1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் (ஆகஸ்ட் 6) ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணு குண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா.
குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த அமெரிக்க போர்க்கப்பலான அகஸ்டாவிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன் அறிவித்தார். இதற்கு முன்பாக உரு வாக்கப்பட்ட மிகப் பெரிய குண்டைவிட, 2,000 மடங்கு பெரிய குண்டு இதுவென ட்ரூமன் கூறினார்.
ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு “லிட்டில் பாய்” எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. முந்தைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியை அந்த அணுகுண்டு கொண்டிருந்தது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணு குண்டு நாசம் செய்தது.
உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B - 29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது. குண்டு விழுந்த இடத்திலிருந்து ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் அந்த நொடியே புகையோடு புகையாய் சுவடே தெரியாமல் மடிந்து காற்றில் கலந்தார்கள்.
மாபெரும் புகை எழுந்ததையும் மிகப் பெரிய தீ சுவாலைகள் பரவியதையும் பார்த்ததாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் அழிந்துபோயின. இந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்ட தாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.
ஆனால், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப் பட்டிருக்கலாம் என பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் ஏராளமானோர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். எண்ணற்றோர் உடல் ஊனமடைந்தனர்.
குண்டுவீச்சின் போது அணிந்திருந்த கிமோனோ ஆடையில் அழுத்தமான வண்ணங்கள் என்ன பாணியில் இருந்ததோ, அதே பாணியில் தீக்காயம் ஏற்பட்டது.
ஜெர்மனியும் அணுகுண்டைத் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த குண்டின் மூலம் அமெரிக்கா அந்தப் பந்தையத்தில் முந்தியதாகக் கருதப்பட்டது.
இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. அதில் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போர் இத்தோடு முடிந்தது. ஆனால், அணுகுண்டு வீசிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேரழிவு ராஜ்ஜியம் துவங்கியது.
- பெரணமல்லூர் சேகரன்