articles

img

‘நரக மாளிகை’ - பொன்மனை வல்சகுமார்

25 வருடம் ஆர்எஸ்எஸ் ஊழியராக செயல்பட்டு, மனம் வெறுத்து அதிலிருந்து விலகி சிபிஐ(எம்)-இல் இணைந்த சுதீஷ் மின்னி எழுதிய “நரக சாகேதத்திலே உள்ளறகள்” என்ற மலையாள நூல் தமிழில்....
புத்தகம்: “நரக மாளிகை”
ஆசிரியர்: சுதீஷ் மின்னி; தமிழில்: கே. சதாசிவன்.
வெளியீடு : பரிசல்,   செல்: 88257 67500/ 93828 53646
152 பக்கங்கள். தனிப் பிரதி விலை:  ₹ 120/-
முன்வெளியீட்டுத் திட்டத்தின் படி தனிப் பிரதி விலை: ₹ 100/-

ஆர்எஸ்எஸ் அமைப்பின், ஒரு முன்னாள் ஊழியரின் கால் நூற்றாண்டு கால அனு பவத்தின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தாங்கி வரும் இப்புத்தகம், வாசிப்பவர்களை பேரதிர்ச்சி அடையச் செய்யும் விதத்திலான கொடூர நிகழ்வுகளின் தொகுப்பு. நமது தேசமெங்கும் மக்கள் சேவை என்ற வேடத்தில் உலாவரும் மாரீச மான்களின் முகத்திரையைக் கிழித்து, அவைகளின் உண்மையான அருவருக்கத் தக்க வக்கிர முகங்களைப் படம்பிடித்துக்  காண்பிக்கி றது இந்நூல். மலையாள மொழியில் சில ஆண்டு களுக்கு முன்பு வெளியான  “நரக சாகேதத்திலே உள்ளறகள்” என்ற இந்நூல் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் ஆகும். தற்போது தமிழில் “நரக மாளிகை” என்ற  தலைப்பில் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் மின்னி என்ற சங்  பரிவாரின் தலைவர்,  கேரளம் மற்றும்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது இயக்கப் பணி செய்த காலகட்டங்களில் நேரில் கண்டுணர்ந்த  அனுபவங் களைச்  சுயவிமர்சனம் செய்தபோது உள்ளக் கொதிப்பு டன் எழுதிய ஒப்புதல் வாக்குமூலம் தான் இப்புத்தகம்.

 மாணவர் பருவத்தில் விளையாட்டாக “அண்ட காகசம் அபூ காகசம் திறந்திடு சீசே” என்று சொல்வோ மல்லவா. அது போலக் கூறி, இந்த புத்தகத்தை திறக்கும் போது நாம் இதற்கு முன்பு காணாத குகைகளையும், அந்த  குகைகளுக்குள் நடைபெறும் கொடூரமான காட்சி களையும் ஆசிரியர் தயக்கம் ஏதுமின்றி நேர்மையுடன் பதிவு செய்துள்ளார்.  ஏதுமறியாத களங்கமற்ற பால்மணம் மாறாத குழந்தைப் பருவமான ஐந்தாவது வயதில் ஆர்எஸ்எஸ்-ன் பயிற்சி மையத்திற்குச்  சென்றவர் படிப்படியாக வளர்ந்து பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டு, ஜனநாயகம் ஏதுமற்ற அதன் கூட்டங்களில், நாசகரமானச் சதித்திட்டங்களைத் தீட்டி, அதற்குத் துணை போக நேரிட்ட அவலங்களைப் பட்டியலிட்டு விவரிப்பதைப் பார்க்கும்போது,

