரசாங்கத்துக்கும் இடையேயானது; இதில் நீதிமன்றத்தை இழுக்க விரும்பவில்லை என தொடக்கத்திலிருந்தே விவசாயிகள் கூறிவருகின்றனர். பிரச்சனை எப்படி நீதிமன்றத்துக்கு சென்றது?விவசாயிகள் போராட்டத்தால் தில்லி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதால் அவர்களை அப்புறப்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என சிலர் வழக்கு தாக்கல் செய்தனர். இவர்களுக்காக இலட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் ஹரீஷ் சால்வே எனும் வழக்கறிஞர் பங்கேற்றார். இதன்பின்னணி என்ன என்பதை நம்மால் எளிதாக ஊகிக்கமுடியும். போராடுகின்ற பல அமைப்புகளில் 8 அமைப்புகளை மட்டுமே மனுதாரர்களாக நீதிமன்றம் இணைத்தது. அவர்களின் வழக்கறிஞராக துஷ்யந்த் தவே/பிரசாந்த் பூஷண்/ கான்சல்வேஸ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால்அவர்களின் எந்த வேண்டுகோளையும் நீதிமன்றம் செவிமடுக்கவில்லை. எனவே அவர்கள் 12.01.2021 அன்றுநீதிமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நீதிமன்றம், வேளாண் சட்டங்களின் அமலாக்கத்துக்கு தற்காலிக இடைக்காலத்தடை விதித்தது.இதனை விவசாயிகள் வரவேற்றாலும் இது தீர்வு அல்ல என கூறிவிட்டனர். ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த தற்காலிக தடை திரும்பபெறப்படலாம்! இதனை எப்படி விவசாயிகள் ஏற்க முடியும்? 11.01.2021 அன்று பல நியாயமான கேள்விகளை அடுக்கடுக்காக அரசாங்கத்துக்கு எதிராக வைத்த நீதிமன்றம் அடுத்த நாள் குறைந்தபட்சம் சட்டங்களுக்கு எதிராக இடைக்காலத்தடை கூட விதிக்க முன்வராதது விவசாயிகளிடம் ஆழமான ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.  இது யாருடைய தவறு? வீண்செலவை விளைவிக்கும் சென்ட்ரல் விஸ்டா (புதிய நாடாளுமன்ற கட்டிடம்+ பிரதமருக்கு சொகுசு பங்களா) கட்டுவது குறித்து உச்சநீதிமன்றம் இதேபோல தற்காலிக இடைக்காலத்தடை விதித்த பொழுது பலரும் வரவேற்றனர். ஆனால் ஒரே மாதத்தில் அந்த தடை நீதிமன்றத்தால் விலக்கப்பட்டது. அத்தகைய சூழ்ச்சிக்குள் சிக்கக்கூடாது என விவசாயிகள் கூறுவது முற்றிலும் நியாயமான ஒன்றுதான்!

குழுவும் கோளாறும்!
நீதிமன்றம் பிறப்பித்த அடுத்த முக்கியமான ஆணை வேளாண் சட்டங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு போட்டது ஆகும். இந்த குழுவிடம் விவசாயிகள் தமது கருத்துகளை கூற வேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஒரு ஆணையாக நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதில்தான் நீதிமன்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து பலத்தசந்தேகம் எழுந்துள்ளது. பேச்சு வார்த்தைகளில் அரசாங்கமும் குழுவை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தது. சட்டங்களை அகற்றாமல் எந்த குழுவையும் தாங்கள் ஏற்க இயலாது என தொடர்ந்து விவசாயிகள் கூறிவருகின்றனர். இந்த குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நீதிபதி லோதாவை நியமிக்கலாம் என 11.01.2021 அன்று துஷ்யந்த் தவே முன்மொழிந்தார். சில நாட்களுக்கு முன்பு இதே ஆலோசனையை முன்வைத்த நீதிமன்றம், கிராமப்புற பிரச்சனைகள் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும் பிரபல பத்திரிக்கையாளர் சாய்நாத் போன்றோரை இந்தகுழுவில் இணைக்கலாம் என்று கூட கருத்து தெரிவித்தது. ஆனால் இப்பொழுது அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் பெயர்கள் இமாலய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது எனில் மிகை அல்ல!

