articles

அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்... 1ம் பக்கத் தொடர்ச்சி

சீர்திருத்தங்கள் எனும் பெயரால் கொண்டுவரப்படும் சட்டங்கள் உண்மையில் விவசாயிகளுக்கும், விவசாயத்தை நம்பியிருக்கும் மக்களுக்கும் எதிரானவை என்பது மட்டுமின்றி கார்ப்பரேட்டுகள் வசம் விவசாயம் அடகுபோனால் விவசாயத்தை நம்பியுள்ளவர்கள் மேலும் ஓட்டாண்டியாவார்கள். மோடியின் ஒரு நாடு, ஒரு சந்தை நுகர்வோருக்கு பயன்தராது. சீர்திருத்தம் என்று சொன்னால் உடனே கம்யூனிஸ்டுகள் கூச்சல் போடுவார்கள் என ஒரு விமர்சனம்முன்வைக்கப்படுகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை சீர்திருத்தம் என்று சொல்கிற போது அது எந்த வர்க்கத்தினரின் நலன்களுக்கானவை என இயல்பான கேள்வியிருந்து தான் நிலைபாட்டை எடுக்கிறார்களே தவிர சீர்திருத்தங்களை கண்மூடித்தனமான எதிர்ப்பவர்களல்ல கம்யூனிஸ்டுகள் என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பட்டினியில் மக்கள் 
சீர்திருத்தம் என்ற பெயரால் விவசாய திருத்தச் சட்டங்களை அரசு முன்மொழிகிற அதே வேளையில் தான், உலக அளவில் ஊட்டச்சத்து குறைவாககிடைப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களின் அளவு 19 கோடி ஆகும். மேலும்
உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியா மிகவும்கீழ்நிலையின் தான் உள்ளது.  உலக அளவிலான ஊட்டச்சத்து உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகளின்  பட்டியலில் 130 நாடுகளில் இந்தியாவிற்கான இடம் 114 ஆகும். ஊட்டச்சத்து குறை
பாட்டால் ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகிறபோது மொத்தம் பட்டியலிடப்பட்டுள்ள 187 நாடுகளில் இந்தியா 170வது இடத்தில் உள்ளது. கர்ப்பிணி பெண்களில் 50% பேரும், குழந்தைகளில் 60% பேரும் இத்தகைய ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவை எப்படி ஒரு வளர்ச்சியடைந்த நாடாக கொள்ள முடியும். ஏற்கனவே நிலைமை இப்படியிருக்க, விவசாய சீர்திருத்தம் என்ற பெயரால் மேலும் நிலைமைகள் சிக்கலுக்குள்ளாவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஏழைகளுக்கு உணவென்பது கனவாகவும், நடுத்தர மக்களுக்கு தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் மீதான கடுமையான விலையேற்றம் ஆகியவையே விவசாய திருத்தச் சட்டங்களின் விளைவுகளாக இருக்கப் போகின்றன.

