அண்மையில் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதி மன்றம் சிறப்பானதொரு தீர்ப்பை அளித்துள்ளது. இது ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் ஊழல் எதிர்ப்பு பிம்பத்தைத் தகர்த்துள்ளது; மறுபக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அரசியலை உயர்த்திப் பிடித்துள்ளது. 6 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு அண்மையில் தான் விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கை எடுக்க ‘மறந்த’ அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் என்பது தற்செயலானதல்ல. அவரிடம் ஊடகவியலாளர்கள் ஏன் கிடப்பில் போட்டு வைத்திருந்தீர்கள் என்று கேட்டபோது, என்னுடைய கவனத்திற்கு அது வரவில்லை என்று பதிலளித்து விட்டார்.
தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியல் சாசன பிரிவு 19(1)(a)க்கு - மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது, எனவே அது ரத்து செய்யப்படுகிறது, அதை ஏதுவாக்க கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டத் திருத்தங்களும் ரத்து செய்யப்படுகின்றன, தேர்தல் பத்திரம் வெளியிடு வதை உடனடியாக நிறுத்த வேண்டும், தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்கள் யார், எந்தக் கட்சிக்குக் கொடுத்தார்கள், ஒவ்வொரு பத்திரமும் வாங்கிய தேதி உள்ளிட்ட விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6க்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திட வேண்டும்; மார்ச் 13க்குள் தேர்தல் ஆணையம் அதை வெளியிட வேண்டும் என்பது உச்சநீதி மன்றத் தீர்ப்பின் சாரம். இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களில் பெரும்பகுதி, ஒரு கோடி மற்றும் அதற்கு மேல் என்கிற முறையிலேயே விற்பனை யாகியுள்ளது. நன்கொடையின் மிகப்பெரும் பகுதி பாஜகவுக்கே கிடைத்திருக்கிறது. பெரும் செல்வந்தர்க ளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள நெருக்கத்தை விவரிக்க இதைத்தவிர வேறு என்ன புள்ளி விவரம் தேவைப்படும்? அரசு கொடுக்கிற ஆதாயத்திற்கான கைம்மாறாக, பிரதிபல னாக கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் நன்கொடையே இது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கோடி கோடியாக பெற்ற நிதியை வைத்து பாஜக என்ன செய்தது? பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக ளைக் கவிழ்த்தது, ஜனநாயக படுகொலை செய்தது. சமூக ஊடகத்தின் மூலம் போலி புகைப்படங்களை யும் பொய் செய்திகளையும் வரைமுறையின்றி வெளி யிட்டது. பெண்கள் மற்றும் பட்டியலின பழங்குடியினர் சிறுபான்மை மக்களின் மீது தாக்குதல் தொடுத்த குற்றவாளிகளைப் பாதுகாத்தது.
மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த கொள்கைசார் நிலைபாடு
தேர்தல் பத்திரம் என்பது அரசியல் ஊழலை சட்டப்பூர்வமாக்குகிற நடவடிக்கை என்று எடுத்த எடுப்பிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளி வாக வரையறுத்தது. 2018 அறிவிக்கை வந்த உட னேயே அதை எதிர்த்து, வழக்கும் தொடுத்தது. (வழக்க றிஞர் ஷாதான் ஃபராசத் மிகத் திறமையாக வாதாடி னார்). ஒரு பைசா கூட தேர்தல் பத்திர நன்கொடை வாங்காத கட்சியாகவும் திகழ்ந்தது. அதற்கான சிறப்பு வங்கிக் கணக்கை கூட துவங்க மறுத்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. கட்சி தாக்கல் செய்த பொதுநல வழக்கை அனுமதிக்கலாமா வேண்டாமா என்கிற விவாதம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, மார்க்சிஸ்ட் கட்சி அதில் நன்கொடை வாங்காத வர்கள் என்பது தெரிந்த பிறகே தலைமை நீதிபதி சந்திரசூட் நமது வழக்கை அனுமதித்தார்.
பாஜகவின் காய் நகர்த்தல்
தேர்தல் பத்திரம் என்பது, ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு கோடி வரைக்குமான டினாமினேஷனில் வரு டத்துக்கு நான்கு முறை வெளியிடப்படும். கொடுத்த வர் உள்ளிட்ட விவரங்களின் ரகசியம் காக்கப்படும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டுமென்றால் தற்போது அமலில் உள்ள பல சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அதைத்தான் 2017ல் பாஜக அரசு நிதி சட்டம் என்ற பெயரில், பண மசோதா வடிவத்தில் நிறை வேற்றியது. பண மசோதா வடிவம் என்றால் மாநிலங்க ளவையின் ஒப்புதல் தேவை இல்லை. மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் பாஜக காய்களை நகர்த்தியது. தேர்தல் பத்திரத் திட்டத்தை ஏதுவாக்க வருமான வரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனி கள் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம், வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் திருத்தப்பட்டன. அனைத்து திருத்தங்களுமே நன்கொடை யாரால், யாருக்கு கொடுக்கப்பட்டது என்கிற விவரத்தை வெளியிட வேண்டியது இல்லை என்றே கூறின. கார்ப்பரேட் நன்கொடைக்கான உச்சவரம்பு நீக்கப்பட்டது. நன்கொடை கொடுக்கும் கம்பெனிகள் மூன்றாண்டுகள் சம்பாதிக்கும் நிகர லாபத்தில் 7.5 சதவிகிதம் வரை மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம் என்ப தெல்லாம் நீக்கப்பட்டது. நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. எல்லாமே மூடு மந்தி ரமாக இருக்கும் இந்தத் திட்டம், வெளிப்படைத் தன்மைக்காக, அனைத்து கட்சிகளும் சம நிலையில் இருப்பதற்காக, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்படுகிறது என்கிற மெகா பொய்யை அன்றைக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி தேன் தடவிய வார்த்தைகளால் வர்ணித்தார்.
