articles

img

விடுதலைப் போராட்ட வீரர் வி.ராமசாமி - எஸ்.கந்தசாமி

விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தியாகசீலர்  தோழர் வி. ராமசாமி அவர்களின் அப்பழுக்கற்ற பொது வாழ்வும், உழைக்கும் மக்களின் உரிமைக்கான சமரசமற்ற போராட்ட வரலாறும் என்றென்றும் நம்மை வழி நடத்தும்!

நாமக்கல் மாவட்டத்தில் ‘வி.ஆர்’ என்று அன்புடன் மக்களால் அழைக்கப்பட்ட  வி. ராமசாமி 1925 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 8 ஆம் நாள் திருச்செங்கோடு மோலிப்பள்ளி கிராமத்தில் வேலாயுதம் நாடார் - மாறாயி தம்பதியரின் எட்டாவது மகனாக பிறந்தார்.

காந்தி ஆசிரமத்தில்... 
வறுமையின் பிடியில் இருந்தது இக்குடும்பம். ராமசாமிக்கு ஏழு வயதாகும் பொழுது,  திருச்செங்கோடு அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் மூதறிஞர் ராஜாஜி அவர்களால் துவங்கி நடத்தப்பட்டு வந்த காந்தி ஆசிரமத்தில் சேர்த்து விடப்பட்டார். ஐந்து வருட காலம் ஆரம்பக் கல்வியையும் ராஜாஜி போன்ற  காந்திய தலைவர்களின் போதனைகள், அறிவுரைகள், வழிகாட்டுதல்களை பெற்று வளர்ந்தார். ஆசிரம வேலை களை அங்கே இருப்பவர்களே செய்து கொள்ள வேண்டும். ராஜாஜி உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து  செய்வார்கள். சாதி,மத வேறுபாடுகள் அங்கே கிடை யாது. காந்தியின் கட்டளைப்படி ஆசிரமவாசிகள் தீண்டா மை ஒழிப்பு இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார்கள். சேரிகளுக்கு செல்வது, அங்கே சேவை பணிகளில் ஆசிரமவாசிகளுடன் ராமசாமியும் ஆர்வமுடன் செயல்பட்டார். இந்த  வாழ்க்கை முறையானது இளம்  ராமசாமியை மிகவும் ஒழுக்கமான மாணவராக மாற்றியது.

ஆசிரமத் தலைவர்களும் அங்கிருந்த மாணவர் களும் சுற்று வட்டார கிராமங்களில் குடிப்பழக்கத்திற்கு எதி ராக பிரச்சாரம் செய்வார்கள். ஆசிரம சிறுவர்கள் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக நின்று அங்கே குடிக்க வரு பவர்களை கையெடுத்து கும்பிட்டு காலில் விழுந்து குடிக்க வேண்டாம் என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய “அரிய காந்தி சொற்படி குடிகெடுக்கும் கள்ளினை குடிப்பதை தடுப்பதே கோடி கோடி புண்ணி யம்” என்ற பாடலை பாடிக்கொண்டே கெஞ்சுவார்கள். ஒரு நாள் ராமசாமி இந்த பாடலை பாடிக் கொண்டு மணி யனூர் கள்ளுக் கடைக்கு குடிக்க வந்த ஒரு நபரின் காலில் விழுந்து கள்ளு குடிக்க வேண்டாம் என கெஞ்சி னார். கோபம் கொண்ட அந்த நபர் கீழே கிடந்த ஒரு கூரான கல்லை எடுத்து ராமசாமியின் முன் மண்டையை பிளந்தார். அக்காயத் தழும்பு அவரது நெற்றியில் போராட்டத் தழும்பாய் அடையாளப்பட்டிருந்தது. 1937 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சிப் போக்கு  அவரது ஆசிரம வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

அரசியலும் சன்மார்க்க சங்கமும்
அவருக்குள் இருந்த தேசிய இயக்க ஆர்வத்தால் நாலனா செலுத்தி காங்கிரஸ் கட்சியின் உறுப்பின ரானார்.  திருச்செங்கோடு, விருதுநகர் போன்ற இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் கலந்து கொண்டார். கதர் ஆடை மட்டுமே அணிவார். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய வெள்ளை யனே வெளியேறு போராட்டம் நடத்திய காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்செங்கோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வி. ராமசாமியும் கலந்து கொண்டார். இளம் வயது என்பதால் இவர்  கைது செய்யப்படவில்லை. அதே காலத்தில்  வள்ளலாரின் பக்தராகி அருட்பாக்களை மனப்பாடமாக படித்து கூட்டங்களிலும் பாடுவார். வீட்டில் தறி நெசவு செய்து கொண்டு திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராகவும் செயல்பட்டார். சைவ சித்தாந்தம், சமூக நீதி, நாட்டு விடுதலை ஆகிய மூன்றும் அவருக்கு விருப்பமானவை யாக விளங்கின. கம்யூனிஸ்டுகளை மாஸ்கோ கைக்கூலிகள் என அக்காலத்தில் விமர்சித்து வந்தார்.

