articles

img

புரட்சிகர வர்க்கப் போராளி...

தோழர் மைதிலி சிவராமன், ஜனநாயக இயக்கத்தில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்பட்டு வந்தார். குறிப்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும், சிஐடியு-விற்கும் பல பத்தாண்டுகள் சிறந்த  பங்களிப்பினைச் செய்திருக்கிறார்.அவரது அயரா உழைப்பு,எளிமை, அனைவரையும் எளிதில் அரவணைத்துக்கொள்ளும் பண்பு, அனைத்துத்தரப்பு மக்களிடமும் பேசக்கூடிய வல்லமை ஆகியவை மூலமாக, கட்சி மற்றும் அதனுடைய வர்க்க, வெகுஜன அமைப்புகளில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் உள்ள பொது மக்களின் அன்பையும், மரியாதையையும் பெற்றிருந்தார்.

பொது உடைமை இயக்கத்தில் இணைந்தார் மைதிலி 

தோழர் மைதிலி, 1960களின் முற்பகுதியில் முதுநிலைபட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அதன்பின் அவர் 1968இல் சென்னைக்குத் திரும்பினார். தோழர் மைதிலி அமெரிக்காவில் வசித்த காலங்கள், அங்கே நிறவெறிக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் அலை அலையாக அதிகரித்துக்கொண்டிருந்தன. மேலும் இந்தக்காலத்தில் சின்னஞ்சிறிய சோசலிஸ்ட் கியூபா, பலம்பொருந்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியுடன் நின்ற காலமுமாகும். (இப்போதும் அது நிற்கிறது.) அமெரிக்கா, 1960களின் மத்தியில் வியட்நாமிற்கு எதிராக மிகவும்கொடூரமான முறையில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஏவியது.அமெரிக்க அரசாங்கத்திற்குஎதிராக, அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில் மிகவும் விரிவான அளவில் யுத்த எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்தன. ஐ.நா.

மன்றத்திலும் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும், சோசலிச நாடுகளும் அணிசேரா இயக்கமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் தங்கள்குரல்களை எழுப்பின. சமத்துவமின்மைக்கு எதிராகவும், பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராகவும் ஏற்கனவே கூருணர்வுமிக்கவராக இருந்த தோழர் மைதிலி (இவர் தன்னுடைய பதின்பருவ வயதில், வீட்டில் தன் தாயாரிடம் சகோதரர்களுக்கு எல்லாம் எவ்வித வீட்டு வேலையும் அளிக்காதுதன்னிடம் மட்டும் வீட்டு வேலைகளை வாங்குவதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்), ஏகாதிபத்தியத்திற்கு எதிராகசமத்துவம் மற்றும் நீதிக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலுவான இயக்கங்களால் இயல்பாகவே ஈர்க்கப் பட்டார். குறிப்பாக கியூபா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ அவருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்.

தோழர் மைதிலி, தன் படிப்பை முடித்தபின் சிறிது காலம், ஐ.நா.வில் காலனித்துவத்திற்கு எதிரான குழுவிற்கு(Committee on Decolonisation) ஓர் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றியது உட்படப் பல்வேறு பொறுப்புகளில் அமெரிக்காவில் பணியாற்றினார். இக்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்,  கல்வியாளரான இளம்மைதிலியை முற்போக்கான முறையில் சமூக மாற்றத்திற் கான பணிகளில் தன்னை அரிப்பணித்துக் கொள்ள வேண்டும்என்று உருக்கு போன்று உள்ள உறுதியை உருவாக்கும் விதத்தில் அமைந்திருந்தன.தோழர் மைதிலி அமெரிக்காவில் இருந்தபோது ஏகாதிபத்தியமும், நிறவெறியும் அவற்றுக்கு எதிரான ஒரு போராளியாக அவர் உருவாவதற்குப் பங்களித்தது என்றால், அவர்சென்னை திரும்பியபோது தமிழ்நாட்டிலும் சென்னையிலும் தீவிரமடைந்து வந்த வர்க்கப்போராட்ட அலைகள் அவரை களப்போராளியாக ஆக்குவதில் பங்காற்றின.

