மடக்கி எடுத்துச்செல்லும் மருத்துவமனை
நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அவசர அறுவைச்சிகிச்சையை நடத்தும் வசதியுடன் இடம் விட்டு இடம் மடக்கி எடுத்துச்செல்லக்கூடிய மருத்துவமனையை இந்தியா உருவாக்கியுள்ளது. நீரால் பாதிக்கப்படாத மிகச்சிறிய 72 கன சதுரங்களை அடித்தளமாக கொண்ட இந்த மருத்துவமனையை பேரிடர் நிகழ்ந்த இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச்செல்லலாம். கண்ணாடிக் கதவு போடப்பட்ட ஒரு புத்தக அலமாரியில் நூல்களை அடுக்குவதை விட குறைவான நேரத்திற்குள் இந்த மருத்துவமனையை நிறுவிவிடலாம்.
உயிர் காக்கும் உடனடி உதவி
ஒவ்வொரு கன சதுரமும் 15 கிலோகிராம் எடையுடையது. இதன் அளவு 38X38X38 செண்டிமீட்டர். கூடாரங்கள் மற்றும் மருத்துவ உபகரனங்களுடன் இந்த கன சதுரங்களை தொலைதூரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நடந்த மண்டலங்கள் அல்லது இடங்களுக்கு கொண்டுசெல்லலாம். ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டரில் இருந்து கீழே போட்டாலும் சேதமடையாத அளவு இவை கனம் உடையவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் காயங்களை குணப்படுத்துவதற்கும் உயிர் காக்கும் அவசர அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் தயாரான நிலையில் ஐந்து பயிற்சி பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மருத்துவமனையை ஒரு மணி நேரத்திற்குள் எழுப்பிவிடலாம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருநூறு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கமுடியும். உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் தொலைதூர மற்றும் சென்றடைய முடியாத இடங்களில் இந்த மடக்கி எடுத்துச்செல்லும் மருத்துவமனை ஒரு உயிர்காக்கும் வசதியாக அமையும் என்று நம்பப்படுகிறது. மாரடைப்பு, வலிப்பு நோய், மூளை மற்றும் நரம்புகளுக்கு இடையிலான தொடர்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகும் உடல் நலக் கோளாறுகளை குணப்படுத்த உதவும் மயக்க மருந்துகளும் இங்கு உள்ளன. ஆரோக்கிய மைத்ரி (Aarogya Maitri) என்று பெயரிடப்பட்டு சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் ஒரு சிறிய அவசர மருத்துவ உதவி சிகிச்சைப் பிரிவு, ஒரு அறுவைச்சிகிச்சைக் கூடம், இடம் விட்டு இடம் எடுத்துச்செல்லும் எக்ஸ் கதிர் கருவிகள், மீ ஒலி உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற வசதிகள் உள்ளன. நீர் வசதி மற்றும் சமையலுக்கு அவசியமான மின்சாரம் உட்பட மருத்துவமனை இயங்கத் தேவையான மின்னாற்றல் முழுவதும் சூரிய மின் பலகைகளில் இருந்து பெறப்படும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி இயங்குகிறது. இந்த கண்டுபிடிப்பு குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு பெரிதும் பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
10 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சைக்கூடம்...
கன சதுரங்களின் பல்துறை பயன்பாடு, அவை எவ்வாறு ஒருங்கிணைக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலை இந்த மருத்துவமனையை வடிவமைத்த ஹெச் எல் எல் லைஃப் கேர் (HLL Lifecare) என்ற அரசு நிறுவனம் வழங்கியுள்ளது. “பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க உதவும் அறுவைசிகிச்சையை செய்வதே இந்த புதிய மருத்துவமனையின் முதல் குறிக்கோள். இதற்கு ஆதாரமான அறுவைச்சிகிச்சைக் கூடத்தை பத்து நிமிடங்களுக்குள் அமைத்துவிடலாம். மருத்துவமனையின் மற்ற பிரிவுகளை உண்டாக்கத் தேவையான கன சதுரங்களை நிறுவுவதற்கு முன்பே அறுவைச்சிகிச்சையை மருத்துவர்கள் முடித்துவிடுவர்” என்று ஹெச் எல் எல் லைஃப் கேர் நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் அங்கிதா ஷர்மா (Dr Ankita Sharma) கூறுகிறார்.