அரசியல் பாதையை மாற்றிய கம்யூனிஸ்டுகள்
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. டி.பிரகாசம் முதல்வரானார். ராஜாஜியைப் போன்றே மதுவிலக்கு கொள்கை உடையவரான பிரகாசம் பனையேறும் தொழிலாளிகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். கள் இறக்குவதை ராஜாஜி தடை செய்த பின்பு பதநீர் இறக்கி பிழைத்து வந்த பனையேறும் தொழிலாளர்கள் பதநீரும் இறக்கக் கூடாது  என்று பிரகாசம் சட்டம் கொண்டு வந்ததால், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் யாரும் மரம் ஏடக்கூடாது என்று ஒரு ஆணை பிறப்பித்தார்.

அன்று சங்ககிரி உள்ளிட்ட திருச்செங்கோடு தாலுகா வில் மூன்றில் ஒரு பகுதி பனையேறும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். அவர்களைத் திரட்டி கம்யூனிஸ்ட் கட்சி  ஒரு போராட்டம் நடத்த திட்டமிட்டது. டி.எஸ். அர்த்த னாரி, எஸ்.பி. ராமு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதில் முன் நின்றனர். வி. ராமசாமியும் அவர்களோடு சேர்ந்து செயல்பட்டார். கம்யூனிஸ்டுகள் தலைமையில் போராட்டக் களத்தில் நின்ற பனையேறும் தொழி லாளிகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மூன்று நாள்  அவகாசம் கொடுத்து எச்சரிக்கையை முன் வைத்தார் கள். ஆயிரக்கணக்கானவர்கள் திருச்செங்கோட்டில் ஊர்வலம் நடத்தினர்.

இதைக் கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பதநீர் இறக்க அனுமதி கொடுத்து புதிய உத்தர விட்டார். இப்போராட்டத்தின் விளைவாக செங்கொடி கிராமப்புறங்களுக்குள் பறக்க ஆரம்பித்தது. ராமசாமி யின் சிந்தனைக்குள்ளும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பின்பு அது வெறுமனே ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல;  சமூக பொருளாதார பிரச்சனை என்பதை அவர் காண  முடிந்தது. கம்யூனிஸ்டுகள் அதை சாதி பிரச்சனையாக கருதாமல் புதிய அணுகுமுறை மூலம் தீர்த்தது அவர் சிந்தனையில் பதிந்தது. மாஸ்கோ கூலிகள் என்றும் முன்புதான் அவர்களை நிந்தித்தது தவறானது என்று முடிவுக்கு வந்தார். திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்டுகள் மரமேறும் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.பி.ராமு அவர்களை யும் செயலாளராக வி. ராமசாமி அவர்களையும் தேர்வு செய்தனர். இதன்பின் வி.ராமசாமி கம்யூனிஸ்டுகளுடன் நெருங்கிப் பழகலானார்.

ஜனசக்தி உள்ளிட்ட கம்யூ னிஸ்ட் பிரசுரங்களுக்கு வாசகரானார். கட்சிக் கூட்டங் களில் தொடர்ந்து கலந்து கொண்டார். கட்சித் தலைவர்களுடன் விவாதித்தார். இதன் விளைவாக அவர்  தீவிர கம்யூனிஸ்ட் அனுதாபியானார். வி. ராமசாமியை கம்யூனிஸ்ட் ஆக வார்த்தெடுத்ததில் டி. எஸ். அர்த்தனாரி, டி.ஆர். சண்முகம், எஸ்.பி. ராமு ஆகிய மூன்று கம்யூ னிஸ்ட் தலைவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை
1948 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது நூற்றுக்கணக்கான கம்யூ னிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏராள மானவர்கள் தலைமறைவாக சென்றனர்.  கட்சித் தடையை எதிர்த்து வெள்ளைக் கொடி பிடித்து சமாதான ஊர்வலம் நடத்த வேண்டும் என்று  ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் சர்க்கரை செட்டியார்  அறைகூவல் விடுத்தார். அதனை ஏற்று திருச்செங்கோடு நகரில் அக்டோபர் 21ஆம் தேதி அன்று டி.எஸ். அர்த்த னாரி, டி.ஆர். சண்முகம், வி. ராமசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலம் நடத்தி வட்டாட்சி யரிடம் மனு கொடுத்தனர். வி. ராமசாமியின் செயல்பாடு களை கவனித்து வந்த அரசாங்கம் 1949 ஆம் ஆண்டில் அவரை கைது செய்து திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தது.

