எண்ணற்ற போராட்டங்களாலும் தியாகங்களாலும் நிறைந்தது இந்திய மாணவர் சங்கத்தின் 53 ஆண்டு கால வரலாறு. ‘மதவாதம் தகரட்டும்’ என்று எழுதியதற்காக கொல்லப்பட்டார் 21 வயதேயான அன்பு தோழன் அபிமன்யு. கல்வி நிலையங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்டிட போராடிய தோழன் சுதிப்த்தோ குப்தா 23 வயதில் கொல்லப்பட்டார். மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் ராகிங் மற்றும் சாதிய பாகுபாட்டை எதிர்த்து போராடியதற்காக தோழர்கள் சோமு - செம்பு கொல்லப்பட்ட போது அவர்களின் வயது 21. எண்ணற்ற இளம் தோழர்கள் தங்கள் வாழ்வை இழந்து செய்த தியாகத்தையும் சிந்திய ரத்தத்தையும் தாங்கி கம்பீரமாக நிற்கிறது இந்திய மாணவர் சங்கம். “பாலுக்கு அழாத குழந்தை கல்விக்கு ஏங்காத மாணவன் வேலைக்கு அலையாத இளைஞர்களை கொண்ட இந்தியாவே சுதந்திர இந்தியா” என்று முழக்கமிட்டார் ‘பகத்சிங்’. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகி யும் இவற்றை நாம் அடைந்து விட்டோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. பகத்சிங் கேட்ட இந்தியா, எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் இந்தியா “சோசலிச இந்தியா”. அதை உருவாக்குவதற்கான போராட்டத்தை தான் தொடர்ந்து 53 ஆண்டுகளாக “சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்” என்னும் பதாகையின் கீழ் இந்திய மாணவர் சங்கம் நடத்தி வருகிறது. 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 27 முதல் 30 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய மாணவர் சங்கம் (SFI) உருவாக காரணமாக அமைந்தது.
சமூகமும் கல்வியும்
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி பெறுவது பிறப்புரிமையாகும். இந்த பிறப்புரிமை ஒரு மனிதனுக்கு மறுக்கப்படும் பொழுது அங்கு சமூக அநீதி ஆதிக்கம் செலுத்துகிறது என்றே கருதவேண்டும். இந்திய சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கு அதாவது சூத்திரர்களுக்கும் பஞ்சமார்களுக்கும் கல்வி முழுமையாக மறுக்கப்பட்டது. ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் இந்தியாவில் தாய்மொழி கல்விக்கு மாறாக ஆங்கில வழி ‘மெக்காலே கல்விக் கொள்கை’ திணிக்கப்பட்டது. தங்களுக்கான வேலை ஆட்களை உருவாக்க ஆங்கிலேயர்கள் கல்வியை அளித்தனர். விடுதலைக்கு பின்னர் கல்வி நவீனமயமாக்கலை ஊக்குவிப்பதற்கு டி.எஸ். கோத்தாரி தலைமையில் 1964ல் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் சமச்சீர்கல்வி, அருகாமைப் பள்ளிகள், கல்விக்கு ஜி.டி.பி.யில் 6 சதவீதத்தை ஒதுக்கீடு செய்தல் போன்ற பரிந்துரைகளுக்கு மாறாக தங்களுக்கு உகந்த மும்மொழிக் கொள்கை, பல்கலைக்கழக நிர்வாக முறைகளில் தேவைப்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஆலோசனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1995இல் உலக வர்த்தக அமைப்பானது கல்வி மருத்துவம் உட்பட அனைத்து சேவைகளும் சந்தை சரக்காக மாற்றியது. இதற்கு ஏற்ற வகையில் காட் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இதற்குப் பிறகு இந்தியாவில் எல்லா துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடுகள் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டன. அதில் கல்வியும் விதிவிலக்கல்ல. இது கல்விக் கொள்கையிலும் பிரதிபலிக்க தொடங்கியது. தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு உறைவிட பள்ளிகள் போன்றவை புற்றீசல் போல் உருவெடுத்தன. கல்வி பெறுவது அனைவரின் உரிமை என்பதற்கு மாறாக பணம் படைத்தவர்களுக்கான சிறப்பு அந்தஸ்தாக அது மாற்றப்பட்டது. இதைத்தான் நாம் அநீதி என்கிறோம். இந்த அநீதியை எதிர்த்த போராட்டத்தை சங்கம் உருவான நாள் முதல் “படிப்போம், போராடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை 2020
