தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (NMC Act), 2019 பிரிவு 14யின் படி மருத்துவப் படிப்பில் நுழைய “நீட்” நடைமுறையும், பிரிவு 15 இன்படி ஐந்தாண்டு படிப்பை முடித்து வெளியே வர “நெக்ஸ்ட்” நடைமுறையும் கட்டாயமாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு தொடங்கி “நீட்” நடை முறையில் ஆண்டுக்காண்டு விதவிதமாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முறைகேடுகளின் உச்சமாக தேசிய தேர்வு முகமையே (NTA) நேரடியாக முறை கேட்டில் ஈடுபட்டுள்ளது. “நீட்” எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல் மற்றும் மதிப்பெண் கழித்தல் நடைமுறை அறிவிக்கப்பட்டு அதன்படி பயிற்சி மேற்கொண்டு மாணவர்கள் “நீட்” எழுதினார் கள். அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கும்/விதி களுக்கும் மாறாக இந்த ஆண்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முகமையே முறைகேடு
நேரம் இழப்பை ஈடுசெய்யவோ, கேள்வி தவறாக இருந்தால் அதற்கு உரிய முழு மதிப்பெண் வழங்கவோ வாய்ப்புள்ளதாக தேசியத் தேர்வு முகமை அறிவிக்கவில்லை. மாறாக, எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்கப்பட்டு இருக்கும். சரியான பதிலை தேர்வு செய்தால் விடைக்கான முழு, அதாவது நான்கு மதிப்பெண் தரப்படும், தவறான விடையைத் தேர்வு செய்தால் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டது. தவறான விடை இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு. அவ்வாறு இருக்க எப்படி, யாருக்கு நன்மை பயக்கும் விதமாக “நேர இழப்பு மதிப்பெண்” மற்றும் “தவறான விடைக்கான மதிப்பெண்” தரப்பட்டது? என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. விமர்சனம் எழுந்த பிறகு, நேர இழப்பீடு மதிப்பெண் வழங்கியதற்கு தொடர்பே இல்லாத சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டுகிறது தேசியத் தேர்வு முகமை. தேசியத் தேர்வு முகமையின் முறைகேடுகள் மக்களின் கவனத்திற்கு செல்லக் கூடாது என்ற நோக்கத்தில்தான், திட்டமிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்று காலை எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் “நீட்” முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேசியத் தேர்வு முகமை முறைகேடுகள், முடிவுகள் வெளியான இரண்டொரு நாட்களில் அம்பலமானவுடன், “நீட் புனிதத்தன்மையே பதிக்கப்பட்டுவிட்டதாக” உச்சநீதிமன்றம் கவலைத் தெரிவித்த பின்னர், தான் வழங்கிய நேர இழப்பிற்கான கருணை மதிப்பெண் களைத் திரும்பப் பெறுவதாக தேசியத் தேர்வு முகமை அறிவிக்கிறது.
நினைத்தபோது வழங்கவும், திரும்பப் பெற வும் இது என்ன தனி நபர் சார்ந்த சிக்கலா? இந்த ஆண்டு 24 லட்சம் பேர் “நீட்” எழுதி யுள்ளனர். இதில் பல லட்சம் பேர் இரண்டாவது முறை, மூன்றாவது முறை எழுதுபவர்கள். 24 லட்சம் குடும்பங்கள் இதற்காக தமது சேமிப்புகளை இழந்துள்ளன. சுமார் 1500 பேருக்கு தேசிய முகமை தனது இஷ்டத்திற்கு மதிப்பெண் வழங்குவதும், பின்னர் திரும்பப் பெறுவதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது. ஒன்றிய கல்வி அமைச்சர், சிக்கல் பூதாகர மாக வெடித்தவுடன் “தேசியத் தேர்வு முகமை தவறு செய்ய வாய்ப்பே இல்லாத அமைப்பு” என்று வர்ணித்தார். இரண்டொரு நாட்களில் இரு வகையான தவறு நடந்துள்ளது என்பதை அவரே ஒப்புக் கொண்டார். ஒன்று தேசியத் தேர்வு முகமையையே மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு செய்துள்ளது. மற்றொன்று, பல்வேறு இடங்களில், கடந்த காலங்களில் நடந்ததுபோல், இந்த ஆண்டும், வெவ்வேறு விதமாக, தேர்வு நடந்த மையம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவை தொடர்புடைய முறைகேடுகள் நடந்துள்ளன. பீகாரில் தேர்வுத் தாள் கசிவு புகார். வழக்கு பதிவுசெய்து, காசோலைகளைக் கைப்பற்றி தேர்வு நடந்த மையம் மற்றும் பயிற்சி மையம் இரண்டும் கேள்வித்தாள் கசிவில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
இது ‘குஜராத் மாடல்’
விடைத்தாளில் தெரிந்த விடையை மட்டும் தேர்வர் எழுதுவது, தெரியாத விடைகளை பயிற்சி மையத்தை சார்ந்தவர்கள் எழுதிக் கொள்வது என்ற முறைகேட்டில் குஜராத்தில் தேர்வு மையம் மற்றும் பயிற்சி மையம் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டுள்ளது. தேர்வு எழுதிய பின்னர் தேர்வர் களிடமிருந்து விடைத்தாள் பெறப்பட்ட நேரத்திற் கும், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள் எடுத்துச் செல்லப்படும் நேரத்திற்கும் இடையில் உள்ள நேரத்தை இந்த முறைகேடு நடக்கப் பயன்படுத்துவது என்பதே இவர்களின் திட்டம்.
