articles

img

பொது முடக்கம் கற்றுத் தரும் பாடம்...

2020 மே 20. சரக்கு ரயில் ஏறி 16 பேர் சாவு என்ற செய்தி வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், மேற்படி கொடுமை நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குடும்பம்,தண்டவாளம் முழுவதும், ரத்த வெள்ளத்தில் நாசமானது. ரயில் இல்லை, பேருந்து இல்லை. பிழைக்கப் போன இடத்தில் உணவுக்கும் கூட வழியில்லை. எனவே முதல் நாளில் 45 கி.மீ தொலைவு நடந்த சோர்வில்ரயில் தண்டவாளத்தில் ரயில் வருவதில்லையே என்ற நினைப்பில் படுத்தவர்கள் 16 பேரும் பிணமாகினர். 

இதில் கொடுமை என்ன வென்றால், அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கூட கடந்த 11 மாதங்களாக அளிக்கப்படவில்லை.  மகாராஷ்டிரா மாநில அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியரும், ம.பி. அரசும் மேற்படி குடும்பத்தில் எஞ்சியோரை அலைக்கழிக்கிறது. நிவாரணம் கூட முழுமையாக பெற வழி ஏற்படுத்தாத அரசு தான் பாஜகவுடையது. கடந்தமார்ச்,30 2021 ‘தி குயிண்ட்’ என்ற இணைய இதழ் இது குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. விதவையாக எஞ்சிய பெண்களுக்கு விதவை பென்சன் பெறுவதற்கும், சான்றிதழ் இல்லாத காரணத்தால் தாமதமாகிறது. இவ்வளவு துயரங்களுக்கு பின்னரும் மத்திய தொழிலாளர் துறையில், புலம் பெயர் தொழிலாளர் குறித்த எண்ணிக்கை, உள்ளிட்டவிவரங்கள் இல்லை என்பதே அந்த செய்தி.கடந்த ஓர் ஆண்டு காலமாக புலம் பெயர் தொழிலாளர்களின் அவலம் குறித்து நடந்த விவாதங்கள் குறித்து துளி அளவும் பாஜக ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.

மிக அதிக வேலையிழப்பு

அதேபோல் பொது முடக்கம் காரணமான உற்பத்தி முடக்கம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. உலகில் மிக அதிக வேலை இழப்பு கொண்ட நாடாகஇந்தியா இருந்தது. எனவே வருமானக் குறைவும், அதன்காரணமான  இதர பாதிப்புகளையும் தொழிலாளர் குடும்பங்கள் சந்தித்தன. அதாவது தனி நபர் வருமானம்44 சதம்ஏப்ரலில் குறைந்தது, மே மாதத்தில் 39 சதமும் ஜூன்மாதத்தில் 25 சதமும் குறைந்ததாக  ஆய்வுகள் கூறுகின்றன. மொத்தத்தில் கடந்த ஆண்டு 5.4 சதம் தனிநபர் வருமானம் குறைந்துள்ளது. மூன்று மாதங்கள் வருமான இழப்பை சந்தித்த தொழிலாளர் குடும்பங்கள் எந்த வகையில் சத்தான உணவு வகைகளை உட்கொண்டிருக்க முடியும்? நோய் எதிர்ப்பு வலிமையை பெற்று இருக்க முடியும்? இப்போது கொரோனா இரண்டாவது அலை, கொடூரமாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரைத் தாக்குவதற்கு காரணம், மேற்படி வருமான இழப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு ஆகும். இதை கணக்கில் கொண்ட காரணத்தால் தான் சி.ஐ.டி.யு உள்ளிட்ட மத்தியதொழிற்சங்கங்கள் தொடர்ந்து ரூ.7,500 மூன்று மாதங்களுக்கு தொழிலாளர் குடும்பங்களுக்கு மத்திய பாஜக அரசு நிவாரணமாக வழங்க வலியுறுத்தி போராடின. இப்போதும் இந்த கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்துகின்றன.

கார்ப்பரேட் லாபம் அதிகரிப்பு

மற்றொரு புறம் இந்தியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் 2020ம் ஆண்டுக்கான லாபம் 2390 கோடி ரூபாய் அடைந்ததாக எக்கனாமிக் டைம்ஸ் கூறுகிறது. அதாவது தொழிலாளர் வருகையில் எவ்வளவு சிரமங்கள் இருந்தபோதும், தொழிலாளர்கள் 90 முதல் 92 சதம் உற்பத்தியை நிறைவு செய்ததாகவும் கூறுகிறது. அதேபோல் மாருதி சுசுகிநிறுவனம்  மூன்றாவது காலாண்டில் 1941.4 கோடி ரூபாய்லாபம் ஈட்டியதாக 2020 டிசம்பரில் தெரிவித்து உள்ளது.அதேபோல் பொது முடக்க காலத்தில் முகேஷ் அம்பானிக்குஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி வருவாய் கிடைத்துள்ளது (24 சதம் இந்தியர்கள் 3000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தை கொண்டிருந்த காலம் இது). இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் சொத்து மதிப்பு 35 சதம் உயர்ந்ததாகவும் ஆக்ஸ்பாம் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேற்படி இரு காட்சிகளும் இந்திய ஆட்சியாளர்களின் பாரபட்சமான கொள்கையை அம்பலப்படுத்துகிறது.  பாஜகஆட்சி இந்திய பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று அவர்களின் சொத்து குவிப்பை அதிகரித்துள்ளது. நிச்சயமற்ற வியாபார சூழல் உள்ள நிலையில்- கொள்வாரும் இல்லை (வாங்கும் சக்தி குறைவு); கொடுப்பாரும் இல்லை என்ற நிலையில்- அரசின் கொள்கை உதவாமல் இத்தகைய சொத்து குவிப்பு சாத்தியமல்ல. உணவு, மருந்து, போன்ற அத்தியாவசிய தேவைகளை வாங்க சக்தி இல்லாதநாட்டில், எப்படி கார்கள் வாங்க முடிந்தது? வங்கி கடன் உதவிகளையும், ஏற்றுமதிக்கான சலுகைகளையும் அரசு செய்யாமல் மேற்படி முதலாளிகள் வளர்ச்சி பெற்றிருக்கமுடியாது. 

