பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாசமழை பொழியத் துவங்கிவிடுவார். தேர்தல் நெருங்குவதால் பாசமழை பெருவெள்ளமாக பாய்ந்து, காவிரியே திகைத்துப் போகும் அளவிற்கு திருச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பேசிவிட்டு போயிருக்கிறார் மோடிஜி.
ஆனால் தில்லிக்கு விமானம் ஏறியவுடனேயே இந்த பாசம் வடிந்து பாசி பிடித்துவிடும். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும் போது, இந்த பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதல் பிரதமர் நான் தான் என்று கூறி யுள்ளார். இதற்காகத்தான் ஆர்.என்.ரவி பல மாதங்க ளாக பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பது இப்போதுதான் புரிகிறது. படித்து முடித்து பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர் என்பதை பிரதமருக்கு யாராவது சொல்லியிருந்தால் நல்லது.
அடுத்த வரியை தவிர்த்ததேன்?
இந்த விழாவில் பேசும் போது, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். இதன் அடுத்தடுத்த வரிகளை யாரும் அவருக்கு எழுதி கொடுக்கவில்லை போலிருக்கிறது. புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்பது அடுத்த வரி. இன்றைக்கு பாலஸ்தீன மக்க ளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது கெட்ட போர். ஆனால் அமெரிக்காவுக்குச் சாதகமான அயல்துறை கொள்கையை மோடி அரசு பின்பற்றுவ தால் இஸ்ரேலின் இனவெறிப் போரை வெளிப்படை யாக கண்டிக்கக் கூட இவரது அரசு தயங்குகிறது.
பொதுவுடமை கொள்கை திசையெட்டும் சேர்ப் போம். புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் - என்பது அடுத்தடுத்து வரும் வரிகள். வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப் பட்ட பிரதமர் இந்த வரிகளை தவிர்த்ததில் வியப் பில்லை.
‘நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும் நச்சு மனப்பான்மை - தொல்புவிமேல் விழும் பேரிடியாம் அது தூய்மைதனைப் போக்கும்’ என்றும் பாவேந்தர் பாடியுள்ளதை இவரது பத்தாண்டுகால ஆட்சியோடு பொருத்திப் பார்க்க முடியும்.
பாவேந்தர் பாண்டியன் பரிசு நூலில் ‘இருட்ட றையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’! மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே! வாயடியும், கையடியும் மறைவதென்னாள், சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றைச் சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார்தம்மை வெருட்டுவது பகுத்தறிவு’- என்று பாடியுள்ளதையும் பிரதமருக்கு யாராவது அவரது தாய்மொழியான குஜராத் மொழியிலோ அல்லது சமஸ்கிருதம் அல்லது இந்தியிலோ மொழிபெயர்த்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முதலில் ஏபிவிபியினருக்கு பாடம் நடத்தட்டும்
நமது பல்கலைக்கழகங்கள் துடிப்புடன் இருந்த போது நமது தேசமும் நாகரீகமும் துடிப்பாக இருந்தது என்று பிரதமர் கூறியுள்ளார். அண்ணாமலை பல்கலை கழகத்தையும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை பல் கலைக்கழகம் மொழிப் போராட்டத்தில் முன்னின்றது. பல கம்யூனிஸ்ட் இயக்க மற்றும் திராவிட இயக்கத் தலைவர்கள் இதில் பயின்றனர். ஏராளமான ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி கொடுத்ததில் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆனால் அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கு முன்பே 2018ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்து அதற்கு பரிசளித்து பாராட்டியவர் நம்முடைய பிரதமர் மோடி என்பதை மறந்துவிட முடியாது. உயர்ந்த கல்வி நமக்கு வெறும் தகவலை மட்டும் தருவதில்லை. அனைத்து தரப்பினருடனும் இணக்க மாக வாழ உதவுகிறது என்று ரவீந்திரநாத் தாகூர் கூறி யதை பிரதமர் மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆனால் பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி டில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் செய்த வன்முறைகளையும் தாக்கு தல்களையும் மறந்துவிட முடியாது. இணக்கமாக வாழ உதவ வேண்டும் என தன்னுடைய கட்சியின் மாணவர்க ளுக்கு பிரதமர் முதலில் பாடம் நடத்தட்டும்.
அழகாக முடிச்சவிழ்த்தால்...
இதே விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘இன்னார்தான் படிக்க வேண்டும் என்றிருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்கள் கல்வித்துறையில் தழைத்தோங்கி நிற்கின்றன. இதற்கு காரணம் கல்வியை எல்லோருக்கும் பொதுவில் வைத்ததே ஆகும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி யினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கி றது. மீண்டும் குருகுல, குலக்கல்வி முறையை கொண்டுவரத் துடிக்கிறது. அவரவர் குலத்தொழிலை தொடர வேண்டும் என்பதற்காகவே விஷ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் கடன் வழங்குகிற திட்டம் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் கல்வி என்ற நிலைக்கு மாறாக சாதி யோடு கல்வியை முடிச்சு போடும் வேலையாகும். இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் ‘அழகாக முடிச்ச விழ்த்தால் விடுவார் உண்டோ’ என்பார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனைய திறப்புவிழாவிலும் பிரதமர் உரையாற்றி யுள்ளார். அந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, கூட்டிவரப்பட்ட பாஜகவினர் கூச்சலிட்டு இடையூறு செய்துள்ளனர். எனினும் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முதல்வர் பேசியுள்ளார்.
