articles

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏற்புடையதல்ல!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை  24.08.2024 அன்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் 25 ஆண்டுகள் பணி புரிந்த அரசு ஊழியர்களுக்கு அவர் கடைசியாக பெற்ற 12 மாத சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்குவது; ஓய்வூதியர் இறந்தால், அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்குவது, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்தால் ரூ.10 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, பணிக்கொடை அளிக்கப்படும் எனவும் இத்திட்டம் 01.04.2025 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட;  ஆனால் பாதகமான திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்(RPS), தேசிய (புதிய) ஓய்வூதியத் திட்டத்தின்(NPS) ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமாக உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது.

என்பிஎஸ் (NPS) திட்டத்தில் வரையறுக்கப் படாத ஓய்வூதிய தொகை யுபிஎஸ்(UPS) திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓய்வூதியத்திற்காக ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் நடைமுறை இத்திட்டத்தில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட திலிருந்து, இத்திட்டத்திற்கு மாறாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி சங்கங்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இம்முன்னேற்றம் அமைந்துள்ளது.  ஆனால் அதே வேளையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்திற்காக சம்பளப் பிடித்தம் ஏதும் கிடையாது. ஆனால் யுபிஎஸ் திட்டம் ஓய்வூதியத்திற்காக சம்பள பிடித்தம் செய்வதை நியாயப்படுத்துகிறது. ஓய்வூதியர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதி நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியருக்கு மருத்துவப்படி உள்ளிட்ட பல உரிமைகள் நிரந்தரமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. 

பழைய திட்டம்  மீண்டும் சாத்தியமே!

நாடாளுமன்றத் தேர்தல் வரை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது  என கூறி வந்த ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த பின்ன டைவு மற்றும் எதிர்கால தேர்தல்களை சந்திக்க வேண்டிய அச்சம் காரணமாக இந்த ஒருங்கி ணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான கூட்டுப் போராட்டங்களின் மூலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வருவது சாத்தியமானதே என்பதை இம்மாற்றம் உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான வலுவான போராட்டங்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாகவும், ஜாக்டோ-ஜியோவின் சார்பாகவும் நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே நடைமுறையில் உள்ளது. ஊழியர்களின் பணமும், அரசின் பணமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் திரும்பக் கொண்டு  வரப்படும் என்பது இந்நாள் வரை நிறைவேற்றப் படாமல் உள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த கட்சிகள் தேர்தலில் வென்ற பிறகு இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை, (ஊழியர் சம்ப ளத்தில் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி  ஒழுங்காற்று அமைப்பிடம் (PFRDA) செலுத்தி யதை ஒன்றிய அரசு திருப்பித்தர மறுத்த பின்பும்) அமல்படுத்தியுள்ளன.

புதிய பென்சன் (NPS) திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று கூறி வந்த ஒன்றிய அரசே தற்போது மாற்றங்களை கொண்டு  வந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசும், தான் அளித்த தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்து வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசு, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று  அமைப்புடன் (PFRDA) எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளாததால் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தக் கூடாது.

ஆ.செல்வம், பொதுச் செயலாளர் 
சா.டேனியல் ஜெயசிங் 
மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்