articles

img

எப்போதும் கம்யூனிஸ்டுகள் முன்வரிசையில் இருப்பார்கள்....

இடுவாய் மக்களின் அமோக ஆதரவுடன்இரண்டாவது முறையாக (2001) ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றி வந்த கே.ரத்தினசாமி 2002 மார்ச் 13 அன்று, படுகொலை செய்யப்பட்டுகிடந்த காட்சியை பார்த்த யாரும் வாழ்நாளில்எப்போதும் மறந்துவிட முடியாது. அவ்வளவு வெறித்தனமாக உடலை சிதைத்துக் கொல்லப் படும் அளவுக்கு அவர் செய்த குற்றமென்ன? எட்டு காரணங்களை கொலையாளிகள் பட்டியலிட்டுச் சென்றிருந்தனர். 

“முதல் முறை கொலை முயற்சியில் தப்பியது, பஞ்சாயத்து தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது, சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது, சாதி ஆதிக்ககும்பலை அனுசரித்துப் போகாதது, கம்யூனிஸ்ட்டாக இருப்பது” என ரத்தம் தோய்ந்த எழுத்துகளில், அச்சுறுத்தும் அந்த பட்டியல் இருந்தது. இடுவாய் கிராமத்தின் சாதி ஆதிக்க பிற்போக்கு சக்திகள் “மக்கள் முன்னணி” என பெயர் வைத்து அவரை எதிர்த்து நின்றனர். ரத்தினசாமி தலைமையில் கம்யூனிஸ்டுகள் தனித்து நின்றனர். ஆனால் தனித்துவிடப்படவில்லை. உண்மையிலேயே மக்களுடன் கூட்டணி அமைத்திருந்த கம்யூனிஸ்டுகள் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றனர். ரத்தினசாமியின் ஜனநாயகப்பூர்வ, மக்கள் ஆதரவு செயல்பாட்டால் தங்கள் ஆதிக்க, அதிகாரம் தகர்ந்து போவதைத்தான் எதிரிகளால் சகிக்க முடியவில்லை. அவரை கொல்வதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தலாம் என திட்டமிட்டு படுகொலை செய்தனர். ஆனால் அவரது தியாகம் வீண் போக வில்லை.ரத்தினசாமி படுகொலைக்குப் பின் நடைபெற்ற மூன்று உள்ளாட்சி தேர்தல்களில் பல்வேறுதில்லுமுல்லுகள் செய்து அதிமுக சார்பானவர்கள் பதவியில் அமர்ந்தனர். எனினும் செங்கொடி இயக்கம் துவண்டு விடவில்லை. எப்போதும் போல் மக்களுடன் மக்களாக இரண்டறக் கலந்து தங்கள் பணியைத் தொடர்ந்தது. அது வீண் போகவில்லை. 18 ஆண்டுகளுக்குப் பின் 2020ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கணே சன் மிகப்பெருவாரி வாக்குகளுடன் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். 

இடுவாய் கிராமத்து ஆதிக்க சக்திகள் பட்டியலிட்ட ஜனநாயகத்துக்கு எதிரான, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிரான, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கொண்ட படுபிற்போக்கான கொள்கைகள்,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், இப்போது இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாசிச அச்சுறுத்த லாக தலைதூக்கி நிற்கிறது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தமிழகத்தில் எப்படியாவது கால் பதித்துவிட வேண்டும்என, பாரதிய ஜனதா கட்சி வெறித்தனமாக முயற்சிக்கிறது. அக்கட்சியின் தொகுதிகள் பட்டியலைப் பார்த்தாலே, இஸ்லாமிய சிறுபான்மை யினர் குவிமையமாக இருக்கக்கூடிய பகுதிகள், உணர்ச்சியைத் தூண்டிவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினை அரசியலை விதைக்க வாய்ப்புள்ள பகுதிகள் என தேர்ந்தெடுத்துப் போட்டியிடுவதைக் காண முடியும். 

தமிழகத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக, சமூகநீதிப் பாரம்பரியத்தை சிதைப்பதற்கு எத்தகைய சீர்குலைவுக்கும் தயாராக இருக்கும் அபாயத்தையே இது குறித்துக் காட்டுகிறது. எனவே அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஜனநாயகத்தைக் காக்கவும், மக்களின்வாழ்வுரிமையைக் காக்கவும் பிற்போக்குத் தனத்துக்கு எதிராக, சமரசமற்ற, விடாப்பிடியான போராட்டத்தைத் தொடர வேண்டியதின் அவசியத்தை தோழர் கே.ரத்தினசாமியின் தியாகம் அழுத்தமாக உணர்த்துகிறது. இதில் எப்போதும் கம்யூனிஸ்ட்டுகள் முன்வரிசையில் இருப்பார்கள்!

;