articles

img

பழங்குடியின மக்களும்... செங்கொடி இயக்கமும்...

“கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய கோபுரங்கள்”
மதுக்கூர் இராமலிங்கம் புகழாரம்: கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு நிறைவு மற்றும் எழுத்து, கலைத்துறையில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் என்.ராமகிருஷ்ணன், என்.நன்மாறன், எஸ்.ஏ.பெருமாள், பேராசிரியர் அருணன் ஆகியோருக்கு பாராட்டு விழா, மதுரை புறநகர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மூத்த தோழர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.அந்த நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், “ கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்த விழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசியை பிரதமர் போட்டுக்கொள்ளவில்லை. தூய்மைக் காவலர்கள் போட்டுக்கொள்கிறார்கள். அவர்களோ, நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது இருக்கட்டும். எங்களது வேலையை நிரந்தரப்படுத்துங்கள் என்கிறார்கள்.

100 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்ன சாதித்தீர்கள் எனக் கேட்கின்றனர். முதலாளித்துவச் சதிகாரர்கள் மத்தியில் 100 ஆண்டுகள் நீடித்து நிலைத்ததே சாதனை தான். இந்தாண்டு குடியரசு தினத்தில் வெளிநாட்டினர் யாரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ளவில்லை. இந்தாண்டின் சிறப்பு விருந்தினர்கள் தில்லியை முற்றுகையிட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தான். 

கூகுள் இணையதளத்தில்  நாம் எப்படி இன்றைக்கு தேவையான தகவல்களைப் பெறுகிறோமோஅதேபோல அன்று முதல் இன்று வரை தோழர்என். ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கம்யூனிஸ்ட் இயக்கதின் இணையதளமாக உள்ளார். அவர் ஒரு அறிவுப் பெட்டகம்.எழுதுவதற்கு அருணன் என்ற ஆளுமை, பேசுவதற்கு நன்மாறன் என்ற ஆளுமை, கலை இலக்கிய பண்பாட்டு தளத்தில் கலைஞர்களை உருவாக்க, அவர்களை பயிற்றுவிக்க எஸ்.ஏ.பி. என்ற ஆளுமைகள் நமக்கு உள்ளனர். இவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கிய கோபுரங்கள் என்றார்.

பழங்குடியின மக்களும்... செங்கொடி இயக்கமும்...
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், “ 1960-70-ஆம் ஆண்டுகளில் கலை-இலக்கியத் துறையில் இடதுசாரிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. 1980-ஆம் ஆண்டில் இதில் சிறிய தொய்வு ஏற்பட்டது. பின்னர் கே.ஏ.குணசேகரன், மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற ஆளுமைகள் நமக்குக் கிடைத்தனர். இவர்களை அறிமுகப்படுத்தியது தோழர் எஸ்.ஏ.பெருமாள். கம்யூனிஸ்ட் இயக்கத் தில் எழுதப்படாத வரலாறு பல உள்ளது. அதே நேரத்தில் எழுதப்பட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியில் நான்கு ஆளுமைகளின் பங்கு மகத்தானது.

அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியலில்தியாகம் செய்வது மட்டுமல்ல துல்லியமான அணுகுமுறையும், தத்துவார்த்த விவாதமும் அவசியம். அதற்கு நூல்கள் அவசியம். தோழர் என்.ராமகிருஷ்ணன் மொத்தம் 111 புத்தகங்கள் எழுதியுள் ளார். இதில் 10 புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. 25 புத்தகங்கள் மொழி பெயர்ப்புப் புத்தகங்களாகும். “எழுத்து” தான் கம்யூனிஸ்ட் இயக் கத்தை பேரியக்கமாக மாற்றியது.தோழர் என்.ஆர்.  கட்சியின் நாடளுமன்றக்குழுஅலுவலகத்தில் பணியாற்றிய போது, ஒன்றாயிருந்த மதுரை மாவட்டத்தில் மலைவேடன்  சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக தோழர்பி.ராமமூர்த்தி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரை அம் மக்கள் சந்தித்தபோது அவர்கள் தில்லிக்கு அனுப்பி என்.ராமகிருஷ்ணனை சந்திக்குமாறு கூறியுள்ளனார். தோழர் என்.ஆர். மலைவேடர் மக்கள் பிரச்சனையை அன்றைக்கு நாடாளுமன்ற குழுத்தலைவராக இருந்த ஏ.கே.கோபாலன் கவனத்திற்குகொண்டு சென்றார். அவரும் நாடாளுமன்றத்தில் அம்மக்களுக்காக வாதிட்டார். அம் மக்களின் கோரிக்கை எந்தளவில் உள்ளது என்பது குறித்து மலைவேடன் சமூக மக்களுக்கு என்.ராமகிருஷ்ணன் ஆறு, ஏழு கடிதங்கள் எழுதியுள்ளார். ஏ.கே.கோபாலன் அமைச்சரை நேரில் சந்தித்துப்பேசியுள்ளார். மலைவேடன் மக்களை பழங்குடியின பட்டியலில சேர்த்தது செங்கொடி இயக்கம்.கம்யூனிஸ்ட் இயக்கத்தால் மட்டுமே ஆட்சியாளர்களின் செவிப்பறைகளுக்கு கோரிக்கைளை கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். சமீபத்தில் என்ன சந்தித்து மலைவேடன் சமூக சான்றிதழ் வழங்க முயற்சிகள் எடுக்குமாறு அந்த மக்கள் என்னை சந்தித்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த கோப்புகளில் என்.ராமகிருஷ்ணன் எழுதிய கடிதங்களும் இருந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவரது அனுபவத்தில், படிப்பில் பத்து சதவீதமே எழுதியுள்ளார். அவர் எழுத வேண்டியது ஏராளம். 100 சதவீத ஆளுமைகளை உருவாக்கியவர். கலை-இலக்கிய ஆளுமைகளை கண்டறிந்து அவர்களை மேலே கொண்டு வந்தவர். 990-ஆம் ஆண்டு விருதுநகர் கட்சி அலுவலகத்தில் நான், எழுத்தாளர்கள் கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து மகத்தான எழுத்தாளர்கள் குறித்து எஸ்.ஏ.பி-யுடன் விவாதித்தோம். இரவு 11.30 மணிக்கு தொடங்கிய உரையாடல் மறு நாள் காலை5.30 மணி வரை நீடித்தது. ஒரு சிறந்த எழுத்தாளனாக, படைப்பாளியாக மாறுவது எப்படி என்பதை அவரிடம் கற்றுக்கொண்டோம். என்னை மார்க்சிய எழுத்தாளனாக மாற்றியது எஸ்.ஏ.பி.தான்.

தோழர் என்.நன்மாறன் கம்யூனிச கருத்துக் களை நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர். பேச்சும்  ஒரு கலை. நன்மாறனின் பேச்சு மனிதமனங்களை கவ்வி இழுக்கும். அவருடன் பணியாற்றியது எளிமையான, இனிமையான பயணம்.நான் 1990-ஆம் ஆண்டு தீக்கதிர் பணிக்குச் சென்ற போது என்னுடைய பார்வையை, எழுத்தை, கண்ணோட்டத்தை மாற்றியது பேராசிரியர் அருணன். எனக்கு கிடைத்த பேராசிரியர் அவர். “காலம்தோறும் பிராமணியம்”, “கடவுளின் கதை” போன்றநூல்கள் உலகின் மிகச் சிறந்த நூல்கள் வரிசையில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் இடம் பெற வேண்டியவை.திராவிட இயக்க வரலாறு குறித்து அருணன் எழுதிய எழுத்துக்கள் திராவிட இயக்கத்திலிருந்து பல்வேறு நூல்கள் வெளிவரக் காரணமாக அமைந்தன.காரல் மார்க்ஸ் குறித்து சாமிநாத சர்மா எழுதியுள்ள நூல் சிறப்பானது. அவருக்குப் பின்னால் காரல் மார்க்ஸின் தத்துவம். அரசியல் பங்களிப்பு, பொருளாதார பங்களிப்பு குறித்து ஒரு சிறந்த நூலை எழுதியவர் அருணன் என்றார்.

எனது நோக்கம் இயக்க வரலாறுகளை ஆவணப்படுத்துவதே
எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் பேசுகையில், “ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிஉருவாக்கிய என்னை வளர்த்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தியாகிகளின் வாழ்க்கை,  கட்சித் தலைவர்களின் பங்களிப்பு, பல்வேறு மாவட்டக்குழுக் களின் வரலாறுகள் உள்ளிட்டவற்றை அடுத்த தலைமுறைக்கு தெரிவிக்கவே ஏராளமான நூல்களை எழுதியுள்ளேன். அதற்கு உந்து சக்தியாக இருந்தது, இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  1961-ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னை வந்த நான் ஜனசக்தியில் பணியாற்றினேன், தீக்கதிரை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன்.  பின்னர் தில்லியில் கட்சியின் நாடாளுமன்றக்குழு அலுவலகத்தில் 15 ஆண்டுகள்பணியாற்றி மதுரை திரும்பி 1983-ஆம் ஆண்டு தீக்கதிரில் விளம்பர முகவராக மூன்று வருடங்கள் பணியாற்றினேன். பின்னர் எழுத்துப் பணியில் ஈடுபட்டேன். நான் எழுதிய முதல் புத்தகம் முசாபர் அகமது குறித்தது. பின்னர் கே.பி.ஜானகியம்மாளின் வாழ்க்கை வரலாறு. 

எனது நோக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்,உலக கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறுகளை ஆவணப்படுத்த வேண்டுமென்பதுதான். இதுவரை 81 தோழர்களின் வரலாற்றை, இயக்க வரலாற்றை எழுதியுள்ளேன். இறுதி வரை எனது எழுத்துப் பணி தொடரும் என்றார்.

அலைகள் ஓய்வதில்லை
மேடைக்கலைவானர் என். நன்மாறன் பேசுகையில், “எல்லோரையும் பாராட்டி நான் பேசியுள்ளேன். இப்போது நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள். சிறு வயதில் நான் மௌனமாகவே இருந்துள்ளேன். பாலுக்காக கூடநான் அழுததில்லை எனது பெற்றோர் கூறுவர்.நூலகமே என்னை வளர்த்தது. தலைவர்களின் பேச்சைக் கேட்டு உரம் பெற்றேன். நாடகத்துறையிலும் பணியாற்றியுள்ளேன். அலைகள் ஓய்வதில்லை. அதைப்போல் எனது பணியும் ஓயாது என்றார். 

பாராட்டி, சீராட்டினால் தான் வளர்ச்சி 
எழுத்தாளரும் மூத்த தலைவருமான எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், “ஒருவர் இறந்த பிறகு தான் அவரைப் பற்றி புகழ்வார்கள். இன்றைக்கு மதுரை புறநகர் மாவட்டக்குழு எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறது. இது ஒரு புதியநடைமுறை. இரண்டரை வருடம் தலைமறைவு, இரண்டரை வருடம் சிறை வாசம் அனுபவித்துள் ளேன். நான் எழுதிய மனித குல வரலாறு 50 ஆயிரம் பிரதிகள் விற்றுள்ளது. சில நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது அனுபவத்தை எழுதவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணியையும் விரைவில மேற்கொள்வேன். கட்சி பலமடையை தோழர்களை பயிற்றுவித்து ஊக்குவிக்கவேண்டும்”. ஒரு தோழரை பாராட்டி, சீராட்டினால் தான் அவர் ஸ்தாபனமாக வளருவார் என்றார். 

இது தாய்வீட்டுச் சீதனம்
பேராசிரியர் அருணன் பேசுகையில்,  எனக்கு பெரியார்-மணியம்மை பல்கலை-யின்., வெள்ளையப்பன் விருது, பாமக தலைவர் ராமதாஸ் அழைத்துப் பாராட்டியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எனக்கு பெரியார் ஒளிவிருது வழங்கியது மகிழ்ச்சிதான். நம் மேடைகளில் மார்க்சிய கருத்துக்களை பேசுவதை விட பிறமேடைகளில் பேசுவதுவது தான் பெருமை. அவர் கள் அளித்த விருதை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு அளிக்கும் இந்தப் பாராட்டு புனிதமானது. ஏனென்றால் இது தாய்வீட்டு சீதனம்.

மார்க்சியம் இல்லையென்றால் கதிரேசன் இருந்திருப்பார். அருணன் இருந்திருக்க மாட்டார். அருணன் இருப்பதற்குக் காரணம் மார்க்சியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனக்கு அருணன் என்ற பெயரைச் சூட்டியது மறைந்த தோழர் கே.முத்தையா. புத்தகங்கள் எனக்கு ஞானத்தை கொடுத்தது. என்னை வளர்த்தது மார்க்சியம் தான். தத்துவத்தை சொல்வதற்கென்றே ஒரு கட்சிஇருக்கிறது என்றால் அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். 

விமர்சிக்கால் இருப்பதே பாராட்டு என்பதை தீக்கதிர் ஆசிரியராக இருந்த கே.முத்தையாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். முதல் நாள் எழுதிய கண்ணோட்டத்தை படித்துவிட்டு கே.முத்தையா புன் சிரிப்பு சிரிப்பார். அதுதான் நமக்குக் கிடைத்த பாராட்டு எனக் கருதுவேன்.மார்க்சிய கருத்தியல் உலகத்தையும், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கிறது.  “ஜோபைடன் வெற்றிபெற்றால் சோசலிசம் வந்து விடும்” என்றார் டிரம்ப். சோசலிசம் தோற்காத தத்துவம் என்பதை அமெரிக்காவே ஒத்துக்கொண்டுள்ளது.“சில முதலாளிகளுடன் மோடி கள்ளக்கூட்டு வைத்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். அவரைப் பேச வைத்தது மார்க்சியம் தான்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அதானிக்காகஇயற்கையை  மோடி அரசு விற்பதைக் கண் டித்துள்ளார்”. 

மார்க்சியம் இல்லை என்றால் மனிதன் இல்லை.மனிதன் இல்லை என்றால் மார்க்சியம் இல்லை. மனிதரும் தோற்க மாட்டார். மார்க்சியமும் தோற்காது என்றார்.

 தொகுப்பு : ச.நல்லேந்திரன்

படங்கள்: ஜெ.பொன்மாறன்

;