articles

img

சிங்கமெனக் கர்ஜிக்கும் ஜாக்சீர் சிங்...

இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் முழுவதும் வெள்ளியன்று வன் முறையாளர் போன்று சித்தரித்து திரும்பத் திரும்ப காட்டிய காட்சி ஜாக்சீர் சிங்கை போலீசும், சங்பரிவார் கும்பலும் இணைந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்சிதான்...

“இந்த ஜாக்சீர் சிங் ஏதோ கையில்வாளை எடுத்துக்கொண்டு வெறி கொண்டு பல தலைகளை சீவச் செல்கிறார், அதனால் அவரை காவல் துறையினர் தடுத்து பல தலைகள் உருள்வதை  காப்பாற்றினர்” என்பது
போன்ற தோற்றத்தையே திரும்பத் திரும்ப கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கின. ஆனால் ஒரு போதும் ஊடகங்கள் முழு உண்மையையும் சொல்லவில்லை.

உண்மையில் நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம் பந்தர் என்ற பர்னாலா கிராமத்தை சேர்ந்தவர் ஜாக்சீர் சிங். இவரை அந்த கிராமத்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அன்பாக ஜாகிபாபா என்றே அழைத்து வருகின்றனர். காரணம் எந்த பொதுநல காரியமாக இருந்தாலும் தன்னலம் கருதாமல் ஓடோடி எந்த பணியையும் செய்யக்கூடியவர். அதனாலேயே இவர் மீது அந்த கிராமத்து மக்களுக்குஅவ்வளவு அன்பு. மோடியின் புதியவேளாண் சட்டங்களால் ஒட்டு மொத்தவிவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகுமே என்ற நிலையில், கிராமத்தினருடன் இணைந்து போராட்டக் களத்தில் ஆரம்பம் முதல்இருந்து வருபவர். குறிப்பாக தில்லிசலோ போராட்டம் துவங்கி தில்லியைஅடைந்த நவம்பர் 26 முதல் தில்லியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர். தில்லிக்கு வரும்போதே, திரும்பினால் வெற்றியுடனே திரும்புவேன் என்று உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் எப்போதும் முன்னிலையில் நிற்பவர்தான் இந்த ஜாக்சீர்சிங். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தினமும் உணவு வழங்கும்  சமூக இலவச சமையலறை கூடத்தில் (communal freekitchen) உணவு சமைத்து பரிவோடுபரிமாறி வருபவர்.வழக்கம் போல் வெள்ளிக்கிழமைகாலையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பகுதியில் காவல்துறையின் ஆதரவோடு புகுந்த ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் கும்பல் விவசாயிகள் மீது கல்எறிந்து தாக்குதல் நடத்தியது. கூடாரங்களைப் பிரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.அப்போது அந்தப் பகுதியில் ஜாக்சீர் சிங் உள்ளிட்ட குறைந்தளவு விவசாயிகளே இருந்தனர்.

இதனால்தன் விவசாயிகளை சங்கி கும்பலின்தாக்குதலில் இருந்து பாதுகாக்க வாளை எடுத்துக் கொண்டு சென்றார்.உடனே காவல்துறை தீவிரவாதியை பிடிப்பது போன்று சுற்றி வளைத்து தாக்கியது. அப்போது ஜாக்சீர் சிங் நினைத்திருந்தால் காவலர்களை தாக்கியிருக்க முடியும், ஆனால் தாக்கவில்லை. காரணம் காவலர்கள் விவசாயிகளுக்கு எதிரியல்ல.தங்களைத் தாக்கவரும் சங்கி கும்பலைத் தடுத்து தற்காப்பு பணியில் ஈடுபடுவதே அவரது எண்ணம். ஆனால் அவரின் நோக்கத்தை தெரிந்தே காவல்துறையினர் சுற்றி வளைத்து கொடிய மிருகத்தை அடிப்பது போன்று அடித்து நொறுக்கினர். பூட்ஸ் காலால் தலையை மிதித்து தாக்கினர். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு தாக்கப்பட்டது போல அக்காட்சி இருந்தது.

காவல்துறையினரோடு சங்பரிவார் குண்டர்களும் சேர்ந்து ஜாக்சீரின் உடையை களைந்தும், மண்டையை உடைத்தும், எலும்புகள் முறியுமளவிற்கு தாக்கினர். ஆனாலும் ஜாக்சீர் சிங் அசரவில்லை. மண்டைஉடைந்து முகம் வழியாக சாரை சாரையாக வழியும் ரத்தத்தையும் பொருட் படுத்தாமல்  வெறிபிடித்தவர்களின் பிடியிலிருந்து மீண்டு எழுந்து சிங்கம்போன்று கர்ஜித்து, சிறு புன்னகையோடு விவசாயிகளின் பந்தலுக்குச் சென்றார். அதனைப் பார்த்த மத்திய காவல் படையினர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றனர்.அச்சம் என்பது அவரது அகராதியிலேயே இருந்ததில்லை என்பது அப்போது அந்த ஆர்எஸ்எஸ் கும்பல்உணர்ந்திருக்கும். ‘’விவசாயிகள் ஒன்றும் கூலிக்கு மாரடிக்கும் சங்கிக்கூட்டமல்ல. தங்களின் உரிமைக்காகஉயிரையும் கொடுத்து தேசத்தை காத்து வரும் உண்மையான தேசபக்தர்கள் நாங்கள். இந்த சங்பரிவாரத்தில் பதர்களைக் கண்டு ஒருபோதும் நாங்கள் அஞ்சப்போவதில்லை, வெற்றியுடனே திரும்புவோம்’’ என்று  கூறியபடி ஜாக்சீர்சிங் வழக்கம் போல் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உணவு சமைத்து பரிமாறும் வேலையில் அதே புன்னகையோடு வலம் வருகிறார்.

கட்டுரையாளர் :  எம்.கண்ணன்

;