சென்னை, ஆக. 6 - தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை பலி கொடுத்துவிட்டு பாசிசத்தை வீழ்த்த முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
‘தனியார் மயம், ஒப்பந்த முறை எதிர்ப்பு கருத்தரங்கம்’ செவ்வாயன்று (ஆக.6) சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் நடத்திய இந்த கருத்தரங்கில் கே.பாலகிருஷ்ணன் பேசியது வருமாறு:
ஆபத்தான ஒப்பந்த முறை
இந்தியாவை, தமிழகத்தை ஆண்டவர்கள், ஆளுகிறவர்கள் அனைவருமே, தனியார் மயத்தையும், தாராளமயத்தையும், ஒப்பந்த முறையையும் புகுத்துகிற மிக மோசமான நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுத்துறை பணிகள் அவுட்சோர்சிங் (அயல்பணி) முறையில் செய்யப்படுகிறது. மருத்துவர்கள் ஒப்பந்த தொழிலாளியாக மாற்றப்பட்டுள்ளனர். பேராசிரியர்கள் கவுரவ விரிவுரையாளர் என்ற பெயரில் ஒப்பந்த தொழி லாளியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரி யர்கள், செவிலியர்கள் ஒப்பந்த முறையில் நிய மிக்கப்படுகிறார்கள், அரசு மற்றும் பொதுத் துறைகளில் ஒப்பந்த முறை உள்ளது. இனி பணி நிரந்தரமே இருக்காது. அனைத்து பணி களுமே அவுட்சோர்சிங் முறையில்தான் செய்யப்படும் என்று அரசாணைகளை வெளியிடப்பட்டுள்ளது.
கார்ப்பரேட்டுகளுக்கே பலன்
தொழிலாளர்களுக்கு எவ்வித சமூக பாது காப்பும் இன்றி ஒப்பந்த முறை, மதிப்பூதிய முறை, அவுட்சோர்சிங் முறையில்தான் மேற்கொள்ளப்படும் என்றால் உழைப்பாளி வர்க்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக் காது. மன்மோகன்சிங் காலத்தில் தொடங்கி மோடி வரை தனியார்மயம், தாராளமய கொள்கைதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறார்கள். இந்தியா வளர்ந்துள்ளதாக வைத்துக் கொண்டால் கூட அந்த வளர்ச்சி யாருக்கு பயன்பட்டுள்ளது? உழைப்பாளி மக்களுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா?
ஆட்சியாளர்கள் சொல்கிற வளர்ச்சி கார்ப்ப ரேட் முதலாளிகளுக்குத்தான் பயனளித்து ள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உழைப்பாளிகள் சில ஆயிரம் செலவு செய்து திருமணமே நடத்த முடியாமல் திண்டாடும்போது அம்பானி குடும்ப திருமணத்திற்கு 5ஆயிரம் கோடி செலவிடுகிற அளவிற்கு பெருமுதலாளி கள் கொழுத்துள்ளனர். அம்பானியையும், அதானியையும் கொழுக்க வைக்கும் ஆட்சி நடக்கிறது.
140 கோடி கொண்ட இந்திய மக்களுக்கான ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையே 47 லட்சம் கோடி ரூபாய்தான். ஆனால், இந்தியாவில் உள்ள 5 விழுக்காடு பெருமுதலாளிகளின் சொத்து 210 லட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இது எப்படி நிகழ்ந் தது? தனியார்மயம், தாராளமயத்தின் விளைவு இல்லையா? உழைப்பாளிகளின் உரிமை களை, நிரந்தர வேலையை பறித்து, ஊதியத்தை தராமல், ஓய்வு பெற்றால் ஓய்வூதியத்தை தர மறுத்தால் எப்படி பொறுக்க முடியும்?
போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிப்பதா?
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப் பட்டபோது நிதி ஆயோக் கூட்டத்தை முதல மைச்சர் புறக்கணித்ததை பாராட்டுகிறோம். அதேபோன்று உழைப்பாளிகள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படும்போது எப்படி பார்வையாளர்களாக இருப்பார்கள்? அது சாத்தியமா? என்எல்சி-யில் 13ஆயிரம் நிரந்தர தொழிலாளிகள் இருந்த இடத்தில் தற்போது 5ஆயிரம் பேர்தான் உள்ளனர். அதேசமயம் ஒப்பந்த தொழிலாளிகள் 13ஆயிரம் பேர் உள்ளனர். தொழிலாளர்களை சுரண்டிதான் பொதுத்துறையும் கூட லாபம் ஈட்டுகிறது.
பணியமர்த்துகிற அனைவருமே ஒப்பந்த தொழிலாளி என்றால், மக்களின் வாங்கும் சக்தி குறையும். தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சகல உரிமைகளையும் பறிக்கும் இத்தகைய நடவடிக்கையை உழைப்பாளிகள் ஏற்கமாட்டார்கள். போக்குவரத்து துறை, மின்சாரதுறை என எந்த துறையைச் சொன்னா லும் நட்டம் என்கிறார்கள். அரசாங்கம் மக்க ளுக்கு சேவையாற்ற வேண்டும். மகளிர் இலவச பேருந்து, காலை சிற்றுண்டி திட்டம் போன்ற வற்றை வரவேற்கிறோம். அதேசமயத்தில் தொழிலாளி உரிமைகளை பறிக்கலாமா?
