தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை நூறு விழுக்காடு திறந்து விட்டிருப்ப தாக ஒன்றிய மோடி அரசு அறிவித்திருக்கிறது. இது சுயசார்பு இந்தியாவின் நோக்கத்தையே சீர்குலைத்து, நாட்டை நாசப்படுத்தும் வேலை ஆகும். இது தேசத்தின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் - ஐ ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டு சின்னாபின்ன மாக்கியது. தற்போது வரை 4ஜி உரிமத்தை கூட பிஎஸ்என்எல்- க்கு வழங்க மறுக்கிறது. பாஜக வின் நெருங்கிய கூட்டாளியான ரிலையன்ஸ் ஜியோ வின் விளம்பரத் தூதராகவே ‘ பிரதமர் மோடி’ மாறிய அவலமும் அரங்கேறியது. தற்போது வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அரசிற்கு வழங்க வேண்டிய ரூ.119292 கோடிக்கு 4 ஆண்டுகள் விலக்கு அளித்திருப்பதோடு, வட்டியை குறைத்து அபராதத்தை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது. இது மக்களின் பணத்தை இந்நிறுவனங்களுக்கு மடைமாற்றி விடும் நயவஞ்சக வேலையாகும். இது ஒன்றிய அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் கள்ள கூட்டுக்களவாணித்தனமாகும்.
எதற்காக தொலைத் தொடர்புத் துறையில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு, அதற்கான அவசியம் என்ன? கொரோனா பெருந்தொற்று காலத்தில் மற்ற துறைகளை விட தொலைத் தொடர்பு தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவையே அதிகரித்தது. குறிப்பாக நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரின் நுகர்வு மின்னணு வணிகச் சேவையை சாந்தே இருந்தது. ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை உள் ளிட்டவற்றிக்கு தொலைத் தொடர்பு தகவல் தொழில்நுட்பமே அடிப்படையாக இருந்தது.
உலக அளவில் கொரோனா காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 35 விழுக்காடு வீழ்ச்சியடைந்தி ருந்தது. ஆனால் இந்தியாவில் மட்டும் 27 விழுக் காடு அதிகரித்திருந்தது. இந்த முதலீடுகளில் 22 விழுக்காடு தொலைத் தொடர்பு தகவல் தொழில் நுட்பத் துறையில்தான் வந்தது. காரணம் அது அதிக லாபம் கிடைக்கும் துறையாக மாறியிருந்தது. அதிக லாபம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையை ஒன்றிய அரசு கையில் எடுத்து, அதில் கிடைக்கும் லாபத்தை நாட்டின் நலனிற்கு பயன்படுத்த மறுத்தது. ஏனென்றால் நாட்டின் நலனை விட கார்ப்பரேட்களின் நலன்தான் மோடிக்கு முக்கியம்.
அந்நிய நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை வாரிச்சுருட்டவே நிதி மூலதனத்தை இந்தியாவில் குவிக்கின்றன. லாபம் கிடைத்தவுடன் அந்த நிதி மூலதனம் லாபம் கிடைக்கும் மற்ற நாடுகளை நோக்கியே நகரும். இதுதான் எதார்த்தம். மேலும் இந்த 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீடு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு பொருந்தாது என ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
இந்தியாவிற்கு வரும் பெரும் பகுதி அந்நிய நேரடி முதலீடுகள் மொரீஷியஸ் மற்றும் கேமேன் தீவுகள் வழியாகவே வருகின்றன. எப்படி வரு கிறது என்பது ஊரறிந்த ரகசியமே. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்திய ஸ்டார்ட் அப் நிறு வனங்களில் சீன முதலீடுகள் 12 மடங்கு உயர்ந்தி ருக்கிறது. இந்தியாவை கூறு கட்டி விற்பது என்று வந்து விட்ட பிறகு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கிறேன் என்பது ஊரை ஏமாற்றும் செயல். சிந்திக்காத செயலும் கெடும்.