காவிரி டெல்டா பகுதியில் உள்ள கீழ வெண்மணி கிராமத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 44 விவசாயத் தொழிலாளர்களை, கூலி உயர்வு  கேட்டார்கள் என்பதற்காகவும், செங்கொடியை இறக்க மாட்டோம் என்று மறுத்த காரணத்திற்காகவும், நிலப்பிரபுவின் குண்டர்கள் குடிசைக்குள் ளிருந்த அவர்களை வெளியே வரமுடியாமல் வெளியில் பூட்டிவிட்டு தீ வைத்துக் கொளுத்திக் கொன்றார்கள்.கீழவெண்மணி சம்பவம் தொடர்பாக அவர் மிகவும் கவனத்துடன் மேற்கொண்ட ஆய்வுகள், அவருக்கு விவசாயப்பிரச்சனை மீது ஓர் ஆழமான புரிதலை ஏற்படுத்தியது.1970களில் சிஐடியு-வின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்தின் தீரமிகு போராட்டங்கள் பல, குறிப்பாக சென்னையைச் சுற்றி, நடந்துகொண்டிருந்தன. இவை அனைத்தும் தோழர் மைதிலியை உடனடியாகப் போராட்டப் பாதையில் இறங்க வைத்தது. கீழ வெண்மணி சம்பவம் குறித்து மைதிலி எழுதியஒரு கட்டுரையை சென்னையில் தொழிலாளர் வர்க்கத்தின்முதுபெரும் தலைவராக இருந்த தோழர் வி.பி. சிந்தன்படித்திருக்கிறார். பின்னர் அவர், மைதிலியைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக ஒரு விவாதத்திற்காகத் தன்னைச்சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பின்னர் விரைவில்  மைதிலி வி.பி.சி-யைச் சந்தித்தார்.  எந்தப் பாதையில்செல்வது என்பதை விரைந்து முடிவெடுக்கும் தருணமாக அது அவருக்கு அமைந்திருந்தது. அதன்பின்னர் அவர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். வெகுவிரைவிலேயே அதன் முழுநேர உறுப்பினராகவும் மாறினார்.கட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் விரைவில் அவரை கட்சியின் சென்னை மாவட்டக் குழுஉறுப்பினராகவும், பின்னர் இருபதாண்டுகளுக்கும் மேலாகமாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுவதற்கு இட்டுச்சென்றன.

மாதர் அரங்கில் தோழர் மைதிலியின் மகத்தான பங்கு 
தோழர் மைதிலி, 1974இல் தமிழ்நாட்டின் ஜனநாயக மாதர்சங்கத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும், தலைவர்களில் ஒருவராகவும் இருந்து முதுபெரும் தலைவர்களான கே.பி.ஜானகி அம்மா மற்றும் பாப்பா உமாநாத்ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவானபோது, தமிழ்நாட்டின் ஜனநாயக மாதர் சங்கம் அதன் ஒரு பிரிவாக மாறியது. தோழர் மைதிலி அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முக்கியமான தலைவராக வெகு காலம் செயல்பட்டார்.

அப்போது தோழர் மைதிலி  செலுத்திய பங்களிப்புகள் மிகவும் விரிவான அளவில் அங்கீகாரத்தைப் பெற்று,பாராட்டப்பட்டன. மைதிலி ஜனநாயக மாதர் இயக்கத்தில் ஆற்றிய பங்களிப்புகள் நிகரற்றவை. குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெண் சமத்துவத்திற்கான பணிகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேசுபொருள் ஆகியதிலும்   குறிப்பிட்டபாலினப் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களுடன் வரும் மாதர் அமைப்புகளின் கூட்டு மேடைகளை உருவாக்கியதிலும் ஆக்கப்பூர்வமாக அவற்றை செயல்பட வைத்ததிலும் அவர் பணி முத்திரைபதித்தது. அவர் ஆற்றிய உரைகளும் அவரது அணுகுமுறையும் பலதரப்பினராலும் வரவேற்கப்பட்டு ஜனநாயக மாதர்சங்கத்தின் செயல்பாடுகளை அளவிலும் சரி, குணாம்சத்திலும் சரி விரிவான அளவிற்குக் கொண்டுசெல்வதற்கு உதவியது.   எனினும், தோழர் மைதிலி எந்தச் சமயத்திலும் தன் தெளிவான வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து நழுவியது கிடையாது. பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டிலுமே, கட்சித் திட்டத்தின் புரிதலுடன் அவர் ‘ஐக்கிய முன்னணி’ உத்திகளை மிகச்சிறந்த முறையில் முன்னெடுத்துச் சென்று நடைமுறைப்படுத்தினார்.  கீழவெண்மணி படுகொலைக்கு முன்பும் பின்பும் கட்சிமற்றும் அதன் விவசாய அரங்கப்பணிகளில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராகவும் மேற்கொண்ட வர்க்கப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை மிகவும் விரிவான அளவில் எடுத்துச் செல்வதில் அவர் முக்கியமான பங்கினை ஆற்றினார்.வாச்சாத்தி என்னும் கிராமத்தில் பழங்குடியினப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், தோழர் மைதிலி,

வாச்சாத்தி கிராமத்திற்கு உண்மை அறியும் குழுவின் ஓர்அங்கமாக நேரிடையாகச் சென்று விவரங்களைச் சேகரித்து,தொகுத்து, அவற்றின்மீது புலனாய்வு மேற்கொண்டு நீதிவழங்க வேண்டும் என்று வலியுறுத்திபட்டியலின வகுப்பார்மற்றும் பழங்குடியினர்களுக்கான ஆணையருக்கு எழுதிய கடிதம், அதுவரையில் வாச்சாத்திக் கொடுமைகளை மூடிமறைத்திட மேற்கொண்ட மாநில அரசாங்கத்தின் இழிமுயற்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, வாச்சாத்திமக்கள் மீது ஏவப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் மீது உரியமுறையில் புலன்விசாரணை மேற்கொள்ள உதவியது. பின்னர் அச்சம்பவங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது முறையான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்கள்மீது விசாரணை நடைபெற்று, அவர்கள் தண்டனை பெறுவதற்கும் உதவியது.

எழுத்தும் பேச்சும்
தோழர் மைதிலி ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச்சிறந்தபேச்சாளர், மிகச்சிறந்த எழுத்தாளர்.  மிகப்பெரியகூட்டங்களில்கூடஅவர்தான்கூறவரும்விஷயங்களைகூட்டத்தில்குழுமியிருக்கும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் எடுத்துச் செல்லும் திறமைபெற்றவர். அவருடைய பேச்சில்அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும், வாக்கியங்களும் மிகவும் எளிமையாக இருப்பதுடன், அவற்றை அவர்கள்மத்தியில் கொண்டு செல்லும் விதமும் மிகவும் பதமாகவும்,இதமாகவும், அனைவரையும் ஏற்கச்செய்யும் விதத்திலும் அமைந்திடும். இவ்வாறு கூறுவதை, பலவீனம் அல்லதுஒருவிதமான தயக்கம் என்று பொருள் படுத்திக்கொள்ளக் கூடாது.  மைதிலி உருக்கு போன்று மிகவும் உறுதியானதோழர்  அதேபோன்றுகொள்கை சார்ந்தஅனைத்துக் கேள்விகள் குறித்தும் அவரது உரைகள் தெள்ளத்தெளிவாகவே இருக்கும். அவர் கூட்டத்தினரிடையே கொண்டுசெல்லும் செய்தியில் எவ்விதமான சந்தேகமும் ஏற்படாது.கட்சிக் கல்விக்காக அவர் பல முக்கியமான குறிப்புகள் (எடுத்துக்காட்டாக, பெண்கள் பிரச்சனை குறித்து, கட்சிவகுப்புகளில் பயன்படுத்துவதற்காக அவர் எழுதியுள்ள குறிப்புகள்) எழுதியிருக்கிறார். இத்துடன் கிளர்ச்சிப் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்காகவும் பல சிறுபிரசுரங்களையும் அவர் எழுதியிருக்கிறார். அதேபோன்று ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்பெறும் வகையில் பல கட்டுரைகளும் அவர் எழுதியிருக்கிறார்.செவ்வணக்கம் தோழர் மைதிலி! சோசலிசத்திற்கான மற்றும் சுரண்டலற்ற உலகை, சாதிய ஒடுக்குமுறையற்ற உலகை, பாலின சமத்துவமின்மைக்கு எதிரான உலகை உருவாக்கும் போராட்டத்தில் எப்போதும் நீங்கள் எங்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருப்பீர்கள்.பிரியாவிடை தோழர் மைதிலி!

கட்டுரையாளர் : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார அறிஞர், மாநிலக் குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

தமிழில்: ச.வீரமணி

;