மக்கள் நலனில் அக்கறை இல்லா அரசை எதிர்த்துபோராட்டம்
மக்கள் நலனற்ற அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என நைஜீரிய மக்கள் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் உணவு பணவீக்கம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 3.2 கோடி பேர் வறுமையில் உள்ளனர். எனினும் அரசாங்கம் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக போராடும் மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை.
அமெரிக்க ராணுவ ஜெனரல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம்
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று தான் என்றாலும் இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் பகுதியாக இந்த பயணம் அமையும் என கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் தங்குமிடங்களில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்
மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் முன்பகுதி யில் கூடாரம் அமைத்து தங்கி இருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் மட்டும் தங்குமிடங்கள் மீது தாக்குதல் நடத்தி 17 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. இதே போல காசாவின் வடக்குப் பகுதிகளில் ஐந்து பேரை படுகொலை செய்துள்ளது.