4 பேர் கொண்ட இந்த குழுவின் உறுப்பினர்களின் பின்புலம் கீழ்கண்டவாறு உள்ளது:

1. அஷோக் குலாட்டி
இவர் ஒரு விவசாய பொருளாதார அறிஞர். நிதி ஆயோக் உறுப்பினரான இவர்தான் இந்த சட்டங்களின் பிதாமகர் என கூறப்படுகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை ஆதரிக்கும் இவர் இந்த சட்டங்களை ஆதரித்து பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார். எதிர்கட்சிகள் இந்த சட்டங்கள் குறித்து தவறாக பேசி வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

2. பிரமோத் குமார் ஜோஷி
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்கு ஆசிய இயக்குநரான இவர் குறைந்த பட்ச ஆதார விலை என்பதே (MSP) இருக்கக் கூடாது எனவும் விவசாயிகளின் இந்த கோரிக்கையை எக்காரணம் கொண்டு ஏற்கக்கூடாது எனவும் வாதிடுபவர். வேளாண் சட்டங்களை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். வேளாண் சட்டங்களில் இம்மியளவும் மாற்றம் செய்யக்கூடாது எனவும் அப்படி மாற்றினால் இந்தியா உலக பொருளாதார வல்லரசாக மாறுவது தடைப்பட்டுவிடும் என அங்கலாய்க்கும் பிரகஸ்பதி இவர்! 

3. அனில் கன்வாட்
இவர் ‘ஷேக்தாரி சங்கதான்’ எனும் விவசாய அமைப்பின் தலைவர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூடாது எனவும் அவற்றில் சில சிறிய மாற்றங்கள் செய்தால்போதுமானது எனவும் கூறுகிறார். சமீபத்தில் விவசாய அமைச்சர் தோமர் அவர்களை சந்தித்து எழுத்து மூலமாக தனது ஆதரவை தெரிவித்தார். பல ஆண்டுகளாகவே ஷேக்தாரி சங்கதான் விவசாய சந்தையை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட வேண்டும் என கோரி வருகிறது. இந்த சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றிய பொழுது பட்டாசு
கள் வெடித்து வரவேற்றவர் இவர்!

4. ஜித்தேந்தர் சிங் மான்
பாரதிய கிசான் யூனியனின் ஒரு பிரிவு தலைவர்.(இந்த அமைப்பின் பல பிரிவுகள் போராட்டக் களத்தில் உள்ளன) இவரும் அமைச்சரை சந்தித்து எழுத்து மூலமாக ஆதரவு அளித்துள்ளார். பஞ்சாப் மக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானவர் எனில் மிகை அல்ல!வேளாண் சட்டங்களை மட்டுமல்ல; கார்ப்பரேட்டுகளின் நலன்களை வலுவாக ஆதரிக்கும் இத்தகைய ‘அறிவாளிகள்’தான் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் உறுப்பினர்கள். இந்த குழுவை எதன் அடிப்படையில் நீதிமன்றம் நியமித்தது? இத்தகைய ஒரு குழுவிடம் எப்படி விவசாயிகள் தமது கருத்தை கூற இயலும்? இந்த குழுவின்தலைமைப் பொறுப்புக்கு நீதிபதி லோதாவை நியமிக்கலாம் எனும் துஷ்யந்த் தவே முன்மொழிவு ஏன் ஏற்கப்படவில்லை? உச்சநீதிமன்றம் தானே முன்வைத்த பத்திரிகையாளர் சாய்நாத் ஏன் இந்த குழுவில் இல்லை? இந்தகுழுவின் ஆலோசனைகள் என்ன ஆகும்? உச்சநீதிமன்றம் இந்த ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூற அதிகாரம் உள்ளதா? இப்படி பல கேள்விகள் விடை தெரியாத புதிர்களாக உள்ளன.  இத்தகைய ஒரு குழுவிடம் தமது கருத்துகளை கூறுவதால் எந்தபயனும் இல்லை எனும் விவசாயிகளின் நிலைபாடு முற்றிலும் நியாயமானதே!

பெண் விவசாயிகளை சிறுமைப்படுத்தலாமா?
உச்சநீதிமன்றம் தனது ஆணையின் ஒரு இடத்தில் “போராட்டக்களத்தில் வைக்கப்பட்டுள்ள பெண்கள்/முதியோர்/குழந்தைகள் ஆகியோர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என கூறுகிறது. “Kept” எனும் ஆங்கிலவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விமர்சனங்களை விளைவித்துள்ளது. அப்படியானால் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இருத்தி வைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றம் கருதுகிறதா? இது முற்றிலும் பொய் என கூறுகின்றனர் விவசாயிகள். விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் குறிப்பாக விவசாய தொழிலாளர்களில் 70% பேர் பெண்கள்தான்! இந்த சட்டங்கள் பெண்களையும் முற்றிலுமாக பாதிக்கிறது. எனவேதான் அவர்கள்  போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல பெண்கள் தாமாகவே டிராக்டர்களை ஓட்டி வந்துள்ளனர் என்பது அனைவரும் கண்டஉண்மை! நீதிமன்றம் தனது வார்த்தைகளை மிகவும்கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

அதே போல முதியவர்களும் தமது மற்றும்  சந்ததியினரின் வாழ்வே நாசமாகிவிடும் என்பதால்தான் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் பலரும் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள்! 65 வயதான முதியவர் ஒருவர் தான் 20 ஆண்டுகள் எல்லையில் தேசத்தின் வெளி எதிரிகளுடன் போர் புரிந்ததாகவும் இப்பொழுது உள்நாட்டு எதிரிகளுடன் போரிட இங்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுதான் பல மூத்த விவசாயப் போராளிகளின் கருத்து. மோடி அரசாங்கம் போலவே உச்ச நீதிமன்றமும் விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான மதிப்பீடு கொண்டுள்ளது வேதனையான ஒன்றுதான்!