சுதீஷ் அந்த காட்டுமிராண்டித்தனமான இயக்கத்திலிருந்து  மீண்டு வெளியே வந்த சம்பவம், மிகுந்த ஆச்சரி யத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியர் கூறுவது போல ஒரு கலவர நிகழ்வு மூலம் தான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் தலசேரி போன்று நாட்டின் பல இடங்களிலும் ஆர்எஸ்எஸ் காலூன்றியது.  பல்வேறு தொழிலாளர் போராட்ட வேளைகளில் ஆர்,எஸ்,எஸ்  ஏற்பாட்டில் போராட்டத்தைச் சீர்குலைக்கும் கருங்காலி வேலைகள் நடத்தப்பட்டதெல்லாம்  நினைவுக்கு வருகிறது.  சுதீஷ், தனது ஊரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் மேல்ஜாதி நிலவுடமையாளரைப்  பாதுகாக்கும் விதத்தில், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கச் சதி வேலை செய்வதைக் குறிப்பிடுவதிலிருந்து, கன்னி யாகுமரி மாவட்டத்தில்  தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம், கேரளாவில் கண்ணூரில் பீடித் தொழிலா ளர்கள் போராட்டம் போன்றவற்றில் சங் பரிவார அமைப்புகள், தொழிலாளர்களை ஏமாற்றும் விதத்தில் முதலாளிகளுடன் சேர்ந்து போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் முதலாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற வஞ்சனை மிகுந்த செயல்பாடுகளால் தங்கள் இருப்பை உத்தரவாதப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டார்கள்.

பின்னர் கன்னியாகுமரி, கண்ணூர் மாவட்டப் பகுதிகளில் இந்த கருங்காலி வேலை களைப் பயன்படுத்திச் ‘சாகா’ பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதும்  மனத்திரையில் தோன்றுகிறது.   கன்னியாகுமரியில் 1980 களில் இத்தகைய ‘சாகா’ செயல்பாட்டை,  பல சிறு முதலாளிகளின் உதவியுடன் துவங்கி, அதன்வழியாக கோயில்களில் நுழைந்து ஆன்மிகம் என்ற பெயரில் சாதாரண மக்களின் மனதில் நஞ்சூட்டும் கருத்துக்களை விதைத்து தங்களை வலு வடையச் செய்தனர்.  இவையெல்லாம்  அவர்களால் பல ஆண்டுகாலமாக நன்கு  திட்டமிட்டுச் செய்யப் பட்ட நாசவேலைகள் என்பதை இப்புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நாம் உணர முடிகிறது.   வேதக்கணித வகுப்புகள் நடத்துகிறோம் என்ற பெயரில், பல தனியார் பள்ளிக்கூடங்களில், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து,  சிலர் வேதக்கணித விற்பன்னர்களின் வேட மணிந்து வகுப்பெடுக்க  வருவதை, அதன் பின்னே ஆர்.எஸ்.எஸ் என்னும் பாசிச அமைப்பின் தந்திரம் பொதிந்த திட்டம் இருப்பதை அறியாமல், பல பள்ளி நிர்வாகங்கள் அனுமதிக்கின்றன.  

இது போன்ற ஆர்.எஸ்.எஸ்-சின் சதித் திட்டங்களைத்  தீவிரமாக கண்காணித்து, எதிர்கால சந்ததியினரை இந்த நச்சுப் பாதையில் சென்றுவிடாமல் தடுக்கும் பொருட்டு, பல்வேறு அனுபவ நிகழ்வுகள் மூலம் முற்போக்கு சக்திகளை  நூலாசிரியர் எச்சரிக்கிறார்.   இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் கொண்ட இந்து ராஷ்டிரம் என்ற கனவை நனவாக்கும் நோக்கத்து டன் பயிற்றுவிக்கப்படும் வெறியூட்டும் பயிற்சிகள் குறித்தும், அந்தப் பயிற்சிகளைப் பெறும் இளை ஞர்களிடத்தில் அப்பயிற்சிகள் ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருப்பதை வாசிக்கும் போது உள்ளம் பதைபதைக்கிறது.  மதுரை யில் அத்தகைய பயிற்சி ஒன்றுக்கு சென்று திரும்பும் போது மீனாட்சியம்மன் கோவில் அருகே முஸ்லிம் களான நடைபாதை வியாபாரிகளிடம் மோதல் ஏற்பட்டு, மிகக் கொடூரமாக அவர்களைத் தாக்கி அவர்களது கடைகளையும் சூறையாடியதை குற்றவுணர்வுடன் விவரிக்கும் போது, அப்பயிற்சி எத்தகைய வெறி கொண்ட மனநிலைக்கு அவரையும் அவரது கூட்டாளி களையும் கொண்டு சேர்த்தது என்று உணர முடி கிறது.  