நெருக்கடியில் ஜனநாயகம்
தற்போது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மிகவும் சுருக்கப்பட்டு, ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கிறது. பொதுவாக நமது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரத்தை பொறுத்து ஜனாதிபதியோ, அல்லது மாநில ஆளுநர்களோ ஒரு அவசர சட்டத்தை அமைச்சரவையின் பரிந்துரையின் படி பிறப்பிக்க முடியும். ஆனால் இத்தகைய அவசர சட்டங்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவையாகும். நேரு பிரதமராக இருந்த போது அன்றைய சபாநாயகர் மாவ்லங்கர் அவசர சட்டங்களென்பது ஜனநாயக உரிமைகளை பறிப்பதாகும் என கடுமையாக எச்சரித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகள் அன்றிலிருந்து இன்று வரையிலும் தொடர்ந்து இத்தகைய அவசர சட்ட முயற்சிகளை எதிர்த்தும், எச்சரித்தும் வருகிறார்கள். 
ஆனால் மோடி பிரதமரானதற்கு பிறகு இதுவரையிலும் மொத்தம் 31 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய அவசரச்சட்டங்களெல்லாம் நாடாளுமன்ற நிலைக்குழுக் களின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவைகளாகும். அவசரச் சட்டங்கள் நேரடியாக நாடாளுமன்ற அவைகளுக்கு விவாதங்களுக்கு வந்தாலும் தங்களுடைய பெரும்பான்மையை பயன்படுத்திநிறைவேற்றப்பட்டுவிடும். இது மிகவும் மோசமான ஒரு நடைமுறையாகும். இத்தகைய அவசரச் சட்டங்களை பிறப்பிக்கும் நடைமுறையென்பது உலகத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் தான் நடைமுறையில் உள்ளது. இந்த தேசங்களை ஆட்சி செய்த பிரிட்டிஷ்நாட்டிலும் கூட இத்தகையதொரு நடைமுறை இல்லை.  நாடாளுமன்றத்தைக் கூட்டித்தான் சட்டங்களை பிறப்பிக்க முடியும். இப்படியாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் புறக்கணித்து அவசரச் சட்டங்களின் மூலமே ஒரு ஆட்சி நடைபெறுமெனில் எதற்காக தேர்தல்களை நடத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். கடந்த ஜூன் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட விவசாயம் தொடர்பான அவசரசட்டங்கள்,  நாடாளுன்றத்தில் போதுமான விவாதங்களின்றியும், முறையான வாக்கெடுப்புமின்றியும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்விக்குள்ளாகும் நீதி 
ஒருபுறம் அரசு சீர்திருத்தங்கள் என்ற பெயரால் தொழிலாளர் – விவசாயி வர்க்கங்களின் மீது மிக மூர்க்கமான தாக்குதல்களை தொடுக்கிறபோது, அதற்கு இசைவான முறையிலேயே நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. பொதுவாக ஒரு அரசு
முற்போக்கு திசைவழியில் செயல்படுகிறபோது தான் நீதிமன்றங்களும் நியாயமாக நடந்து கொள்ள முடியும். மாறாக பெருமுதலாளிகளின் நலன்களுக்காக அரசு செயல்படுகிறபோது, நீதிமன்றங்களும் அவர்களின் வர்க்க நலன்களை
பாதுகாப்பதையே பிரதானமாகக் கொண்டிருக் கிறது என்பதை நாம் கண்கூடாக தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய நீதிமன்றங்களின் போக்கில் ஒரு மாற்றம் உருவாகியிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களில் நீதிமன்றம் தலையிட்டு, அரசு மற்றும் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை 
நடத்துவதற்கும், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்குமான முறையில் ஒரு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்க பரிந்துரைத்திருக்கிறது. இது அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலை மீறிய ஒரு விந்தையான தலையீடாகும். அதை விட
விந்தையான அம்சமென்பது நீதிமன்றம் பரிந்துரைத்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் அரசின் கொள்கைகளை ஆதரிப்பவர்களே என்பதாகும். மேலும் இக்குழுவில் உள்ளவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதையும்கவனிக்க வேண்டும். ஆனால் நல்வாய்ப்பாகபோராடும் விவசாயிகள் இந்த பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் பேசப்போவதில்லை என உறுதியாக மறுத்திருக்கிறார்கள் என்பது வரவேற்ககூடிய அம்சமாகும்.

எட்டாக்கனியாகும் கல்வி
சென்ற ஆண்டு மார்ச் 20ஆம் தேதியிலிருந்து நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று ஒரு காரணமென்றாலும் கூட இந்த ஆண்டு முழுவதும் நமது மாணவர்கள் கல்வியிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில், இத்தகையநிலை தொடர்ந்தால் சுமார் 20% மாணவர்கள் கல்வியிலிருந்து விலகி விடும் ஆபத்து உருவாகும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள்கல்வியிலிருந்து விலக்கப்படும் அவர்கள்முறைசாரா தொழிலாளர்களாக, கூலியுழைப் பாளிகளாக மாற்றப்படுவார்களென்பதேயாகும். இந்நாட்டின், தமிழகத்தின் முழுமையான நிலைமை என்ன என்பது நமக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும் கூட கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பெரும்பாலானவர்கள் இழக்கப்போகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கப் போகிறது. கற்றவர்களை எதிர்கொள்வதை விட கல்லாதவர்களை மிக எளிதாக மூலதனத்தால் எதிர்கொள்ள முடியும் என குறிப்பிடுவார் மாமேதை மார்க்ஸ். இந்திய முதலாளிகளும்கூட  அத்தையதொரு நிலையை நோக்கித்தான்நகர்கிறார்கள். கல்வியென்பது அனைவருக்கு மானதல்ல. அது ஒரு சாராருக்கானதுதான் என்பதேஉலக மூலதனத்தின் நிலைபாடாகும். உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு என சொல்லப்படும் அமெரிக்காவில் கூட 21% மக்கள், அதாவது 4.3 கோடி மக்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதையும் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனத்தை காப்போம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சாசனம், ஒட்டு மொத்த மக்களுக்குமான கல்வி, உணவு, தனிமனித சுதந்திரம், நீதி என அனைத்து உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் பறிக்கிற மிகமோசமான பாதையில் மோடி அரசு சென்று கொண்டிருக்கிறது. எனவே குடியரசு நாளை கொண்டாடும் இத்தருணத்தில் தேசத்தின் மாண்புகளை, மேன்மை மிக்க நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம் என அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் கம்யூனிஸ்டுகள் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்.

;