articles

img

போதைக்கு எதிரான போர் தொடரும்

போதைக் கும்பலை எதிர்த்த தௌபீக்

‘போதையற்ற தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு ஒரு கோடி கையெழுத்து பெறும் விழிப்புணர்வு இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது. இந்த இயக்கத்தின் நிறைவு விழா ஞாயிறன்று (ஜூலை 16) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான பொது பிரகடனம்  வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புக்குழு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் எல்.பி.சரவணதமிழன், பொருளாளர் தீ.சந்துரு, சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செல்வராஜ், எம்.பிரியங்கா, மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், காட்டூர் அரியமங்கலம்  பகுதியில் கஞ்சா விற்பனையை எதிர்த்ததற்காக வாலிபர் சங்கத் தலைவர் தௌபீக் சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டப்பட்டார். இந்த நிகழ்வில், தௌபீக்கை சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் கவுரவித்தார்.

மதுவிலக்கு பிரிவை வலிமைப்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

தமிழகம் முழுவதும் எறும்பு போல் செயலாற்றி ஒரு கோடிபேரிடம் கையெழுத்து பெற்றுள்ளீர்கள்; ஒரு கோடி பேரின் இதயத்தை தொட்டுள்ளீர்கள். தமிழ கத்தில் எந்த ஒரு அமைப்பும் செய்ய முடியாத சாதனையை வாலிபர் சங்கம் செய்துள்ளது. போதையற்ற தமிழகம் அமைய, திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். பல தளங்களில் செயலாற்றுகிறவர்களை வாலிபர் சங்கம் ஒருங்கிணைத்தது பாராட்டுக்குரியது.  போதைக்கு எதிராக விருதுநகர் சந்துரு, கடலூரில் குமார், ஆனந்தன் என வாலிபர் சங்கம் தனது தோழர்களை களப்பலி கொடுத்துள்ளது. இன்றைக்கும் திருச்சியில் தௌபீக், சேலத்தில் பெரியசாமி என போதை எதிர்ப்பு களத்தில் உயிரை பணயம் வைத்து  வாலிபர் சங்க ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கோழிக்கறி குழம்பு வைக்கவில்லை என்பதற்காக மதுபோதையில் ஒருவன்  தனது மனைவியை வெட்டிகொன்றுள்ளான். தனது தந்தை குடியை நிறுத்தச் சொல்லி 12ஆம்  வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள் ளார். போதைப்பழக்கம் மனிதனை மிருகமாக மாற்றுகிறது. திறமையான மிகச்சிறந்த திரைக் கலைஞர்களை, மனிதர்களை போதை  பழக்கம் அழித்துவிடுகிறது. இந்த மாநாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். லயோலா கல்லூரியை சுற்றியுள்ள டீக்கடை, உணவகங்களில் விற்பனை சற்று உயர்ந்திருக் கும். ஆனால், ஒரு மதுக்கடையில் கூட வியா பாரம் அதிகரித்து இருக்காது. அத்தகைய இளைஞர்களைக் கொண்டது வாலிபர் சங்கம். தமிழகத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையூட்டும் இளைஞர்களை வாலிபர் சங்கம் கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில், “கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் வழக்குள் பதியப்பட்டு, 11 ஆயிரத்து 288 பெண்கள் உட்பட ஒரு லட்சத்து 39 ஆயி ரத்து 697 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே, 70 லட்சத்து 99 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்புள்ள சாராய ஊறல்கள்  அழிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. அப்படியானால், தமிழகத்தில் கள்ளச் சாராயத்தின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ள முடியும். இவ்வளவு பேர் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுத்த பிறகும், கள்ளச்சாராய விற்பனை நீடிக்கிறது.

