இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மதத்திற்கு எதிரானவர்கள் என கூறுபவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த மாநாட்டிற்கு பால பிரஜாபதி அடிகளார் வந்திருப்பதன் மூலம் மதச்சார்பின்மையை உண்மையில் பாதுகாப்பது யார் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது. நாங்கள் மதங்களுக்கு எதிரான அணி அல்ல, நாங்கள் மதவாதத்திற்கு எதிரான அணி என்பதை தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம் பாலபிரஜாபதி அடிகளார் பேசும் பொழுது, கோயிலில் உள்ள கடவுள்கள் எல்லாம் இடதுசாரிகள், பூஜை செய்கிறவர்கள் வலதுசாரிகளாக உள்ளனர் எனக் கூறினார். இதைவிட தெளிவான விளக்கத்தை எப்படி தர முடியும்? அரசியல் சட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் பல குறைபாடுகளை தவிர்க்க முடியும் என இங்கு உள்ளவர்கள் பேசினார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த அரசியல் சட்டத்தையே அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வாரணாசியில் ஆர் எஸ் எஸ், பாஜகவினர் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை அப்புறப்படுத்தி புதிய சட்டத்தை இயற்ற குழுவை அமைத்துள்ளனர்.
அதற்கெல்லாம் சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆட்சி மாற்றம் என்பது ஒரு கட்சி தோல்வியுற்று மாற்றுக் கட்சி வந்தது என்பது அல்ல. சித்தாந்த அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. மன்மோகன் சிங் தனது ஆட்சிக் காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி போன்றவர்களின் முக்கிய பங்கு உள்ளது என்பதை நாட்டு மக்கள் அறியவேண்டும். இந்தியாவில் இடதுசாரிகள், ஜனநாயக அமைப்புகள் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் ஒருங்கிணைந்துள்ளது. இந்த தேசத்தை மோச மானவர் கைகளில் விட்டு விடக்கூடாது என்பதற்காகவே அது கூடிய விரைவில் நிறைவேறும்.