சிறந்த வழி எது?
‘நாடுகளின் செல்வம்’ எனும் ஆடம் ஸ்மித் நூலை எழுதிய போது வேலைப் பிரிவினை செல்வக் குவிப்பிற்கு முக்கியப் பங்காற்றியதாக கூறினார். ஆடம் ஸ்மித்தின் இந்த கருத்தை சற்று விமர்சன கண்ணோட்டத்தில் எதிர் கொண்ட காரல் மார்க்ஸ், செல்வத்தை பகிர்ந்தளிப்பது குறித்துபேசினார். சுரண்டலை ஒழிக்க சோசலிசமே மாற்று என்றஉண்மையை வெளிக் கொணர்ந்தார். இரண்டுக்கும் இடையில் நலத்திட்ட அரசு என ஜே.எம்.கீன்ஸ் பேசினார். உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகள் சுரண்டலையும், கொள்ளை லாபத்தையும் ஆதரிக்கிற காரணத்தால், பெரும்பாலான வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் கொரோனா காலத்தில், முடங்கிய பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமல் திணறுகின்றன. மாறாக சோசலிச நாடுகள் குறை
வான எண்ணிக்கையில் இருந்தாலும், தொடர் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதைப் பார்க்க முடிகிறது. எனவேசெல்வ குவிப்புக்கு பதிலாக செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவது என்ற காரல் மார்க்ஸ் தத்துவம் தேவைப்படுகிறது.

தொடர்ந்து 44 ஆண்டுகளாக சரிவே இல்லாமல் சென்று கொண்டிருந்தது சீனப் பொருளாதாரம், தற்போது இந்த கொரோனா பாதிப்பு காலத்திலும், 2.1 சத வளர்ச்சி எனசீன பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வியட்நாம் பொருளாதாரம் 2019ல் 7சதம் என்ற நிலையில் இருந்து, 2020ல் 6.8 சதம் என சிறு சரிவை சந்தித்துள்ளது. வடகொரியா, கியூபாவும் கூட சிறு அளவில் முன்னேற்றத்தையே அடைந்துள்ளது. ஆனால் முன்னரே குறிப்பிட்டதைப் போல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளன.

உலகில் எட்டாவது பெரிய பணக்காரர், இந்தியாவின் முதல் பெரும் பணக்காரராகியுள்ளார் முகேஷ் அம்பானி. அதானி இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். ஆய்வாளர் அனஸ் ரஹ்மான் ஜூனைய்டு என்பவர், விரைவில் அமெரிக்காவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவில் கூடுதல் எண்ணிக்கைஉருவாகலாம் என்கிறார். இந்தியா நேரு பிரதமராக இருந்தகாலத்தில், கலப்பு பொருளாதாரம் என்ற பெயரில் நலத்திட்டநடவடிக்கைகளை மேற்கொண்டது. இப்போது மோடி தலைமையிலான அரசு, நலத்திட்ட நடவடிக்கைகளை கைவிட்டு, முதலாளித்துவ கொள்ளை லாபத்திற்கு வழி வகுக்கிறது. உலகம் முழுவதும் கேடுகெட்ட முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்துகிற காரணத்தால், நலத்திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, மக்களின் மொத்த பொதுச் சொத்துக்களையும், கொள்ளை அடிக்கவும் பெரு முதலாளிகளுக்கு அனுமதிக்கிற வகையில், பாஜக ஆட்சி இந்தகோவிட் பாதிப்பு காலத்தையும், பொது முடக்க காலத்தையும் பயன்படுத்துகிறது.
அதைவிடவும் கொடுமையானது, தில்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் 2013 க்கு பின் புதிதாக ஒரு அரசு மருத்துவமனை கூட திறக்கவில்லை என்பதாகும். தில்லியில் 16 மருத்துவமனைகளுக்கு திட்டமிட்டு பணிகள் துவங்கியும், ஒன்றைக்கூட கட்டி முடிக்கவில்லை. தமிழகத்தில் அரசுமருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், சற்று பரவாயில்லை. ஆனால் கிராமப் புற மற்றும் நகர்புற  சுகாதார மையங்களை மேம்படுத்த வேண்டிய தேவையை எச்சரிக்கையாக கொரோனா காலம் சுட்டிக்காட்டுகிறது. 

எனவே மாற்றத்திற்கான பாதை சமத்துவத்தை நோக்கியேஇருக்க முடியும். அதற்கு முன்னால் ஜனநாயகம், சட்டம்ஆகியவைகளின் முன் அனைவரும் சமம் என்பதைநிலை நாட்ட போராடியாக வேண்டும். அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதையே கொரோனாவின் ஓராண்டு காலம் நமக்கு போதிக்கும் பாடமாகும்.

கட்டுரையாளர் :எஸ்.கண்ணன், சிஐடியு, மாநில துணை பொதுச் செயலாளர்

;