தொழிலாளர் இல்லாமல் சாத்தியமா?
12க்கும் மேற்பட்ட துறை, மனித வளக்குறி யீட்டில் பிற மாநிலங்களை விட தமிழகம் முதல்நிலையில் உள்ளது. இதற்கு காரணம் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டும்தானா? தொழிலாளர்களும் ஊழியர்களும் இல்லாமல் இது சாத்தியமா? மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவத்தில் முன்னிலையில் இருக்க முடியுமா? அனைத்தையும் வியாபார நோக்கோடு பார்க்கக் கூடாது.
தொழில் வளர்ச்சி, வெளிநாட்டு மூலதனத்தை எதிர்க்கவில்லை. அதேசமயம் பன்னாட்டு நிறுவனங்களில் அடிப்படையான உரிமை மறுக்கப்படும்போது யார் பக்கம் நிற்கிறீர்கள் என்பதுதான் கேள்வி? தொழி லாளி பக்கம் நிற்பதுதானே மக்கள் நல அரசு? தனியார்மய, தாராளமய, ஒப்பந்த அவுட்சோர்சிங் முறையை கடைபிடித்ததால் அதிமுக அரசு தூக்கி எறியப்பட்டது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
8 மணி நேர வேலைநேரத்தை திருத்தியதை அரசு திரும்பப் பெற்றது. அதை மனதார வர வேற்கிறோம். முதலமைச்சருக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், ஆபத்தான இந்த சட்டம் எப்படி சட்டமன்றத்திற்கு வந்தது? அரசு தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழக தொழிலாளி வர்க்கமும் – உழைப்பாளி மக்களும் நமக்கு ஆதரவாக நின்றார்கள். தனியார்மயம், தாராளமயக் கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும். அவுட்சோர்சிங் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
பட்டதாரிகள் அத்துக் கூலியாக மாறினால்...
பட்டதாரி, என்ஜினியர் 10 ஆயிரம் ரூபாய்க்கும், பேராசிரியர் 15ஆயிரம் ரூபாய்க்கும் வேலை செய்தால் எதிர்கால தமிழகம் எப்படி இருக்கும்? இளைஞர்களுக்கு நல்ல வேலை, ஊதியம் இருந்தால்தான் சந்தைக்கு சென்று பொருளை வாங்க முடியும், உற்பத்தி பெருகி தொழில் வளர்ச்சி ஏற்படும். மாறாக, உரிமைகளை பறித்தால் அத்துக்கூலி யாக மாற்றினால், தேசமே பாதிக்கப்படும்.
நவீன தாராளமயக் கொள்கைதான் சங்கம் வைக்கும் உரிமையை, வேலைநிறுத்த உரிமை யை பறிக்கிறது. இதற்கெதிராக நாடு முழுவதும் உழைப்பாளி மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
சமூக நீதிக்கு ஆபத்து
சமூக நீதியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. உழைப்பாளிகளின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டால், ஒப்பந்த முறை இருந்தால் சமூக நீதி நிலைநாட்ட முடியுமா? அவுட்சோர்சிங் செய்தால் அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும்? எனவே, பாஜக போன்ற அரசுகள் சமூக நீதியை சீரழிக்க ஒப்பந்த முறையை, தனியார்மயத்தை திட்டமிட்டு திணிக்கின்றன. சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பும் ஒப்பந்த, அவுட்சோர் சிங் முறையை தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதி களையும் வென்றோம். பாஜகவை முற்றிலும் துடைத்தெறிந்துள்ளோம். பாஜகவை வீழ்த்து கிற போராட்டத்தில் ஒன்றிணைந்து நிற்போம். அதேசமயம் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை கள் பாதிக்கப்படுகிறபோது, பறிக்கப்படுகிற போது அமைதி காக்க முடியுமா? போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், அக விலைப்படி, ஓய்வூதிய பலன்கள் மறுக்கப்படு கிறபோது தொழிலாளர்களின் பக்கம் உறுதி யாக நிற்போம்!
மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்.
தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை பலிகொடுத்துவிட்டு பாஜகவை எதிர்த்த போராட்டம் பலம் பெறாது. இந்துத்துவா சக்தி களை வீழ்த்த தமிழகத்தின் உழைப்பாளி வர்க்கம்தான் முன்னணிப் படை. உழைப்பாளி கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி போராடுகிற போது மார்க்சிஸ்ட் கட்சி அதற்கு முன்னணிப் படையாக இருக்கும்.
முதல்வர் நிறைவேற்ற வேண்டும்!
முதலமைச்சரிடம் பலமுறை போக்கு வரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். முதலமைச்சர் கோரிக்கைகளை மறுக்கவில்லை; உரிய காலம் வரட்டும் என்றுதான் கூறுகிறார். நிச்சயம் நிறை வேற்றுவேன் என்று கூறியுள்ளார், இதற்கு உரிய காலம், சூழ்நிலையை முதலமைச்சர் உருவாக்குவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மதிமுக பொருளாளர் மு.செந்தில் அதிபன், விசிக துணைப்பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டு பலர் பேசினர்.