இதனுடன் போட்டி போடும் வகையில் பல்வேறு வகையான போதைப் பழக்கங்கள் அதிகரித்து வரு கின்றன. 2011ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில், 2.80 கோடி பெண் களும், தமிழகத்தில் 22 லட்சம் பெண்களும் வித வைகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்தப் பெண்களது கணவர்களின் போதை பழக்கம். 2021 கணக்கெடுப்பு நடந்தால் இந்த அளவு 5 மடங்கு வரை அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது. சட்டத்தினால் மட்டும் போதையை தடுக்க முடியாது. காவல்துறையில் உள்ள சிலர், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்கிறவர்களோடு தொடர்பில் உள்ளனர். இதனால், பள்ளிகளில் கூட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக் கிறது. எனவே, இத்தகையோரை காவல்துறை முறைப்படுத்த வேண்டும். காவல்துறை மது விலக்கு பிரிவை வலுப்படுத்த வேண்டும். போதைப்பழக்கத்தை ஒழிக்க தனிமனித சிந்தனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் தேவை. அரசியல் கட்சிகள், சாதி,  மத அமைப்புகள் செய்ய முன்வராத புனிதப்  பயணத்தை வாலிபர் சங்கம் மேற்கொண்டுள் ளது. இந்த சிறுபொறி தனிமனித மனங் களை மாற்றும்; போதையில்லா தமிழகத்தை உருவாக்கும்; போதை என்கிற காட்டை அழிக்கும்.

போதைக்கு எதிரான போர்  -  எஸ்.கார்த்திக் மாநிலத் தலைவர், வாலிபர் சங்கம்

வேலைவாய்ப்பு, அரசியல் பொருளாதார கோரிக்கைக்காக மட்டுமல்ல, இளைஞர்களை அழிக்கும் எந்த ஒன்றையும் அழிக்கும் பெரும் படையாக வாலிபர் சங்கம் இருக்கும். போதைக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள பிரகடனம், போதைக்கு எதிராக போர். தனி மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் போதை பாதிப்பை உருவாக்குகிறது. எனவே, அதற்கெதிராக களம் காணாவிடில், அது தமிழக, இளைஞர்களின் வாழ்வை சூறையாடும். எனவேதான், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்பினோம். ஏழை எளிய மக்கள் பயிலும் அரசுப் பள்ளியின் மாணவர்களுக்கு எந்த ஒரு போதைப் பொருளும் கிடைக்கக் கூடாது.  ஊட்டச்சத்து இல்லாத மாணவனுக்கு போதைப்பொருள் கிடைத்தால், அவனால் சமூக பொறுப் போடு செயல்பட முடியுமா? மக்கள் பிரதிநிதிகளையும், பிரபலங்களையும் ஒருங்கிணைத்து முன்னணிப்படை யாக செயல்படுவோம். போதைக்கெதிரான போராட்டத் த்தை தொடர்வோம்.

கையெழுத்து இயக்கத்தின் வெற்றி    -   ஏ.வி.சிங்காரவேலன் மாநிலச் செயலாளர், வாலிபர் சங்கம்

போதைக்கு எதிராக போராடியதற்காக திருச்சியில் வாலிபர் சங்க தலைவர் தௌபீக்-கை சமூக விரோதிகள் வெட்டினர். சேலத்தில் வாலிபர் சங்கத் தலைவர் பெரியசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, உரிய பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். சமூக விரோதிகள் எத்தகைய தாக்குதல் நடத்தினாலும், சமூகத்தை பாதுகாக்கும் கடமையிலிருந்து பின்வாங்க மாட்டோம்.  வாலிபர் சங்க கையெழுத்து இயக்கம் தொடங்கிய  பிறகு, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். தமிழ்நாட்டில் 11 விழுக்காடு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசுத் துறைகள் வாயிலாக  போதைக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை 4.0 எனும் திட்டத்தை தொடங்கி செயல்படு கிறது. தடை செய்யப்பட்ட போதை பொருளுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.  போதைக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம்.

