articles

img

சோழிங்கநல்லூரின் மறுபக்கம்-ப.ஜெயவேல்

தமிழகத்தின் அதிக வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த கேந்திரமான பகுதியாக உள்ளது. அதேபோன்று பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், தனி வீடுகள், தனியார் விடுதிகள். பொழுதுபோக்கு ரெசார்ட்டுகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் என நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் அதற்கேற்ற உட்கட்டமைப்புகள் தொகுதியில் இல்லை.

2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோடு  சோழிங்கநல்லூர் தொகுதியின்பெரும்பகுதி இணைக்கப்பட்டது.  13 ஆண்டுகளை கடந்தும்  தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் தனியார் கழிவு லாரிகள் கழிவுகளை எடுக்கும் நிலை  உள்ளது. இதன்காரணமாக அவ்வப்போது மலக்குழி மரணங்கள்  நிகழ்கின்றன. எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும்.

தொகுதிக்குள் பல இடங்களில் இன்றளவும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நிலைதான் உள்ளது. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும் இது தொடர்வது அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியை  உருவாக்கி உள்ளது. ஆகவே, தனியார் கொள்ளயை தடுத்து கட்டணமின்றி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

தொகுதி முழுவதும் பராமரிக்கப்படாத சாலைகளே உள்ளன. மெட்ரோ பணி தொடங்கிய பிறகு பிரதான சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.  உட்புறச்சாலைகள் நடந்து செல்ல கூட லாயக்கற்றதாக உள்ளது. அவற்றை சீரமைப்பதில், சோழிங்கநல்லூர் தொகுதியை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

புறநகர் வளர்ச்சிக்கென்று பட்ஜெட் தோறும் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அதன் பயனை சோழிங்கநல்லூர் தொகுதியில் காண முடியவில்லை. எனவே, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை விரைந்து தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

ப.ஜெயவேல்
சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர்,  சிபிஐ(எம்)