தேவைக்கேற்ப பயன்படும் கன சதுரங்கள்
இத்தகைய ஒரு மருத்துவமனையை உருவாக்க அறுபது கன சதுரங்கள் அவசியம் என்றாலும் எடுத்துச்செல்லப்படும் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மீதியுள்ள 12 கன சதுரங்களை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தலாம். நிலநடுக்கம் நடந்த இடத்தில் எலும்பு முறிவுகள் அதிகம் இருக்கும். அப்போது வீரர்களுக்கு துப்பாக்கிக் குண்டுகளுக்கும் வெடிகுண்டுக் காயங்களுக்கும் சிகிச்சை செய்ய உதவும் பகுதிகளுக்கு உரியவற்றிற்கு பதில் எலும்பு முறிவு சிகிச்சைக்குரிய கன சதுரங்களை எடுத்துச்செல்லலாம். மருத்துவர்கள், ராணுவத்துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் ஓராண்டு காலம் கலந்தாலோசனைகள் நடந்து மருத்துவமனைக்குரிய வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. புற நோயாளிகள் பிரிவில் சிறிய கன சதுரங்களில் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்ட மினி எக்ஸ் கதிர் கருவி உள்ளது. மருத்துவமனை ஒரு ஹெலிகாப்டரால் எடுத்துச்செல்லக்கூடிய விதத்தில் சிறியதாக இருக்கவேண்டும். இதற்காக மருத்துவமனை சிறிதாக, குறைந்த எடை உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் சிறியதாகவும் எடை குறைவானவையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்போதுதான் மருத்துவமனையை மடக்கி உடனே வேறு இடத்திற்கு சுலபமாக எடுத்துச்செல்லமுடியும். சவாலாக இருந்த எக்ஸ்கதிர் கருவி... எக்ஸ் கதிர் கருவியை சிறிதாக வடிவமைப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அவ்வாறு செய்த பிறகும் அதன் தட்டு சிறிய கன சதுரத்திற்குள் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அது சிறிய வடிவில் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டது. கன சதுரங்கள் நீரால் பாதிக்கப்படாதவை. அரிமானம் அற்றவை. ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களில் இருந்து கீழே போடப்பட்டு இவற்றின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டது. கன சதுரங்களை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் பிழைகளை குறைக்க, உரிய உபகரணத்திற்கு பதில் வேறு ஒரு உபகரணம் ஒரு கன சதுரத்தில் தவறாக வைக்கப்பட்டால் அதை எச்சரிக்கை செய்யும் அலாரம் ஆகியவற்றுடன் உள்ள நிரலி வசதியுடைய ஒரு மடிக்கணினி மற்றும் சுலபமாக பொருட்கள் இருக்கும் கன சதுரங்களை அறிய உதவும் ஒரு செயலியும் மருத்துவமனைப் பொருட்களுடன் உள்ளன. கன சதுரங்களின் பயன்கள், அவற்றின் காலாவதி தேதி, அவை அவசரத்தேவைக்காக எப்போது மாற்றப்படவேண்டும் போன்ற விவரங்களையும் இந்த செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். “இந்தியாவில் இந்த வகையில் உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனை இதுவே” என்று ஷர்மா கூறுகிறார். இந்த மருத்துவமனையை அமைக்க உதவும் கன சதுரங்கள் ஸ்ரீலங்கா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் வாழும் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளுக்கும் பேரிடர் நிகழும் இடங்களுக்கும் சென்று உடனடி மருத்துவ சேவை செய்யும் இந்த புதிய வசதி மருத்துவத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.