இன்றைய நிலையில் மொத்த வேலைவாய்ப்புகளில் 11 கோடிக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகளை சிறுகுறு தொழில்களே வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில், குறுந்தொழில்களின் பங்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகம். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை மையப்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாக பொருளாதார நடவடிக்கையும் பொருளாதார பரவலையும் இது உருவாக்குகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது சுயசார்பை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் செய்தன. அவற்றில் பொதுத்துறை மற்றும் சிறுகுறு தொழில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய மறு அடமானம் (சப் - பிரைம்) நெருக்கடி உலக நாடுகள் பலவற்றில் பொருளாதாரத்தை ஒரு அசைப்பு அசைத்து பார்த்தது. சில நாடுகளின் அரசு காசோலைகளே பணமின்றி திரும்பும் நிலை ஏற்பட்டது. வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு, ஆலை மூடல் என்று சமூகம் மொத்தத்தையும் ஆட்டிப் படைத்தபோது இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி சமாளித்தன. இத்தனைக்கும் உலகில் முதல் மற்றும் இரண்டாவது மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் சீனாவும், இந்தியாவும். சீனா அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்தற்கும் பெருமளவு பாதிக்கப்படாமல் இருந்ததற்கும் தங்கள் சிறுகுறு நிறுவனங்கள் தான் காரணம் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார்கள். இந்திய பிரதமராக அப்போதிருந்த மன்மோகன்சிங், இந்தியா 2008க்கு பிந்தைய நெருக்கடியில் மேற்கத்திய நாடுகள் போல பாதிக்கப்படாமல் இருந்ததற்கு இந்தியாவின் அடித்தளம் தான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் அடித்தளம் என்று குறிப்பிட்டது பொதுத்துறையையும், சிறுகுறு நடுத்தர தொழில்களையும்தான். இத்தனைக்கும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியான தனியார் மயமாக்கலை துவக்கி வைத்ததில் முக்கிய பங்காற்றியவர் மன்மோகன் சிங். அவரே அப்படிக் குறிப்பிட்டார் என்பது தான் முக்கியம்.
மோடி அரசின் தோல்வி
தற்போது, இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி இன்னும் தீவிரமாகும் என்று சொல்லப்படுகிறது. நெருக்கடி என்றாலே அதன் சுமை முழுவதையும் ஏழை எளிய நடுத்தர மக்களின் தலையில் கட்டுவது தான் முதலாளித்துவத்தின் மிக இயல்பான, மிக எளிதான நடைமுறையாகும். இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் மிக முக்கியமானது வேலையின்மை பிரச்சனை. மோடி ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக, தான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என சவடால் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, அதைப்பற்றி பேசுவதையே மறந்துவிட்டார். உலகில் இளைஞர்களின் நாடாக இந்தியா இருப்பது இந்த நூற்றாண்டில் இந்தியாவிற்கு மிகப்பெரும் வலிமை என்று பேசப்பட்டது. ஆனால், அந்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் இந்த அரசாங்கம் முற்றிலும் தவறிவிட்டது.
கணிசமான வேலைவாய்ப்பு எங்கே உள்ளது?
வேலை வாய்ப்பு என்றாலே அரசு, பொதுத்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் என்றுதான் சிந்தனை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் முற்றிலும் கவனிக்கப்படாத; புறக்கணிப்பிற்கும், ஒதுக்குதலுக்கும் இன்னும் சொல்லப்போனால் தாக்குதலுக்கும் உள்ளான பகுதியாக இருக்கும் சிறுகுறு தொழில்களே வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் பெரு நிறுவனங்கள், அந்நிய நிறுவனங்கள் இவை அனைத்தும் உருவாக்குகிற வேலை வாய்ப்புகளோடு ஒப்பிட்டால் சிறுகுறு தொழில்களில் வேலை வாய்ப்பு வழங்குவது மிகமிக அதிகமானதும், முக்கியமானதுமாகும். இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபடி, வேலை செய்து கொண்டிருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47.41 கோடி ஆகும். ஆனால், சமீபத்திய கணக்குகளும், புள்ளி விபரங்களும் தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வேலை செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 41 கோடி என்று தெரிவிக்கிறது. அதாவது, 8 1/2 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவிலிருந்து வேலை வாய்ப்புகளில் ஏறத்தாழ 6 1/2 கோடி குறைந்துவிட்டது. இன்றைய நிலையில் மொத்த வேலைவாய்ப்புகளில் 11 கோடிக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகளை சிறுகுறு தொழில்களே வழங்கிக் கொண்டிருக்கிறது.