கஞ்சாவின் தலைநகர் காசி -   திரை இயக்குநர் ராஜூமுருகன்

சிகரெட் போல கஞ்சா எளிதாக கிடைக்கிறது. பாரதப் பிரதமரின் தொகுதியான காசியில் எளிதாக கஞ்சா கிடைக்கிறது. கஞ்சாவின் தலைநகராக காசி உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் ‘வெப்பன்’ (போதைப்பொருள்) சப்ளையர்களாக உள்ளனர். எனவே, மக்களின் மனங்களை மாற்ற, குழந்தைகளை பாதுகாக்க வாலிபர் சங்கம் களம் இறங்கி உள்ளது. இடதுசாரி தத்துவம்தான் என்னை போதையிலிருந்து விடுவித்தது; சமூக அக்கறை மிக்க கலைஞனாக மாற்றியது. போதை, சாதி, ஊழல் ஆகிய வற்றில் இருந்து விடுவிக்கும் ஒரே மருந்து இடதுசாரி தத்துவம்தான். அசாத்தியங்களை சாத்தியமாக்குவோம்; நாம் தோழர்கள்!

415 கொடிய வேதிப் பொருட்கள்-    முனைவர் பேரா.இரா.காளீஸ்வரன்

பெருமை வாய்ந்த லயோலா கல்லூரியில் இத்தகைய நிகழ்வு நடத்த வாய்ப்பளித்த வாலிபர் சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள். பரமக்குடியில் பிறந்த எனக்கு, வாலிபர் சங்க தோழர்கள் உண்டியல் குலுக்கி கொடுத்த 1500 ரூபாயில் என்ஜினியரிங் படித்தேன். கல்வி வளாகத்தில் போதைப் பொருள் கூடாது, சுயநிதி கல்லூரிகள் கூடாது என்று போராடியதால் கொலை செய்யப்பட்ட மாணவத் தலைவர்கள் சோமு-செம்புவின் தியாகத்தால் கல்லூரி வளாகத்தில் போதை ஒழிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வாலிபர் சங்கத் தோழர்கள் ரத்தம் கொடுத்து, அதில் கிடைத்த பணத்தில் அணை கட்டினார்கள். வாலிபர் சங்கம் கூடிக் கலைகிற கூட்டம் அல்ல; கூடி மழை பொழிகிற மேகக் கூட்டம். தமிழகத்தில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்களில் 415க்கும் மேற்பட்ட மோசமான வேதிப் பொருட்கள் உள்ளது என்று அமெரிக்காவை சார்ந்த ஜெல் அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொடிய போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. போதைக்கு எதிராக லயோலா கல்லூரி வாலிபர் சங்கத்துடன் இணைந்து செயல்படும்

‘விலை மதிப்பற்ற வாழ்க்கை  -  ’ ஏ.ஆர்.ரஹைனா, இசையமைப்பாளர்

கையெழுத்து இயக்கத்தின் வாயிலாக மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மனமாற்றத்தை  வாலிபர் சங்கம் உருவாக்கி வருகிறது. ஒருவரின் போதைப் பழக்கத்தால் குடும்பத்தினர் மட்டுமின்றி சமூகமும் பாதிக்கப்படு கிறது. போதைபொருளை தவிர்த்து திறமைகளை வளர்த்துக் கொள்வோம். விலை மதிப்பற்ற வாழ்க்கையை வாழ்வோம்.

800 விதமான போதைப் பொருட்கள் -   கே.எஸ்.பாரதி, மாநில பொருளாளர், வாலிபர் சங்கம்

இந்தியாவில் தனியார்மயம் வந்த பிறகு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தது. தடை செய்யப்பட்ட  800க்கும் மேற்பட்ட போதைப் பொருட்கள் இந்தியாவில் புழங்குகிறது. போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக தினசரி  மாவட்டத்திற்கு 2 பேர் கைது செய்யப்படுகின்றனர். சமூக பாதுகாப்புடன் கூடிய அரசு வேலைகள் அனைத்தும் தனியார்மய மாக்கப்படுகிறது. வேலையில்லா இளைஞர் பட்டாளத்தை வைத்து, உழைப்பை சுரண்டுவதுதான் கார்ப்பரேட் அரசியல். அதை திசை திருப்ப போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கின்றனர். அதனை முறியடிக்க களத்தில் போராடுவோம்.