தேர்தல் பத்திர எதிர்ப்பில் ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட கடைசி வரை தேர்தல் பத்திரம் குறித்த எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தது. ரிசர்வ் வங்கியோ அல்லது அதனுடைய அனுமதியின் பெயரில் ஒன்றிய அரசோ மட்டுமே இப்படிப்பட்ட பத்திரங்களை வெளியிடலாம் என்கிற அதிகாரம், பாரத ஸ்டேட் வங்கியை வெளியிட வைத்ததன் மூலம் பலவீனப்படுத்தப்பட்டது. யார் யாருக்கு கொடுத்தார் என்கிற விவரம் வெளி வராவிட்டால் அது பண மோசடிக்கு வழிவகுக்கும்; கருப்பு பணம் மற்றும் எல்லை தாண்டிய கள்ள நோட்டு புழக்கத்தை அதிகரிக்கும்; ரொக்கமாகத்தான் நன்கொடை கொடுக்கக் கூடாது என்றால் ஏற்கனவே உள்ள காசோலை, டிமாண்ட் டிராஃப்ட், டிஜிட்டல் பேமென்ட் வழிகளே போதுமே, தேர்தல் பத்திரம் எதற்கு? இப்படிப்பட்ட கேள்விகளை ரிசர்வ் வங்கி கடிதம் மூலமாக ஒன்றிய அரசிடம் எழுப்பியது. ஒன்றிய அரசு அசைந்து கொடுக்க மறுக்கவே, சில நிபந்தனைகளையாவது விதியுங்கள் என மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியது. ஒன்றிய அரசின் கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி உடனுக்குடன் பதில் அனுப்பி யும், ரிசர்வ் வங்கிக்கு பதில் தாமதமாகவே வந்தது. அதற்குள் நிதிச் சட்டத் திருத்த மசோதா தயாராகி விட்டது என்று ஒன்றிய அரசு எட்டடி பாய, பொரு ளாதார விவகாரத்துறை செயலர், ரிசர்வ் வங்கி மறைமுக ஒப்புதலைத் தெரிவித்தது எனக் கோப்பில் குறிப்பெழுதி பதினாறடி பாய்ந்திருக்கிறார். கடைசியில் “ரிசர்வ் வங்கிச் சட்டத்தையே” திருத்தித் தான் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு வழி வகுக்கப் பட்டது. தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற, அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் நடந்த கடிதப் பரிமாற்றம், ரிசர்வ் வங்கியின் ஆட்சேபணையை, கவலையை ஒன்றிய அரசு எவ்வாறு காலில் போட்டு மிதித்தது என்கிற ஏராளமான தகவல்களைப் பொது வெளியில் வைக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபணை
தேர்தல் ஆணையமானது, எல்லையற்ற கார்ப்பரேட் நிதி அரசியல் கட்சிகளுக்கு வருவது என்பது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும், ஷெல் கம்பெனிகள் உருவாக வழிவகுக்கும், நியாயமான சுதந்திரமான தேர்தலை பாதிக்கும் என ஆட்சேபணையைப் பதிவு செய்தது. இவற்றையெல்லாம் மீறித்தான் பாஜக அரசு தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. உச்ச நீதிமன்றம் கூறியபடி தேர்தல் பத்திர நன்கொடை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது என்கிற முழு விவரம் வந்தால் அரசு கொடுத்த ஆதாயமும் கார்ப்ப ரேட்டுகளின் கைம்மாறும் நிச்சயமாக வெளிச்சத்து க்கு வரும். அதைத் தவிர்க்க என்ன வாதத்தை முன் வைக்கிறார்கள் என்றால், ரகசியம் காக்கப்படும் என்கிற அடிப்படையிலேயே நன்கொடை அளிக்கப் பட்டது, இப்போது அந்த ரகசியத்தை வெளியிடுவது என்றால் அதில் நியாயம் இல்லை என்கின்றனர். இந்நிலையில் தான்உச்சநீதிமன்றத்திடம் பாரத ஸ்டேட் வங்கி, விவரம் வெளியிட ஜுன் 30 வரை அவகாசம் கேட்டிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. ஒன்றிய சட்ட அமைச்சர், உச்சநீதிமன்ற தீர்ப்பை பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும், மறுபரிசீலனை மனு தாக்கல் செய்வதா என்பதை விவாதிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். நன்கொடை யாரால், யாருக்கு, எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது தேர்தல் நேரத்தில் வெளிவருவது மோடியின் மிஸ்டர் கிளீன் பிம்பத்தை பாதிக்கும் என பாஜக அஞ்சு கிறது. குசேலர் கிருஷ்ணனுக்கு அவல் கொடுத்த சம்பவம் இப்போது நடந்திருந்தால் யாராவது பொது நல வழக்கு போட்டு இருப்பார்கள், நீதிமன்றமும் கிருஷ்ணர் லஞ்சம் வாங்கினார் எனத் தீர்ப்பளித்தி ருக்கும் என்று பிரதமர் புலம்பியதைப் பார்க்கும் போது, சற்று பலத்த அடி தான் விழுந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.