tamilnadu

img

குளத்தூரில் பயங்கரம் சாதி மறுப்புத் திருமணம் செய்த சோலைராஜ் - ஜோதி தம்பதி படுகொலை

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர், கொடூரமான முறையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ் (வயது 26). சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (வயது 22). இருவரும் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாயினும், வெவ்வேறு உட்பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.பின்னர்  இருவரும்  கடந்த 3 மாதங்களுக்குமுன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். சோலை ராஜின் குடும்பத்தினர் இளம் தம்பதியினரை ஏற்றுக் கொண்ட நிலையில், அவர்களது வீட்டிற்குஅருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஜோதி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின்பு பெரியார் நகரில் சோலைராஜ் - ஜோதி தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் புதன் இரவு கணவன்- மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்து தூங்கி உள்ளனர்.

வியாழனன்று காலை வெகுநேரமாகியும் சோலைராஜ், ஜோதி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து, குளத்தூர் காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆவேசப் போராட்டம்
இந்நிலையில் சாதி ஆணவ படுகொலை மேற்கொண்ட கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில்  கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,கொலை செய்யப்பட்ட சோலைராஜ் தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ,சிபிஎம்,விசிக  மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத், மாநில செயலாளர் மு.கந்தசாமி, மாவட்ட தலைவர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் தி.சீனிவாசன், சிபிஎம் விளாத்திகுளம் தாலுகா செய  லாளர்புவிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்ரவீந்திரன், மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, உடன்குடி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விதொச மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.சம்பத் பேட்டி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத் கூறியதாவது :-

தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலை தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய- மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. இத்தகைய சூழல் சாதி வெறியர்களுக்கு தைரியம் அளித்து, சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக கொடூரமாகச் செயல்பட வும், அவ்வாறு திருமணம் செய்பவர்களை படுகொலை செய்யவும் தூண்டுகிறது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை பொறுத்தவரை இத்தகைய படுகொலைகளை தடுப்பதற்கும், குற்றவாளி களை கடுமையாக தண்டிப்பதற்கும் இதற்கென தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், இதற்கென தனி நீதிமன்றம் மூலம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு காலதாமதமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு உடனடி நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும், சாதிவெறி நடவடிக்கைக்கு எதிராக மக்களிடையே நல்லிணக்கப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும்.குளத்தூரில் தற்போது நடந்துள்ள படுகொலை மிகக்கொடூரமானதாகும் இத்தகைய படுகொலைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும்,மனிதநேய அமைப்பு களும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மிரட்டிச் சென்ற  ஜோதியின் பெற்றோர்
இப்படுகொலை சம்பவம் குறித்து சோலைராஜின் சகோதரி பேச்சியம்மாள் கூறுகையில், “ஜோதி மூன்று மாத கர்ப்பிணி யாக அறிந்த அவரது பெற்றோர் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். பின்னர் ஜோதியிடமிருந்து தாங்கள் வாங்கிக் கொடுத்த நகையை பெற்றுக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்” என்று குறிப்பிட்டார். 

கே.எஸ்.அர்ச்சுனன் கண்டனம்
சோலைராஜ் - ஜோதி சாதி ஆணவப் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத ஜோதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பும், மிரட்டலும் தெரிவித்து வந்துள்ளனர் என்றும் இதுதொடர்பாக குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்றும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.சாதி ஆணவப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாலிபர் சங்கம் கண்டனம்
குளத்தூர் சாதி ஆணவப் படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர், “தர்மபுரி இளவரசன், உடுமலை சங்கர், சமீபத்தில் மேட்டுப்பாளையம் கனகராஜ்-வர்ஷினி பிரியா என சாதி ஆதிக்க சக்திகளின் படுகொலைப்பட்டியல் நீள்கிறது. இது எந்த அளவிற்கு சாதிஆதிக்க சக்திகளின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது என்பதை உணர்த்து கிறது. இதற்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதுடன் அவர்கள், ஜாமீனில் வெளிவருவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

பெண்ணின் தந்தை கைது
இதனிடையே சோலைராஜ் - ஜோதி காதல் திருமணத்திற்கு பெண்ணின் தந்தை  அழகர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பதால் கொலையில் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில்  நாலாட்டின்புதூர் அருகே
உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஜோதியின் தந்தை அழகரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

;