கஞ்சாவும் எலியும்-  நக்கீரன் கோபால், மூத்த பத்திரிகையாளர்

“ஒருவன் போதை, அவன் குடும்பம் தள்ளாடுகிறது” என்பது கவிதை. சென்னையில் ஒரு காவல்நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பிடிக்கிறார்கள். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது கஞ்சாவை எலி தின்றுவிட்டது என்று காவல்துறை கூறுகிறது. குற்றவாளி விடுவிக்கப்படுகிறான். இந்த நிலையில் வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தியது பாராட்டுக்குரியது. போதையற்ற தமிழ்நாடு; இந்தியாவை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறும்.

தனிமனிதப் பிரச்சனை அல்ல!-   எஸ்.ஜே.கௌதம்ராஜ், திரை இயக்குநர்

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதன் மூலம் வளர்ந்த நாடுகள் மிகுந்த பயனடைகின்றன. அதனால் பல்வேறு வழிகளில் போதைப்பொருட்களை வளர்ந்த நாடுகள் ஊக்குவிக்கின்றன. போதை தனிமனித பிரச்சனையல்ல; சமூக பிரச்சனை. போதை யற்ற நிலத்தை உருவாக்குவதற்கான எண்ணத்தை விதைக்க முடியும். அதற்கான செயல்திட்டத்தை அரசுதான் வகுக்க வேண்டும். தொடர்ந்து முன்னேறுவோம்.

விளையாட்டு முக்கியம்  -  ரவிக்குமார், திரை இயக்குநர்

போதை கலையை வளர்க்காது. மக்களை கூர்ந்து கவனிக்காமல் கலை செழுமை அடையாது. கட்டுப்பாடு இல்லாவிட்டால் இலக்கை எட்ட முடியாது. கலை, விளையாட்டுகளில் இளைஞர்களை திருப்பும் போது, போதையின் பக்கம் செல்வது தடுக்கப்படும். போதையற்ற தமிழ்நாடு என்ற வாலிபர் சங்கத்தின் முழக்கம், சமூகத்தின் இயக்கமாக மாற வேண்டும். போதையற்ற தமிழ்நாடு என்பதிலும் தமிழகம் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

தென் மாநிலங்களில் 45 சதவீதம்   -  சமஸ், ஊடகவியலாளர்

மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெரும்பகுதியான பள்ளிக் கூடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. இதை ஒட்டுமொத்த சமூகமாக எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள மொத்த மது நுகர்வில் 45 விழுக்காட்டை தென்மாநிலங்கள் வைத்துள்ளன. தமிழகத்தில் மதுவிலக்கு இல்லாவிட்டாலும், விற்பனையை சீரமைக்க வேண்டும். பாண்டிச் சேரியில் பெண்கள் சென்று மது வாங்கி வரும் கண்ணியமான நிலை உள்ளது. கேரளாவில் மது விற்பனை கூடங்களில் பெண்  ஊழியர்கள் அமர்த்தும் நிலை உள்ளது. அத்தகைய சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அடித்தட்டு தொழிலாளர்களின் குடும்பத்தை, உழைக்கும் திறனை மது பறிக்கிறது. இதில்மாற்றம் கொண்டுவர வாலிபர் சங்கத்தின் முன்னெடுப்பு நல்ல தொடக்கமாக அமையட்டும்.

‘ஊடகங்களின் பொறுப்பு’  -  ஆவுடையப்பன், ஊடகவியலாளர்

போதைப் பொருளை ஊக்குவிப்பதில் ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேசமயம் விழிப்புணர்வை   ஏற்படுத்தவும் உதவுகிறது. ஒருவர் போதையில் இருப்பதை  உடன் இருப்பவர்களால் உணர முடியாத வகையில், சாதாரண பரிசோதனை களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் போதையின் அளவு, தன்மை  மாறியுள்ளது. இதை வியாபாரம் செய்யும் உத்தியும், நுட்பமாக மாறியுள்ளது. உணவு விநியோகிப்பவர்கள் போல் சென்று விற்பனை செய்கிறார்கள். போதை எக்காலத்திலும் தவறு. அதை ஊக்குவிக்கக் கூடாது. வாலிபர் சங்கம் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளது.