articles

img

பாதுகாக்க வேண்டிய நீர்‌ மேலாண்மை கல்வெட்டுகள்....

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் சமீபத்தில் தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வந்தவாசி அருகேயுள்ள தேசூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் நீர்மேலாண்மை குறித்த கல்வெட்டுகளும் படைப்புச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அப்போது, தேசூர் ஏரியின் மதகின் அருகே ஒரு கல்வெட்டும், கெங்கம்பூண்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டும், மகமாயி திருமணி கிராமத்தில் ஒரு கல்வெட்டும் என மூன்று கல்வெட்டுகளை கண்டெடுத்தனர். இந்த கல்வெட்டுகள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்மேலாண்மை தொடர்பானது என தெரியவந்துள்ளது.இப்படி தமிழகத்தில் பல இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் ஏரி வெட்டுதல், மதகு அமைத்தல், பாசன வசதி செய்தல், நீர் பங்கீடு, பராமரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை செய்த விவரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏரி அமைத்தலும் அதனை பாதுகாத்தலும் முக்கிய அறச்செயலாக பண்டைய தமிழ் சமூகத்தில் இருந்துள்ளதை இக்கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

அந்த வரிசையில் வந்தவாசி வட்டத்துக்குட்பட்ட தேசூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இதில், கெங்கம்பூண்டி கிராமத்தின் நடுவே தற்போது கடவுள் வழிபாடாக உள்ள கல்வெட்டு கற்பலகையை கல்வெட்டியல் அறிஞர் சு.இராஜகோபால் ஆய்வு செய்ததில், இக்கல்வெட்டு கி.பி.10 ஆம் நூற்றாண்டில், முதலாம் பராந்தக சோழனின் 30 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. சிங்கபுர நாட்டைச் சேர்ந்த கங்கபூண்டி என்ற ஊரில் உள்ள ‘‘மனங்காடுளங்கிடாசானை காலமுக்தி’’ என்பவர் பெரிய மடை ஒன்று செய்வித்தார் என குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டில் மடையின் கோட்டுருவமும் வரையப்பட்டுள்ளது‌ என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வாளர்கள், கல்வெட்டுடன் கோட்டுருவம் அமைந்த அரிய கல்வெட்டு என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தேசூர் பெரிய ஏரி மதகின் அருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கன்னரதேவனின் 22 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டில் ஏழு வரிகள் உள்ளன. இந்த கல்வெட்டு முழுமை பெறாமல் இருந்தாலும் ஏரி மதகை சீர் செய்யும்போது பூமிக்கு அடியில் கிடைத்துள்ளது. கல்வெட்டு இருந்த இடத்தில் பழைய அகமடை மதகின் இரண்டு புறம் உள்ள கற்பலகையில் அழகான வேலைப்பாடுகளும் அமைந்துள்ளன. மேலும் ஆய்வு செய்ததில், ஏரியில் இருந்து மதகு வழியாக நீர் வெளியேறும் தொழில் நுட்பத்தினை விளக்குவது போன்று புடைப்புச் சிற்பமும் காணப்படுவதும் இதன் சிறப்பாகும். இங்கு கிடைக்கும் கல்வெட்டின் மூலம் இந்த மதகு கன்னரதேவன் காலத்தில் ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த ஏரியின் வெளிப்பகுதியில் தாமரைப் பதக்கம் போன்ற தூண் பலகை காணப்படுகிறது. இதில், அசோக சக்கரத்தில் உள்ளது போன்று 24 இதழ்கள் அமைந்துள்ளன. இதுவும் இவ்வூரில் கிடைக்கப்பெறும் அரிதான சிற்ப வகையாகும்.மகமாயி திருமணி கிராமத்தின் மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஏரியில் உள்ள பாறையில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்வெட்டு எழுத்து அமைப்பின்படி, கி.பி.9 அல்லது 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கல்வெட்டில் ஏரிக்கு ஐநூற்றுவர் சபை தூம்பு அமைத்துக்கொடுத்ததை குறிப்பிடுகிறது. 

இதன்மூலம் தேசூர் பகுதியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் மதகில் புடைப்புச் சிற்பமும், தாமரைப் பதக்கம் உள்ள தூணும் அப்பகுதியின் அரிய கலைப் பொக்கிஷமாகும் என்பது வெளிப்படுகிறது. இவற்றைப் பாதுகாத்து பராமரிப்பதன் மூலம் மேலும் பண்டைய கால நீர்மேலாண்மை தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள முடியும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, நமது முன்னோர்கள் நீர் மேலாண்மைக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது இந்த அரிய கல்வெட்டுகளிலிருந்து தெரிய வருகிறது. இத்தகைய கல்வெட்டுகள் மிக முக்கியமானது மட்டுமல்ல; இதை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது என்பதும் மிக‌ அவசியமான ஒன்றாகும்.

கெங்கம்பூண்டி கிராமத்தின் நடுவே தற்போது கடவுள் வழிபாடாக உள்ள கல்வெட்டு கற்பலகையை கல்வெட்டியல் அறிஞர் சு.இராஜகோபால் ஆய்வு செய்ததில், இக்கல்வெட்டு கி.பி.10 ஆம் நூற்றாண்டில், முதலாம் பராந்தக சோழனின் 30 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் : ஐ.வி.நாகராஜன்

;