tamilnadu

img

கொரோனா வைரஸ்: ஆர்டிசிஆர் சோதனை கிட் பத்து நாட்களாகியும் மதுரைக்கு வந்துசேரவில்லை

மதுரை, ஏப்.2- மதுரை அரசு மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனை மையத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் வரை அதற்கான RTPCR 'சோதனை கிட்'  வழக்கப்படவில்லை.  காலதாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டுமென புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு இயக்குநருக்கு  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.  அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:  மதுரை நகரில் 2,518 படுக்கை வசதிகளோடு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.  மதுரையைச் சுற்றியுள்ள ஆறு மாவட்டங்களுக்கு இதுவே முக்கிய மருத்துவமனை. கடந்த பத்து தினங்களுக்கு முன் மதுரை மருத்துவமனைக்கு புனே ஆய்வு மையம், கோவிட்-19 ஐ கண்டறிவதற்கு அங்கீகாரம் வழங்கியது.  இருந்த போதிலும், இன்றளவிலும் கோவிட்-19 ஐ உறுதிப்படுத்தும் (RTPCR) ஆர்டிபிசிஆர் 'சோதனை கிட்' தங்களிடமிருந்து வரவில்லை.

ஒவ்வொரு நாளும் மதுரை மருத்துவமனையிலிருந்து சோதனை மாதிரிகளை  தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு பணி நெருக்கடியால் சோதனை கிட் தீரும் நிலை உருவாகிறது. அடுத்த கட்ட மருத்துவத்தை உடனடியாக தொடங்க முடியாமல்,  சோதனை முடிவு வழிகாட்டுதலுக்காகக் மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள்,  இன்னொருபக்கம் 'முடிவு என்னவானதோ?' என 24 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் காத்திருக்கிறார்கள். மிகுந்த வலிநிறைந்த காத்திருப்பாக இது இருக்கிறது. 'குறித்த நேரத்தில், உரிய சோதனை ஒன்றே, கொரோனாவில் இருந்து இந்த தேசத்தைக் காக்கும்', என்ற சூழலில்  தாமதம், வலியையும் வருத்தத்தையும் உருவாக்குகிறது. மதுரை தென் தமிழகத்தின் மையப் புள்ளி.; ஏராளமான கிராம நடுத்தர மக்களின் நம்பிக்கையின் உறைவிடம். நெருக்கடி அதிகரித்துவரும் சூழலில், சோதனையின் முடிவுதான் மக்களை ஆசுவாசப்படுத்தும். எனவே, போதிய அளவு சோதனை கிட்- களை போர்க்கால அடிப்படையில்  மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;