இதில், குறுந்தொழில்களின் பங்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகம். மூலதனத்தை ஈர்ப்பதற்காக இந்திய சட்டதிட்டங்களும் கொள்கைகளும் வளைக்கப்பட்டு முதலீட்டில் 50 சதவிகிதம் வரை மானியம் கொடுத்து அந்நிய நிறுவனங்களையும் இந்திய தொழில் நிறுவனங்களையும் விரும்பி அழைத்த பிறகும் வேலை வாய்ப்புகள் ஒன்றும் வானத்தை பொத்துக் கொண்டு கொட்டிவிடவில்லை. ஆனால், தங்கள் சேமிப்பையே முதலீடாக்கி தங்கள் குடும்ப தேவைக்கு பொருள் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறுகுறு நிறுவனங்கள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் நான்கில் ஒரு பகுதிக்கும் அதிகமாகவே வழங்கி கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணி புரிந்து வரும் ஏறத்தாழ 100 சதவிகிதம் பேர் மிகக்குறைந்த கல்வி வாய்ப்பை பெற்றவர்களாகவோ அல்லது ஓரளவு கல்வி வாய்ப்பை பெற்றவர்களாவோ இருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை மையப்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக பொருளாதார நடவடிக்கையும் பொருளாதார பரவலையும் இது உருவாக்குகிறது. மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒருவர் அதை முழுவதையும் ஒரே மாதத்தில் செலவழித்து விடுவதில்லை. ஆனால், சிறுகுறு தொழில்களில் பணிபுரிகிற பெரும் பகுதியினர் அவர்களின் வருமானம் முழுவதையும் கிட்டத்தட்ட சந்தையில் செலவழித்து விடுகிறார்கள். சந்தைக்கு வருவதன் மூலமாகவே இந்த பணம் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுகிறது. அந்த வகையில் சிறுகுறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பெரும்பாலான சம்பளம் உடனடியாகவே சந்தைக்கு வருவதன் மூலம் பொருளாதார நடவடிக்கையை தூண்டுகிறது.
தொழில் பரவல்...
சிறுகுறு தொழில்கள் சில இடங்களில் தொழிற்பேட்டைகளில் இயங்குகின்றன. ஆனால், பெரும்பாலான சிறுகுறு தொழில்கள் அதை உருவாக்குவது சொந்த இடத்திலோ, அல்லது விலை குறைந்த இடத்திலோ இயங்குகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்பும் ஓரிடத்தில் குவியலாக இல்லாமல் பரவலாக்கப்படுகின்றன. பல ஊரகப் பகுதிகளில் சிறுகுறு தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. இந்த வகையில் நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை குறைப்பதிலும் பங்காற்றுகின்றன. எனவே, சிறுகுறு தொழில் பாதுகாப்பு என்பது வெறும் அந்த தொழில்களை அதன் மூலம் அந்த தொழிலை நடத்தி கொண்டிருப்பவரை பாதுகாக்கும் நோக்கம் மட்டுமில்லை. மாறாக, வேலை வாய்ப்பையும் பொருளாதார பரவலாக்குவதையும், தொழில்கள் பரவி கிடப்பதையும் உத்தரவாதப்படுத்துவதாகும்.
நெருக்கடிக்கு முடிவுகட்ட...
இத்தகைய தொழில்கள்தான் தொடர்ச்சியாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனா, தொழில் போட்டிகள் இவற்றோடு அரசின் பாராமுகம், வங்கிகளின் கை முறுக்கல், மூலப்பொருட்களின் விலையேற்றம், மின்சாரக் கட்டணம், மாதாந்திர நிரந்தர கட்டணத் தொகை, முதன்மை நேர (பீக் அவர்) கூடுதல் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகியவற்றின் காரணமாக மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. கடன் கொடுப்பதும் வசூலிப்பதும் இவர்களிடம் வங்கிகள் கறார் தன்மையுடன் நடந்து கொண்டு வசூலிக்கிறார்கள். பெரு நிறுவனங்களுக்கு காட்டப்படும் எந்த சலுகைகளும் இந்த நிறுவனங்களுக்கு காட்டப்படுவதில்லை. கடன் வசூலிக்கும் முறையிலும் கடனுக்கான வட்டி விகிதத்திலும் பெரு நிறுவனங்களுக்கு காட்டப்பட்டும் சலுகைகள் இந்த சிறுகுறு நிறுவனங்களுக்கு காட்டப்படுவதே இல்லை. எனவே, சிறுகுறு நிறுவனங்கள் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றன. சிறுகுறு நிறுவனங்களை பாதுகாப்பதற்கு என்பதற்கு அப்பால் தேசத்தின் பொருளாதாரம், இளைஞர்களின் வேலை வாய்ப்பு, பொருளாதார பரவலாக்கம் உள்ளிட்டவற்றோடு சம்பந்தபட்ட ஒரு அம்சமாகும். எனவே, சிறுகுறு தொழில்களை பாதுகாப்பதற்கான போராட்டம் சமூகத்தின் உணர்வாகவும், போராட்டமாகவும் மாற்றப்பட வேண்டும். இந்த தொழில் நிறுவனங்கள் முன்வைக்கும் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டியது அனைத்து பகுதி மக்களின் குறிப்பாக வேலை தேடும் இளைஞர்களின் மிக முக்கியமான கடமையாகும்.