  ஆர்.எஸ்.எஸ். -சின் உயர்மட்டச் சிந்தனையாளர் களின் கூட்டங்களில் தலித் பிரதிநிதிகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் வராமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என்ற தகவலைப் பகிர்வதன் மூலம், சங் பரிவார் அமைப்புகள், உயர்சாதி வகுப்பின ருக்கான அமைப்பாகவும் அவர்களை பாதுகாக்கும் அமைப்பாகவும் இருப்பதை இப்புத்தகம் நிறுவுகிறது. முஸ்லிம்கள்,  கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோருக்கு எதிராக இளைஞர்கள் மனதில் வெறி யூட்ட ‘சாகா’ விளையாட்டுகளை எவ்வாறு  பயன்படுத்து கிறார்கள் என்பதை வாசிக்கும் போது எவ்வளவு நுட்ப மான உளவியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறார் சுதீஷ்.  நிலச்சீர்திருத்தம், தீண்டாமை எதிர்ப்பு, ஆலய நுழைவுப் போராட்டங்கள் போன்ற இயக்கங்களை  நடத்துவதால் கம்யூனிஸ்டுகளை ஒழிக்க வேண்டும் என்பதை இளைஞர்களின் மனதில் எவ்வாறு பதிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்பதும் இந்த புத்தக மெங்கும் வெளிப்படுத்தப்படுகிறது. பிராமணர்களுக்கு எதிராக போராடியதாலேயே கேரள கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான தோழர் பி. கிருஷ்ணப் பிள்ளையைத் தண்டிக்க, மகா விஷ்ணுவே பாம்பாக வந்து அவரைக் கடித்துக் கொன்றதாகவும், போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷ வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் அக்னிஹோத்ரம் செய்தவர்களின் வீட்டை விஷவாயு தாக்கவில்லை என்றும் பல்வேறு விதமான  கட்டுக்கதைகளை விஞ்ஞா னத்திற்குப் புறம்பான முறையில் சாதாரண மக்களின் அறிவின்மையையும், சமூகத்தில் விரவிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளையும் பயன்படுத்தி பயிற்சி என்ற பெயரில் ‘சாகா’ வகுப்பில் பிராமணியச் சிந்தனை களையும் மூடநம்பிக்கைகளையும் விதைக்கும் முயற்சி களையும் பகிரங்கப்படுத்துகிறார்.

   மத்தியப் பிரதேசத்தில் நில உடைமையாளரான ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்த ஒரு விவசாயி, அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுக்  குத்தகைத் தொகையை வழங்க முடியாமல் தவித்தவாறு, ஆர்எஸ்எஸ் தலைமை யகத்திற்கு வந்து, அந்த நிலவுடைமையாளரிடம்  தனக்குக் கொஞ்சம் காலஅவகாசம் வேண்டுமென்று கேட்கும்போது, கால அவகாசம் தர மறுத்ததோடு, குத்தகைப் பணம் தர முடியவில்லையெனில் அந்த விவசாயியின்  மனைவி மற்றும் மகளை நில உடைமை யாளர்  தனது பாலியல் இச்சைக்கு இலக்காக்க முயலு வதையும் வட இந்தியாவில் நிலவுடைமையின் அடித் தளத்தோடு ஆர்.எஸ்.எஸ் கட்டமைக்கப்பட்டு எவ்வாறு ஒடுக்கப்பட்ட சமூக மக்களை ஏமாற்றுகிறார்கள் என் பதையும் புத்தகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.  

