இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே வருடாந்திர உச்சி மாநாடுகளைப் புதுப்பிக்கும் விதத்தில் ஜூலை 9-10 தேதிகளில் மாஸ்கோவிற்கு பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். சென்ற உச்சி மாநாடு, புடின் 2021இல் தில்லி வந்திருந்த போது நடைபெற்றது. இப்போதைய பயணம், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு வகை செய்திருக்கிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு தொலைநோக்கு அறிக்கை (joint vision statement) முந்தைய கூட்டங்களைப் போலன்றி பொருளாதார ஒத்து ழைப்பு மற்றும் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் பின்னணியில் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிலிருந்து அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் இது சாத்தியமான இலக்கேயாகும்.
இராணுவ ஒத்துழைப்பு
மேலும் இந்த அறிக்கையில், இராணுவம் மற்றும் இராணுவத்தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது அரசுகளுக்கிடையேயான ஆணையம் தன்னு டைய அடுத்த அமர்வை மாஸ்கோவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் நடத்திடும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இராணுவத்தில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இணை மேம்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளின் கூட்டு உற்பத்திக்கு மறுசீரமைக்கப்படும் ராணுவத் தளவாடங்கள் வாங்குவது மற்றும் இணை உற்பத்தியை நோக்கி செல்வது போன்ற வற்றில் ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருங்கிய உறவின் அடிப்படையில் இராணுவ ஒத்துழைப்பு என்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
அமெரிக்காவின் எரிச்சல்
மோடியின் மாஸ்கோ பயணம் மற்றும் ஜனாதிபதி புடினுடனான உச்சிமாநாடு ஆகியவை அமெரிக்கா மற்றும் பைடன் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்தியாவை “ரஷ்யா நீண்டகால நம்பகமான பங்காளியாக மாற்றி யிருப்பது, நல்லதல்ல” என்று கூறியுள்ளார். உக்ரைன் போரில், உலகளவில் ரஷ்யா எவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக, வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், மோடி மாஸ்கோவிற்கு பயணம் செய்திருப்பது அமெரிக்காவை எரிச்சலூட்டி இருக்கிறது.
பகிரங்க மிரட்டல்
ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்தியா ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, எனவே அமெரிக்கா சொல்கிறபடிதான் இந்தியா நடந்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டியிருக்கிறது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “அமெரிக்கா-இந்தியாவிற்கு இடையேயுள்ள ராணுவக் கூட்டணி, உலகில் ஏற்பட்டுள்ள கூட்டணிகளில் மிகவும் முக்கியமான ஒன்று” என்று கூறி, “இந்த உறவை சாதாரண மாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று இந்தியாவை எச்சரித்திருக்கிறார். மேலும் அவர், இந்தியா தன்னுடைய ‘‘நீண்டகால ராணுவ உறவுகளில் ‘இறையாண்மையை’ விரும்புகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், பிரச்சனை என்று வந்துவிட்டால், அத்தகைய ராணுவ இறையாண்மைக்கெல்லாம் இடம் இல்லை” என்று கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார்.
இந்தியா மீது நிர்ப்பந்தம்
அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள நீண்டகால இராணுவ சூழ்ச்சிக்கான ஒப்பந்தங்களின்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்று மோடி அரசாங்கத்தை அமெரிக்கா மிரட்டியுள்ளது. 2003இல் இராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அதை இந்தியா விமர்சித்தது. ஆனால் அந்தக் காலம் அல்ல இப்போது. அது மாறிவிட்டது. அந்த சமயத்தில் இந்தியா அமெரிக்காவுடன் இப்போது செய்துகொண்டிருப்பதுபோன்று இராணுவ மற்றும் போர்த்தந்திர ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளவில்லை. உக்ரைனில் மோதல் போன்ற பிரச்சனைகள் வரும்போது, இந்தியா தன்னுடைய இராணுவ இறையாண்மையை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்கா கூறுகிறது. ஏனெனில் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்வில் மோடி அரசாங்கத்திற்கு சில படிப்பினை கள் உள்ளன. மோடியின் ரஷ்யப் பயணம் முடிந்தவுடனேயே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் பேசியுள்ளார். இரு தரப்பிலும், டோக்கியோவில் ‘குவாட்’ என்னும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை ஜூலை இறுதியில் டோக்கியோவில் நடத்துவதென்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக ‘குவாட்’ நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்துவதென்றும், பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமை யிலான அணி வகுப்புக்கு இந்தியா முழு அர்ப்பணிப்புடன் இருந்திடும் என்பதை அமெரிக்காவுக்கு இந்தியா மீளவும் உறுதியளித்திட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பைடன் பதவிக்காலம் முடியும் தருவாயில் அமெரிக்கா இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளில் பங்கேற்றிட, இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவே அமெரிக்கா விரும்புகிறது.
இராணுவ சுயாட்சியை அடகு வைத்த மோடி அரசு
இந்தியாவின் அயல்துறைக் கொள்கைக்கும், அதன் நீண்டகால நலன் சார்ந்த இராணுவக் கண்ணோட்டத்திற்கும் (strategic vision)இடையே உருவாகியிருக்கும் முரண்பாடு இங்கே குறுக்கே நிற்கிறது. இந்தியா, ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) எனப்படும் நாடுகளில் ஒரு முக்கிய உறுப்பு நாடாகும். ஷங்காய் ஒத்துழைப்பு ஸ்தாபனமும் (Shanghai Cooperation Organisation) விரிவடைந்திருக்கிறது. இந்தியா, உலகளா விய தெற்கின் முன்னணிக் குரலாக இருக்க விரும்புகிறது. எனினும், மோடி அரசு, ஆசியாவில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக செயல்படக்கூடிய விதத்தில் இராணுவ சுயாட்சியை அதனிடம் அடகு வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் நோக்கம் என்ன?
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், “விழுமியங் களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும், “இரண்டு பெரும் ஜனநாயகங்கள் ஒருங்கிணைந்திருக்கின்றன” என்றும் தம்பட்டம் அடித்தபோதிலும், உண்மையில் அமெரிக்காவின் நோக்கம், ஒரு சீன எதிர்ப்பு சக்தியாக, இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும் என்பதேயாகும்.
அமெரிக்காவின் இந்த உள்நோக்கம் இந்திய நாட்டின் நலன்களுக்கு ஒத்துவரவில்லை என்பதை மோடி அரசாங்கம் உணர வேண்டும். உண்மையிலேயே மோடி அரசாங்கம் தன்னுடைய இரணுவ சுயாட்சி மீதும், தன்னு டைய சுதந்திரமான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அக்கறையோடு இருக்குமானால், அது சீனாவுடனான வேறுபாடுகளைக் களைந்திட, குறிப்பாக எல்லைப் பிரச்சனையை மையமாகக் கொண்டு அவற்றைக் களைந்திட, உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால், அது இந்தியாவின் இராணுவ உறவுசார் சுயாட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், நாட்டின் நலன்களை மேம்படுத்துவதற்கும் மிகவும் சிறந்த முறையில் வழிவகை களைக் கண்டிடும். எனினும் இது நிச்சயமாக அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறுவதற்கும் வழி வகுத்திடும்.