நீட் எழுதிய பின்பும்...
“நீட்” எழுதும் போது முறைகேடுகள் நடக்கி றது என்றால், நடந்த பின்னர் தேர்ச்சி பெற்ற வர்களை வரிசைப்படுத்தி மருத்துவக் கல்லூரி களில் சேர்வதற்கு “நீட்” நடைமுறையில் பெர்சன்டைல் (Percentile) முறை தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரும் மோசடி நடக்க வழி வகுத்து தந்துள்ளது. இந்த ஆண்டு பொதுப் பிரிவில் 720 மதிப் பெண்ணுக்கு 164 மதிப்பெண் பெற்றவர்கள் தொடங்கி 720 பெற்றவர்கள் வரை 50வது பெர்சன்டைலில் (Percentile) இடம்பெற்றுள் ளனர். அதாவது “நீட்” டில் மொத்த மதிப்பெண் ணான 720இல், 164 மதிப்பெண் பெற்றிருந் தாலே மருத்துவப் பட்டப்படிப்பில் சேர தகுதி பெற்றுவிடுகிறார்கள். கடந்த ஆண்டு 137 பெற்றி ருந்தாலே மருத்துவப் பட்டப்படிப்பில் சேர தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு +2 முடித்த மாணவி ஒரு வர், இராஜஸ்தான் மாநிலம் கோட்டா (Kota) வில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து இரண்டா ண்டு பயிற்சி எடுத்து, கடந்த(2023) ஆண்டு 720க்கு 610 மதிப்பெண் பெற்றும், அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல், மீண்டும் ஓராண்டு பயிற்சி மேற்கொண்டு, இந்த (2024) ஆண்டு 720க்கு 650 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தரவரிசை யில் தான் பத்தாயிரத்திற்குள் வர வாய்ப்பு இல்லை, எனவே, இந்த ஆண்டும் தனக்கு அரசுக் கல்லூரியில் சேர வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
ரூ. 1.25 கோடி இருந்தால் தான்...
தனியார் நிறுவனங்களில் ஐம்பது விழுக்காடு (50%) இடங்களுக்கு நிர்வாகமே தங்களுக்கு தேவையான அளவு கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ள தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 உரிமை வழங்கி உள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டிற்கு ரூபாய் பதினைந்து லட்சத்திலிருந்து இருபத்தி ஐந்து லட்சம் வரை கொள்ளைக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதாவது கல்விக் கட்டணமாக ஐந்தாண்டு படிப்பிற்கு எழுபத்தைந்து லட்சத்திலிருந்து ஒன்றேகால் கோடி வரை கட்டணம் செலுத்த வாய்ப்புள்ளவர் மட்டுமே சேர முடியும். அரசுக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிய பின்னர் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தால் “நீட்” மதிப்பெண் 650 என்றாலும் பணம் செலுத்த முடியாதவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. அந்த இடம், பணம் செலுத்த வாய்ப்பு இருந்தால், 164 மதிப்பெண் எடுத்த வருக்குக் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால்தான், கடந்தாண்டு 610 எடுத்தும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மாணவி, இந்த ஆண்டு 650 எடுத்தும் மருத்து வப் படிப்பில் சேர முடியாது என்ற தனது வேத னையை வெளிப்படுத்தி உள்ளார். மொத்தத்தில் “நீட்” மருத்துவ மாணவர் சேர்க்கையில் தகுதியையும் உறுதிப்படுத்த முடியவில்லை, வணிக மயத்தையும் ஒழிக்க முடியவில்லை. மாறாக பள்ளிக் கல்வித் தொடங்கி மருத்துவக் கல்வி வரை கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சந்தைதான் மருத் துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கிறது. வணிகத்தின் இலாப வெறிக்கு மாணவர்கள் இரையாக்கப்படுகிறார்கள். “நீட்” விளைவாக பலரும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் உயிரியல் பாடப்பிரிவை எடுக்கத் தயங்குகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு உரிமை உண்டு
ந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246இன் கீழ் மாநில சட்டமன்றத்தின் அதி காரத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு நிறை வேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவிற்கு கூறு 254(2) இன் படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத் தருவது ஒன்றிய அரசின் கடமை. பல்வேறு மாநிலங்கள் உள்ள இந்தியாவில் நாடு முழுக்க ஒரு சட்டம் இருக்கும் போது, ஒரே ஒரு மாநிலம் தனக்கென ஒரு சட்டம் இயற்றிக் கொண்டால், அந்த சட்டம் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் செல்லத்தக்கதாக்க உருவாக்கப்பட்டதே கூறு 254(2). எனவே, ஒரு மாநிலம் மட்டும் கேட்டால் எப்படி என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒரு மாநிலம் கோரினால், அதன் உரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 254(2). சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் “ஒரே நாடு; ஒரே முழக்கம்; நீட்-ஐ ரத்து செய்” என்று கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தமிழ்நாடு சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கோரும் போராட்டம் “நீட்” நடைமுறையில் இருந்து விலக்கு கேட்கும் போராட்டம் என்றோ, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான போராட்டம் என்றோ குறுகிப் பார்க்க இயலாது. மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கின்ற போராட்டம் என்பது உணர வேண்டும்.