அடிப்ப டைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பவர்களையும்  சமூக அவலங்களை எதிர்ப்பவர்களையும் மாவோ யிஸ்ட் என்று கூறி சிறையில் அடைப்பது போன்றவை சாதாரண நிகழ்வுகள் தான் என்று அவரைப் பலரும் சமாதானம் செய்ய முயன்றும் கூட அவையொன்றும் அவரைத் திருப்திப்படுத்தி ஆர்.எஸ்.எஸ்-சில் தொடர வைக்க உதவவில்லை. மாறாக முரண்பாடுகளும் ஆர்.எஸ்.எஸ்-சின் மீதான சந்தேகங்களும் வலுப்பெறவே செய்தன என்றும் அதுவே அவ்வியக்கத்தை விட்டு வெளியேறவும் காரணமானது என்பதையும் வெளிப் படுத்துகிறார். பண்பாட்டு இயக்கம் என்ற வேடம் அணிந்து ஆர்எஸ்எஸ்  எப்படி எல்லாம் மக்களைக் கபளீகரம் செய்கிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டு களை புத்தகம் தருகிறது. சமூகசேவையை பற்றிக் கூறி வெளிநாடுகளிலி ருந்து பணம் பறிக்கும் செயல்கள், குரு பூஜை என்ற பெய ரில் பெருந்தொகை வசூலித்து நாக்பூர் மையத்திற்கு அனுப்புதல் போன்ற தகவல்கள் வாசிக்கும் யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். குஜராத்தில் குரு பூஜைக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகும் என்பதை அறியும் போது, ஆர்.எஸ்.எஸ்-சின்  பொருளாதார பலம் மிரள வைக்கிறது.

இது மட்டுமல்லாமல் கலவர வேளைகளில் கொள்ளையடித்தல், அந்த கலவரம் குறித்த வழக்குகளை சமரசம் மூலம் செயலிழக்கச் செய்வதற்காக தனது எதிரி அமைப்புகளிடமிருந்து இரகசியமாகப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி இயக்கத்துக்கு நிலம் வாங்கு தல், அலுவலகம் கட்டுதல் போன்ற செயல்களைப் படிக்கும்போது சங் பரிவாரம் செய்யாத பித்தலாட்டம் ஏதுமில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் எல்லாம் விற்பனை செய்த ஒன்றிய அரசு தற்போது பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள போது, அவை யார் கைகளுக்குச்  சென்றடை யும் என்பதை முன்னரே முடிவெடுத்ததற்கான  சான்றும்  இந்தப் புத்தகத்திலேயே  உள்ளது. தானும் கலந்து கொண்ட, நாக்பூரில் நடைபெற்ற உயர்மட்ட விசேஷ நிகழ்ச்சியில்  இன்றைய பெருந்தொழிலதிபர் அதானி யோகா செய்து காண்பித்தார் என்று குறிப்பிடும்போது தான் எல்லாமே புரிகிறது.

 இராமனின் பெயரைக் கூறி ராவண ராஜ்யம் நடத்துவதாகக் குற்றம்சாட்டும் அதே வேளையில், பாபர் மசூதி இடிப்புக் கலவரம் உட்பட எந்த  கலவரங்களி லும் எந்த மேல் சாதியினரும் வசதி படைத்தவர்களும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை யும், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழைகள், அதிலும் குறிப்பாக தலித்துகள் தான் அதி கம் என்ற இரகசியத்தையும் ஆசிரியர் அம்பலப்படுத்து கிறார். சத்திரிய வாரிசுகளை உருவாக்க ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும் வழிமுறை என்று இப்புத்தத்தில் குறிப்பி டப்படும் செயல் நாகரிக உலகம் ஏற்கவே முடியாத அநியாயமான செயலாகும். மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி அரசைத் தகர்க்க சங்பரிவார் முயற்சியில்  தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள் முதலான வர்களின் கூட்டமைப்பைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பெருஞ்சதி எப்படிச் செயல்படுத்தப்பட்டது என்பதும், இடதுசாரிகளை தகர்க்க ஆர்.எஸ்.எஸ் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறது என்பதும் இந்நூல் மூலம் தெளி வாகிறது.    10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை இடதுசாரி ஆட்சியிலிருந்து விடுதலை செய்யும் திட்டங்கள் பற்றி யும் அவற்றில் வெற்றி பெற்றதையும் பதியும்போது தமிழ்நாட்டிலும் அதற்கான திட்டம் உருவாகி உள்ளதை அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளில் இருந்து உணர்ந்தறிந்து கொள்ளலாம். புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும், அரு வருப்பான முறையில் நாசகர பாசிச சக்தியைப் பற்றிய உண்மையான தகவல்களின் தொகுப்பாகவே உள்ளது.  