அங்கு பலத்த தாக்குதலுக்கு உள்ளானார்.  அதன்பிறகு சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கும் அவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது சேலம் மத்திய சிறையில்  350 க்கு மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் அடைக்கப்பட்டி ருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரா வையும், கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆறு மாத தண்ட னையில் இருந்து 20 ஆண்டு தண்டனை வரை பெற்றவர்கள். சிறை அதிகாரிகளோ கொடுமையே உருவாக இருந்தனர். ஒரு கட்டத்தில் சிறை அதிகாரிகள் இடும் உத்தரவுகளை ஏற்க முடியாது என கம்யூனிஸ்டு கள் போராடினார்கள்.  இதனால் ஆத்திரம் அடைந்த சிறை நிர்வாகம் கம்யூனிஸ்ட் கைதிகள் மீது ஒரு பெரும் தாக்குதல் நடத்த  திட்டமிட்டது. 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம்  நாள் காவலர்கள் கம்யூனிஸ்டுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை வெறித் தாண்டவம் ஆடினார்கள்.  

இதில் திருச்செங்கோட்டை சேர்ந்த காவேரி முதலியார் உள்ளிட்ட 22 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அப்போது காவேரி முதலியாரின் மகன் சேஷாசலம் விசார ணைக் கைதியாக வி. ராமசாமியுடன் அடைக்கப்பட்டி ருந்தார். தந்தையின் உடலைக் கூட பார்க்க சேஷாச லத்தை கொடூர மனம் படைத்த காவல்துறையினர் அனு மதிக்கவில்லை. இக்காலகட்டத்தில் தான் எம்.வி. சுந்தரம் முன்னிலையில் வி. ராமசாமி கட்சி உறுப்பினரானார். ராமசாமி உட்பட 33 பேர் மீது அரசாங்கம் வழக்கு தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைத்தது. காவல்துறையினரால் சாதியை சொல்லி அடித்து உதைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு மூன்றரை வருட சிறை வாசத்திற்கு பின் ராமசாமி 1952 ஆம் ஆண்டில் விடுதலையானார்.

மனைவியின் பேரன்பும், புரிதலும்
1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று  கம்யூனிஸ்ட் தலைவர் டி .எஸ். அர்த்தநாரி தலைமை யில் ராமசாமி - அருக்காணி திருமணம் எளிய முறையில் சீர்திருத்த திருமணமாக நடைபெற்றது. கட்சி  வேலையில் ஆரம்ப கட்டத்தில் ஊதியம் எதுவும் இல்லாத நிலையில் குடும்ப வாழ்க்கையை அருக்காணி மிகுந்த சிரமத்துடன் தான் நடத்த வேண்டியிருந்தது. அவர் விவசாயக் கூலி வேலைக்கு சென்று மகள் பவள வள்ளி யையும் மகன் வேலாயுதத்தையும் படிக்க வைத்தார். புள்ளிகார் மில் பஞ்சாலை தொழிலாளர் சங்கம், நெடுஞ்சாலை தொழிலாளர் சங்கம் பலம் அடைந்த பின் ராமசாமிக்கு கட்சியின் சார்பில் மாதாந்திர அலவன்ஸ் உறுதி செய்யப்பட்டது.