திரும்புவது எனும் பேச்சுக்கு இடமே இல்லை!
வேளாண் சட்டங்களின் அமலாக்கத்துக்கு இடைக்காலத்தடை என்பது மிக அசாதாரணமான ஒன்று எனவும் இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது ஆணை அல்ல; ஆனால் எதிர்பார்ப்பு என நீதிமன்றம் கூறுகிறது. போராடுவதற்கான உரிமையை கேள்வி கேட்காத உச்ச நீதிமன்றத்தின் நிலைபாடுக்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள், சட்டங்கள் முழுமையாக திரும்பப் பெறாமல் தாங்கள் வீடு திரும்பப் போவது இல்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளனர். நியாயம் கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு குழுவை போட்டுவிட்டு வீடு திரும்புங்கள் எனச் சொன்னால் எப்படி விவசாயிகள் ஏற்றுக்கொள்ள இயலும்?100க்கும் அதிகமானவர்கள் உயிர்தியாகம் புரிந்துள்ளனரே! அதனை விழலுக்கு இறைத்த நீராக ஆக்க இயலுமா?

விவசாயிகளின் போராட்டத்துக்கு காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் நிதி உதவி புரிகின்றனர் என அட்டர்னிஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது குறித்து ஆதாரங்களுடன் மனுதாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை சங்பரிவாரத்துக்கு ஆதரவானது.  இதனை நீதிமன்றம் அனுமதிப்பதை விவசாயிகள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? திரு. யோகேந்திர யாதவ் கூறியது போல இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கும் ஒரு போராட்டத்தில் ஆன்மிகவாதிகள் இருக்க வாய்ப்பு உண்டு; முரடர்களும் இருக்க வாய்ப்பு உண்டு. இந்த போராட்டத்தை வழிநடத்தும் தலைமையில் அத்தகைய நபர்கள் உள்ளனரா; இந்த தலைமைக்கு காலிஸ்தான் ஆதரவு கொள்கை உண்டா, என்பதுதான் பிரச்சனை! இந்த போராட்டத்தில் உள்ள பலரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது  உயிரை துச்சமென மதித்துபோராடியவர்கள். அவர்களின் அந்த தைரியம் இல்லையெனில் காலிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்காது!

மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு தெற்கே ஆதரவு இல்லை என அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூறினார். இதைவிட பொய் ஏதாவது இருக்க இயலுமா? மகாராஷ்டிராவிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டக்களத்துக்கு வந்துள்ளனர். கேரளாவில் தினமும்போராட்டம் நடக்கிறது. தீப்பந்த ஊர்வலங்கள் நடந்தன. கேரளா சட்ட மன்றம் இந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம்இயற்றியுள்ளது. நூற்றுக்கணக்கான கேரளா விவசாயிகள் போராட்டக்களத்துக்கு விரைந்துள்ளனர். கர்நாடகா/ஆந்திரா/தெலுங்கானா மாநிலங்களிலும் பெரிய போராட்டங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் தொடர்போராட்டம் மாநிலத்தையே உலுக்கியது. தஞ்சை தரணியில்  பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. பெருமாள் எனும்  உழைப்பாளி இந்த பிரச்சனையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் தெற்கே இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு இல்லை என கூறுவதற்கு அட்டர்னி ஜெனரலுக்கு ஒன்று இதயம் கல்லாக இருக்க வேண்டும்; அல்லது சங்பரிவாரத்தின் பொய்க் குணங்கள் அவருக்கும் தொற்றியிருக்க வேண்டும்.

பெண் விவசாயிகள் தினம்/ சுபாஸ் சந்திர போஸ் நினைவுதினம்/ குடியரசு தினப் பேரணி உட்பட விவசாயிகள் தாம் திட்டமிட்ட இயக்கங்களை தொடர்வது என தீர்மானித்து உள்ளனர். பிரச்சனைகளுக்கு மத்திய அரசாங்கம் தீர்வு காணப்போகிறதா? அல்லது பிரேம் சங்கர் ஜா போன்றசில ஆய்வாளர்கள் பயப்படுவது போல இரத்தக்களரியை உருவாக்கப் போகிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.இரத்தக்களரியை தவிர்ப்பது ஒரு நல்ல அரசாங்கத்துக்கு அழகு!

===அ.அன்வர் உசேன்===

;