ஆர்எஸ்எஸ்  பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்தப் புத்தகம் விளக்கமாக விடை தருகிறது. உயர்ஜாதிச்  செல்வந்தர்களை மட்டும்  பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம், நமது சமூகத்தின் ஒவ்வொரு பகுதி களிலும் நுழைந்து முன்னேற முயலும் போது, அதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதைத் திட்டமிடவும், அவ்வாறு திட்டமிட்டு சங் பரிவார் பாசிச சக்தியைத் தடுத்து நிறுத்தி வீழ்த்தும் களப்போராட்டங்களை முன்னெடுக்கவும் உதவும் வகையில் தமிழில் இப்புத்தகம், ‘நரக மாளிகை’ என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளது.  மிகச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சுதீஷ் மின்னி நேரடி யாகத் தமிழில் எழுதியதைப் போன்ற உணர்வை, வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், தங்களது இயக்கம் மற்றும் இயக்க நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குள் சந்தே கம் ஏற்படும் போதெல்லாம் தன்னைத்தானே உறு திப்படுத்தும் விதமாக சுயமாக உறுதிமொழியேற்கும் கவிதை வரிகளைத் தடுமாற்றம் இல்லாத தமிழில் மொழியாக்கிப் புத்தகத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளதே அதற்கொரு சிறந்த உதாரணம். 

“துன்பம் மிகுந்த இடைஞ்சல்களே யானாலும் 
கைவிடேன் இந்தப் பாதையை 
போகாதெந்தன் கால்கள் வேறொரு பாதையில்” 
“பகையும் வெறுப்பும் நஞ்சும் கலந்த
கொடிய முட்கள் தாக்கும் போதும் 
போர்க்களங்களில் சூடான குருதி ஒழுகும் போதும்
கைவிட மாட்டேன் இந்தப் பாதையை”

உடலியல் முறையிலும் உளவியல் முறையிலும் ஆர்.எஸ்.எசை ஏற்றுக் கொள்வோரை, அவ்வமைப்பின் அடிமை போன்ற மனநிலையில் தக்கவைத்துக் கொள் ளும் முறைகளை ஹிட்லரின் நாசிப்படைகளோடு மட்டுமே ஒப்பிட முடியும். மனசாட்சியுடைய எத்தனையோபேர் சுதீஷ் மின்னி யைப்  போல், களங்கமற்ற சிறுபருவத்தில் ஆர்.எஸ்.எஸ் என்னும் பொறியில் அகப்பட்டு, பின்னாளில் அதன் பித்தலாட்டங்கள் அம்பலப்பட்டு, இது ஒரு மனிதாபி மானமற்ற இயக்கம் என்று புரிந்தும், அதிலிருந்து வெளியேறவழி தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள். அந்த நரக மாளிகையிலிருந்து வெளியேறிய வேறு சிலரும்கூட, பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம டைந்திருக்கிறார்களேயொழிய, அதில் தங்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களை பொது சமூகத்து டன் பகிர்ந்துகொள்ள யாரும் முன்வரவில்லை.    சுதீஷ் மின்னியின் வலிமிகுந்த உணர்வுகளை தமிழில் நல்ல தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை யில் சதாசிவன் (தக்கலை சதன்) அதே உணர்வில் தமிழாக்கம் செய்து தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.  உலகில் மத அடிப்படையில் ஆட்சி நடக்கும் அனைத்து இடங்களும் நரக மாளிகைகளாகவே இருந்து வருகின்றன. இது வரலாற்றுச் சான்றுகளு டன் நிரூபணமான ஒன்று.  நமது நாடும் அவ்வாறு மாறா மலிருக்க இந்தப் புத்தகத்தை ஒரு கையேடாக அனைத்து நல்லுள்ளங்களிடமும் கொண்டு சேர்ப்போம். தற்போதைய சூழ்நிலையில் இப்புத்த கத்தின் தேவைகள் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே  உள்ளன.
 

;