திருமணத்திற்கு பின் ராமசாமி பலமுறை சிறை செல்ல வேண்டி இருந்தது 1965-66 ஆம் ஆண்டுகளில் ஓராண்டுக்கு மேல் பாதுகாப்பு கைதியாக இருந்தார். 1976 ஆம் ஆண்டில் 11 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை  வாழ வேண்டி இருந்தது. தனது கணவரின் மீதான பேரன்பினாலும் அவரது அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு இருந்ததாலும் சிரமங்கள் அனைத்தை யும் அருக்காணி தாங்கிக் கொண்டார். தனது மனைவி யின் மிகச் சிறந்த ஒத்துழைப்பு இல்லை என்றால் தனது அரசியல் வாழ்க்கை இந்த அளவுக்கு இருக்க  முடியாது என்று ராமசாமி மன நெகிழ்வுடன் குறிப்பிடுவார்

விவசாயிகள், ஆதிவாசி மக்களுக்கான பணிகள்
1948 ஆம் ஆண்டில் ஜமீனுக்குள்ள சொந்த நிலம் போக மீதியுள்ள நிலங்களை விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்து போராடியது.  டாக்டர் சுப்பராயன் குடும்பத்திற்கு சொந்தமான குமாரமங்கலம் மோலிப்பள்ளி சத்து நாயக்கன்பாளையத்தில் இருந்த நிலங்களில் எஸ்.பி. ராமு வி.ராமசாமி ஆகியோர் தலைமையில்  இயக்கம் நடத்தினர். ஜமீன் ஒழிப்பு சட்டப்படி அந்த நிலத்தை விவசாயிகள் சங்கம் குத்தகைதாரருக்கு வாங்கி கொடுத்தது. 300 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை கிடைத்தது.

சேலம் மாவட்டத்தில் விவசாய சங்கத்தை உரு வாக்கும் நேரத்திலேயே சங்கத் தலைவர்கள் கொல்லி மலை, கல்வராயன் மலை, பச்சைமலை  ஆகிய இடங்களில் இருந்த ஆதிவாசி மக்களின் அடிப்படைத் தேவைகள், அனுபவ நிலங்களை பாதுகாப்பதற்கான, கந்து வட்டி கொடுமைகளை எதிர்த்த, வனத்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளை எதிர்த்த இயக்கங்களை நடத்தினார்கள்.  ராமசாமியும் இதர தோழர்களும் கட்டுச் சோறு எடுத்துக்கொண்டு மலைகளுக்கு நடந்தே  சென்று வாரக் கணக்கில் அங்கு தங்கி இருந்து சங்கம் அமைத்து மலைவாழ் மக்களின்  உரிமைகளை பாது காத்தார்கள். ஆத்தூரில் நடைபெற்ற நிலப் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்த ராமசாமி பல நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நிலம் கிடைப்பதில் பங்கு வகித்தார். 

தொழிலாளர் வர்க்க நலன்களை பாதுகாக்க 
1953-54 ஆம் ஆண்டுகளில் திருச்செங்கோடு புள்ளிகார் மில்லில் (மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அண்ணன் வையாபுரி முதலியாருக்கு சொந்தமான மில்) பஞ்சாலை தொழிலாளர் சங்கம்  துவக்கப்பட்டது. அதன் தலைவராக டி.எஸ். அர்த்தனாரி யும் செயலாளராக வி. ராமசாமியும் செயல்பட்டனர்.  1966 ஆம் ஆண்டு கடலூர் சிறையில் இருந்து விடுதலை யான வி.ராமசாமி தொழிலாளர் வர்க்கத்தின்  மகத்தான தலைவர் ஏ.நல்லசிவன் அவர்களின் ஆலோசனையின் பேரில் சங்ககிரியில் சிமெண்டாலை தொழிலாளர் சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  1971 ஆம் ஆண்டு சிமெண்ட் ஆலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. திமுக தொழிற்சங்க தலைவராய் இருந்த கே.கருணாகரன் உள்ளிட்ட 19 பேர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர் சிஐடியு சங்கம் இங்கே உருவாக்கப்பட்டது. அதை உருவாக்குவதிலும்  பலப்படுத்துவதிலும் ராமசாமி  முன் நின்றார்.  கருணாகரன் உள்ளிட்ட பல முக்கிய மான திமுக சங்கத் தலைவர்களும் தொழிலாளிகளும் சிஐடியு வில் தங்களை இணைத்துக் கொண்டனர். கருணா கரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பள்ளிபாளையம் சேஷ சாயி காகித ஆலையில்  கே.ஆனந்த நம்பியார், வி. ராமசாமி ஆகியோர் தொடர் முயற்சி செய்து சங்கம் அமைத்தார்கள். தொழி லாளர்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு செய்தனர்.

நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சுவார்த்தையில் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு, குடியிருக்க வீடுகள் தரப்படுதல் போன்ற கோரிக்கைளை அனந்தம்பி யாரும் ராமசாமியும் வலியுறுத்தினர். நிர்வாகம் வேறு வழியின்றி அவற்றிற்கு இசைந்தது. தொழிலாளிகளுக்கு மாதம் 11 ரூபாய் அதிக சம்பளம் கிடைத்தது. தொழி லாளிகளுக்கு குடியிருப்பு கட்டித் தர நிர்வாகம் சம்மதித்தது இதைத்தொடர்ந்து தான் பேப்பர் மில் காலனி உருவானது. காகித ஆலை போராட்ட வெற்றி  அதே  பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர் களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விசைத்தறி தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் தலைவ ராக வி. ராமசாமியும், செயலாளராக அரசப்பனும் செயல்பட்டனர். விசைத்தறி தொழிலாளர்களின் நலன் காக்க வலுவான போராட்டங்களை நடத்தினார் ராமசாமி.

 1989 ஆம் ஆண்டில் வி. ராமசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது விசைத்தறி தொழிலாளி களுக்கு சட்ட பாதுகாப்பு தொழில் பாதுகாப்பு மற்றும் 1989-90 ஆம் ஆண்டுக்கான போனஸ் கோரி போராட்டம் தொடங்கியது. வேலை நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கும் முதல் நாள் பள்ளிபாளை யத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு  கொண்ட கூட்டத்தில் வி.ராமசாமி, கே.நாராயணன் உரையாற்றினார்கள். அடுத்த நாள் வேலை நிறுத்தம் செய்து அனைவரும் உண்ணாவிரத பந்தலுக்கு வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட முதலாளிகள் உண்ணாவிரதத்தை சீர்குலைக்கவும், வேலை நிறுத்தத்தை தடுக்கவும் உண்ணாவிரதப் பந்தலுக்கு தீ வைத்தனர்.  வி. ராமசாமியை அடித்துக் கொன்று விட வேண்டும் என்பதற்காக முதலாளிகள் 300 முதல் 400 இருசக்கர வாகனங்களில் வெறிபிடித்து அலைந்தனர். தகவலை கேள்விப்பட்ட தோழர்கள், ராமசாமியை பத்திர மாக ஈரோட்டுக்கு அழைத்துச் செல்ல படகில் ஏற்றி காவேரி ஆற்றில் வரும்போது,   படகு கவிழ்ந்து ராமசாமி நீரில் விழுந்தார். கரையிலிருந்த மக்கள் விரைந்து சென்று ராமசாமியைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.இந்தப் போராட்டத்திற்குப்  பின் முதலாளிகள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். உடன்பாடு ஏற்பட்டது.

பன்முகப்பட்ட பணிகள்
 தொழிற்சங்க தலைவரான ராமசாமி 1953 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை மோலிப்பள்ளி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதேபோன்று சேலம்  மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சங்கத்தின் மோலிப் பள்ளி கிராம தலைவராகவும்,  சேலம் மாவட்ட  கைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு உள்ளார். 1989 ஆம் ஆண்டில் திருச்செங் கோடு தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வி.ராமசாமி சிறப்பாக பணி யாற்றினார். இதர பகுதி மக்களின் பிரச்சனைகளையும் அவர் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார். தொழிலாளி வர்க்க லட்சியத்திற்காக ஐந்தரை ஆண்டு சிறைவாசம்,  ஒன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட தோழர் வி.இராமசாமி தன் வாழ்நாளும் அதே லட்சி யத்திற்கே என பெருமை பொங்க குறிப்பிடுவதுண்டு.

என்றென்றும் வழிகாட்டியாய்...
அப்பழுக்கற்ற எளிய வாழ்க்கை, அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல், வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு எத்தகைய தியாகத்தையும் செய்து உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் மனப்பாங்கு, கட்சி ஊழியர்களை தலைவர் களாக உருவாக்க வேண்டும் என்ற அணுகுமுறை, ஏழை எளிய மக்கள் தலித் மக்கள் மீது அதிக பாசம் பற்று கொண்டு தோழமையோடு பழகும் குணம், கட்சி அமைப்பு மீது அளவற்றபற்றும் மரியாதையும் கொண்டு வாழ்ந்த கம்யூனிஸ்ட் போராளி தோழர் வி.ராமசாமி அவர்களின் கம்யூனிஸ்டு லட்சியங்களை அவரது நூற்றாண்டில் முன்னெடுப்போம்.

கட்டுரையாளர்:  சிபிஎம் மாவட்டச் செயலாளர், நாமக்கல்.