tamilnadu

img

தென்காசி ஆட்சியரிடம் மனு கொடுக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

திருநெல்வேலி:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ.7500 வழங்கிடவும்  அனைத்து ரேசன் பொருட்கள் 6 மாதத்திற்கு இலவசமாக வழங்கிடவும் மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் புதனன்று நடைபெற்றது.கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன், மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தென்காசி வட்டாரத் தலைவர் லெனின்குமார், பீடி சங்க வட்டாரச் செயலாளர் குருசாமி, செங்கோட்டை வட்டாரச் செயலாளர் மாரியப்பன், கட்டுமான சங்க நிர்வாகிகள் கசமுத்து, முருகன், மாரியப்பன், மாரியம்மாள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன்,  கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் என்.சுரேஷ், பொதுச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் செல்லும்போது, தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர்  கோகுலகிருஷ்ணன், சங்க பொறுப்பாளர்களிடம் மிகவும் மோசமான முறையில் ஒருமையில் பேசினார். அவர்களை தாக்கவும் முயற்சித்தார்.‘நாங்கள் தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை கொடுக்கத்தான் வந்தோம்’ என பதில் சொன்ன பிறகும் மனுவை கொடுக்க அனுமதி இல்லை. போராட்டம் நடத்தினா வழக்கு போட்டு வெளியில் வர முடியாமல் செய்து விடுவேன், அனைவரையும் உள்ளே போட்டு விடுவேன்’ என மிரட்டினார். 

அவர் அருகில் இருந்த தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேலும், டிஎஸ்பி பேசியது போன்றே பேசினார்.  மாநில முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெறும்போது தென்காசியில் மட்டும் பசி பட்டினியால் வாடும் தொழிலாளர்களின் மனுவை கொடுக்க கூட அனுமதி மறுத்து ஜனநாயக உரிமை மறுப்பு செய்து வரும் காவல்துறை அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைக்கு சிஐடியு திருநெல்வேலி - தென்காசி மாவட்ட குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

;