articles

img

அரசு திண்டாடுவது நிதிப் பற்றாக்குறையால் அல்ல... நம்பகப் பற்றாக்குறையால்...

நிதிப் பற்றாக்குறை (FiscalDeficit), வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) ஆகியவற்றால் தேசம் திண்டாடுகிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் மத்திய அரசுதான் நம்பகப் பற்றாக்குறையால் (Trust Deficit) திண்டாடுகிறது அல்லது திண்டாட வைக்கிறது. நம்பகப் பற்றாக்குறைக்கான காரணங்கள் என்னென்ன?  

குறுக்கு வழி
ஒன்று, 1956 எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டால்தான் எல்.ஐ.சிபங்கு விற்பனையை நடத்த இயலும். இதற்கு சட்டத் திருத்தங்கள் தனி மசோதாவாக வந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? அத்திருத்தங்களைப் பட்ஜெட்டோடு  இணைந்த நிதி சட்ட வரைவிலேயே (Finance Bill) இடம் பெறச் செய்துள்ளது. இதன் நோக்கம் என்ன? பண மசோதாக்கள் மாநிலங்களவையின் (RajyaSabha) ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை. ராஜ்யசபையில் அரசுக்கு தேவையான எம்.பிக்களின் எண்ணிக்கைஇல்லை. எல்.ஐ.சி பங்கு விற்பனை பற்றிய கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதுஅரசுக்கு எளிதாக இருக்காது. எல்.ஐ.சியின் உள்ளார்ந்த வலிமை, எல்.ஐ.சிக்குள்ள நற்பெயர், எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் கத்து ஆகியன அரசுக்கு சாதகமாக இல்லை. இவையெல்லாம்தான் அரசாங்கம் பங்கு விற்பனைக்கு தேவைப்படும் சட்டத் திருத்தங்களை பணமசோதாவாக உள்ள நிதி மசோதாவுக்குள் சொருகி இருப்பதற்கு காரணம்.மக்களவையில் (Lok Sabha) உள்ளபெரும்பான்மையை வைத்து இதைஎப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதுதான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை குறுகிய நோக்கங்களுக்காக வளைக் கிற அரசுக்கு எப்படி நம்பகத்தன்மை கிடைக்கும்?

கறவைப் பசு
இரண்டாவது, பங்கு விற்பனை பற்றியஅறிவிப்பில் உள்ள சூட்சுமம். ஐந்தாண்டுகளுக்கு எல்.ஐ.சி யில் அரசு பங்குகள்75 சதவீதமாக இருக்கும் என்பதுதான். என்ன அர்த்தம் அடுத்தடுத்த பட் ஜெட்டுகளிலும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க கறவைப் பசுவாக எல்.ஐ.சி இருக்கும் என்பதே. இதிலும் ஒரு முரண்உள்ளது. “செபி” (SEBI) விதிகளின்படி, ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 25 சதவீதத்தை விற்க வேண்டும். ஆகவே அரசு சொல்கிற ஐந்தாண்டுகள் என்ற வரையறையை நம்ப முடியுமா?

மூன்றாவது, வங்கி நெறியாளுகை திருத்தச் சட்டம், பொது இன்சூரன்ஸ் தேசிய மயச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட போது என்ன உறுதி மொழிகள்தரப்பட்டுள்ளன. அதாவது அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்கு கீழே போகாது என்பது. இப்போதோ ஒரு அரசுப் பொதுஇன்சூரன்ஸ் நிறுவனம், இரண்டு அரசுவங்கிகள் தனியார் மயமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்குகள் 51 சதவீதத்திற்கும் கீழே போகும் என்பதுதான் அதன் பொருள். எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பதும் தனியார் மயத்தின் முதற்படி என்பதுதானே உண்மை. இவர்களின் வார்த்தைகள் எவ்வளவு காலம் தான் காற்றில் நிற்குமென்ற சந்தேகம் எழாதா? 

ஆத்ம நிர்பர் வேடம்
நான்காவது, அந்நிய முதலீடு குறித்தஅறிவிப்பு. அந்நிய முதலீடு 26 சதவீதமாகக் கொண்டு வரப்பட்ட போதே அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சொன்னது. அது ‘‘சாலையின் இறுதி எல்லை அல்ல’’ (Not end of the road)என்று. அது நிரூபணம் ஆகியிருக்கிறது. 26 சதவீதம் 49 ஆக உயர்ந்தது. இன்று74 சதவீதம் ஆக முன் மொழியப்பட் டுள்ளது. அது மட்டுமல்ல ‘‘இந்தியர் கட்டுப்பாடு’’ (Indian Control) என்றுஇவர்களே 2015 ல் சட்டத்தில் இணைத் ததை இன்று மாற்றுகிறார்கள். ‘‘நிபந்தனைகளோடு அந்நியர் உடமை’’ (Foreignownership with safeguards) என்று இப்போது சொல்கிறார்கள். என்ன நிபந்தனைகள்! எப்படி இதை நம்புவது? ஆத்மநிர்பர் என்ற வேடம் வேறு. ஆகவேதான் அரசு சொல்கிற நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறைஎன்பதெல்லாம் விட அரசிடம் மக்களுக்குள்ள நம்பகப் பற்றாக்குறையே (Trust Deficit) மிக முக்கியமான பிரச்சனை. மக்கள் கருத்தை திரட்டி நம்பகப் பற்றாக்குறையை எதிர்கொள்வோம்! அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தஞ்சை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வைரவிழாவில் 14.02.2021 அன்று ஆற்றிய உரையிலிருந்து...

 தொகுப்பு: க. சுவாமிநாதன்

;