கல்வியின் மீது தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ஒன்றிய பிஜேபி அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020லும் கல்வியின் அடிப்படை கட்டுமானத்தையே சீர்குலைப்பதாக அமைந்திருக்கிறது. 5+3+3+4 என்ற முறையில் மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வுகளை நடத்தி மாணவர்களை வடிகட்டி கல்வி நிலையங்களை விட்டு வெளியேற்றுவது, வெளியேற்றப்படும் மாணவர்களை தொழிற்கல்வி என்ற பெயரில் குலத்தொழிலில் ஈடுபடுத்துவது, மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணிப்பது, நீட் கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை கொண்டு வருவதன் மூலம் தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவித்து கல்வியை வியாபாரமாக மாற்றிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய உயர்கல்வி கட்டமைப்பு வரைவு (NHEQF) என்ற உயர் கல்விக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டம் மருத்துவம் தவிர்த்து அனைத்து வகையான உயர்கல்வியையும் இனைத்து ஒருங்கிணைந்த படிப்பாக உருவாக்கி, சந்தைக்கான உழைப்பாளிகளை உருவாக்க முனைகிறது. இணையவழி கல்வியை ஊக்குவிப்பதோடு தொலைதூரக் கல்வியை இணையவழி கல்வியோடு இணைக்க உள்ளது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி, பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி கல்விக் கட்டணத்தை உயர்த்துவது, பல நுழைவு மற்றும் வெளியேறும் முறையை திணிப்பதன் மூலம் இடைநிற்றலை அதிகாரப்பூர்வமாக்குவதையே இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை
தற்போது ஒன்றிய பாஜக அரசானது கல்வி நிலையங்களில் ஜனநாயகபூர்வமான விவாதங்களையும் பகுத்தறிவு சிந்தனைகளையும் ஊக்குவிப்பதற்கு மாறாக சனாதன கொள்கைகளையும் சிறுபான்மையினரின் மீதான வெறுப்பையும் மாணவர்களிடம் வளர்க்க முற்படுகிறது. கல்வியை சேவை பட்டியலில் இருந்து வணிகப் பட்டியலுக்கு மாற்றும் நோக்கத்தோடு உதவி தொகையை வழங்குவது அரசின் கடமை இல்லை என்று கூறி சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகைகளை முழுமையாக நிறுத்தி விட்டது தற்போது ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகையும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகையும் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்கும், பள்ளி கல்வியின் மீதான நிதிச்சுமையை குறைப்பதும், (pre matric) உதவித்தொகையின் நோக்கமாகும். இந்தத் திட்டம் அவர்களின் கல்வி தகுதிக்கு அடித்தளமாக அமைவதோடு, வேலைவாய்ப்பு களத்தில் ஒரு சம நிலையையும் வழங்கும். இந்தியாவில் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு கூட இடமில்லாமல் இருக்கும் சூழ்நிலையில், அவர்களின் கல்வி கனவிலும் கை வைப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
விஸ்வகர்மா யோஜனா திட்டம்
இந்தியாவின் 76 வது சுதந்திர தின விழாவில் இந்தியாவை பின்னோக்கி இழுக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் அறிவிக்கிறார். தமிழகத்தில் ராஜாஜி கொண்டு வந்ததைப் போலவே குலக்கல்வி ஊக்குவிப்பதே இதன் நோக்கமாக உள்ளது. பாரம்பரியம் என்ற பெயரில் அப்பட்டமான சாதியப் படிநிலை அடிப்படையாக கொண்ட மநுவாத வர்ணாசிரம அதர்மத்தை மீண்டும் நிலைநாட்ட முயலும் முயற்சியே இதுவாகும். கல்வியில் காவிமயம் ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக ஆர்எஸ்எஸ் நபர்களை நியமிப்பதன் மூலம் அவர்களின் கருத்தியல் பிரச்சாரத்தை சுலபமாக மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.
பெண் கல்வி
கல்வி நிலையங்களிலும் மாணவிகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கல்வி நிலையங்களில் அமைக்கப்படும் உட்புகார் (ICC) குழுக்களும் பெயரளவிலேயே உள்ளது. பல இடங்களில் இக்குழுக்களும் அமைக்கப்படுவதில்லை. பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கழிப்பறை வசதி கூட முறையாக இல்லாத சூழல் உள்ளது. குழந்தை திருமணம், கல்வி இடைநீற்றல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மாணவிகளுக்காக வழங்கப்படும் கல்வி உதவித் தொகையும் ஆண்டுக்கு ஆண்டு ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. இந்த அபாயகரமான சூழலில் இன்று கல்வியை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரும் கடமை மாணவர் சமூகத்தின் முன் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி; அனைவருக்கும் வேலை’ என்ற இலக்கை உறுதிப்படுத்தவும் ஒரு ஜனநாயக, அறிவியல் பூர்வமான, முற்போக்கு கல்வி முறையை நிலைநாட்டிடவும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. தனியார்மயக்கத்தையும் நவ தாராளமய கொள்கையும் பாசிசத்தையும் எதிர்த்த போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்போம். நமது செயல்பாடுகளை அதிகரிப்போம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.