மதுரை விமான நிலையம்...
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது முதல்வர் முன்னிறுத்திய கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் பிரதமர் தனது உரையில் அதுகுறித்து எதுவும் குறிப்பிட வில்லை. மதுரை எம்.பி.,யாக இருந்த பி.மோகன் முன்வைத்த இந்தக் கோரிக்கையை மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் தொ டர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்தி லும் இதுகுறித்து அவர் பலமுறை பேசியுள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதை நிறைவேற்ற வேண்டும். பையிலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்க வேண்டும் என அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். வாரணாசி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அயோத்தியிலும் விமான நிலையம் என்று அறிவித்துள் ளார்கள். ஆனால் வாரணாசியை விட பல மடங்கு பயணிகள் வரக்கூடிய மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்ற மோடி அரசு மறுக்கிறது. பாதுகாப்புப் படை வீரர்கள் குறைவாக இருப்பதாக சொத்தையான காரணத்தை முன் வைப்பதையும் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித் துள்ளார். இதுகுறித்து ஒன்றிய விமானத் துறை அமைச்சர் குறிப்பிடும் போது பல வடமாநிலங்களில் ஒரு சர்வ தேச விமானநிலையம் தான் இருக்கிறது. தமிழகத்தில் நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம் என்று கேட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்த சு.வெங்க டேசன் ஜிஎஸ்டி வரியில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட தமிழகம் செலுத்தியது அதிகம். தமிழ்நாட்டிற்கு நான்கு அல்ல 14 விமான நிலையங்கள் கேட்கவும் எங்களுக்கு உரிமை உண்டு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
வஞ்சனையின் சாட்சியாய் ஒற்றைச் செங்கல்
ஆனால் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை என்று பிரதமர் திருச்சி விழாவில் பேசியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இவர்தான் அடிக்கல் நாட்டினார். இன்று வரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான கட்டுமானப் பணி கூட துவங்கவில்லை.
இதனுடன் அறிவிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேச எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விட்டது. மதுரையில் நடுகல்லாய் மாறி கண்ணீர் வடிக்கும் அந்த ஒற்றைச் செங்கல்லை கேட்டால் தெரியும் தமிழகம் வஞ்சிக்கப்பட்ட கதையை. உலகின் எந்த இடத்திற்கு நான் சென்றாலும் தமிழ கத்தைப் பற்றி பேசாமல் தமிழ்மொழியை மனதாரப் புகழாமல் இருக்க முடியவில்லை என்றும் பிரதமர் உரு கியுள்ளார்.
தமிழர்களின் தொல் நாகரிகத்தை வெளிக் கொணரும் கீழடி அகழாய்விலிருந்து ஒன்றிய அக ழாய்வுத்துறை விலகிக் கொண்டது ஏன்? இதுதான் தமிழுக்கு தரும் மரியாதையா? ஆதிச்சநல்லூர் அக ழாய்வு அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதது ஏன்? அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு ஒரு வெற்றிலைக் காம்பைக் கூட இதுவரை பாஜக ஆட்சி கிள்ளிப்போட்ட தில்லையே? உலகம் முழுவதும் சென்று தமிழ் குறித்து பேசுபவர் ஒன்றிய ஆட்சியிலிருந்து மட்டும் தமிழை தள்ளி வைப்பது ஏன்? மாறாக இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில்தானே இவரது ஆட்சி மூர்க்க மாக முனைப்புக் காட்டுகிறது.
கஞ்சத்தனமும் காழ்ப்புணர்வும்
மாநிலங்களுக்கு வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு அளித்து வருவதாகவும் கடந்த பத்தாண்டு களில் ரூ.120 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு வழங்கி யுள்ளோம் என்றும் பிரதமர் பெருந்தன்மை காட்டி யுள்ளார். இதில் உ.பி.க்கு வழங்கப்பட்டது எவ்வளவு? தமிழ்நாட்டுக்கு தரப்பட்டது எவ்வளவு? என்று பிரித்து சொல்லியிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும்.
தமிழக சட்டமன்றத்தில் 2023 நவம்பர் 8-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மானியக் கோரிக்கையின் போது வஞ்சனை யின் வடிவத்தை அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ஒன்றிய அரசிடமிருந்து ரூ.9,603 கோடி பெற்றதாகவும் ஆனால் நடப்பாண் டில் 3,533 கோடி வரை மட்டுமே தமிழ்நாடு பெற்றுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வரியாக உ.பி. கொடுத்தது 2.24லட்சம் கோடி. ஆனால் அந்த மாநிலத்திற்கு கிடைத்தது 9.04லட்சம் கோடி. தமிழ்நாடு கொடுத்தது ரூ.5.16 லட்சம் கோடி. வரிப் பகிர்வாக திரும்பக் கிடைத்தது 2.08 லட்சம் கோடி மட்டுமே. பீகாருக்கு 200சதவீதம் பேரிடர் நிதி வழங்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 64சதவீதம் மட்டுமே தரப்பட்டது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப் பிட்டிருந்தார்.
இப்போது கூட தமிழ்நாட்டில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு உரிய நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை என்று பிரதமர் வார்த்தைகளில் மட்டுமே கூறுகிறார். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கவே முயல்கிறார் என்பதுதான் திருச்சி மலைக்கோட்டை போல தெளிவாகத் தெரியும் உண்மை.