tamilnadu

img

நிலப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு வழக்குகளை திரும்பப் பெறுதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள்.....

சென்னை:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்  குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவின் விபரம் வருமாறு: காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர்  அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இதற்கான சட்டம் இயற்றப்படும் என்றும் தாங்கள் அறிவித்திருந்தீர்கள். அச்சட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகளை முன்வைக்கிறோம். 

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை பிரதானமான பயிர்களாகும். ஏற்கனவே விவசாயத்தில் இயந்திர பயன்பாடு அதிகரித்து விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாற்று விடுவது முதல் அறுவடை முடிந்து வண்டியில் வைக்கோல்  ஏற்றப்படும் வரை அனைத்திற்கும் இயந்திரம் என்றாகிவிட்டது. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று கொண்டுள்ளனர். 
எனவே, இந்தச் சட்டத்தில் நிலம் பாதுகாப்பு, பாசன உத்தரவாதம், மின்சார உத்தரவாதம், நீர் நிலைகளை பாதுகாப்பது, பராமரிப்பது, ஆறுகள், வாய்க்கால்களை மேம்படுத்துவது, பாசனமுறையை நவீனப்படுத்துவது, இதை நூறுநாள் வேலைத்திட்டத்துடன் இணைத்து விவசாயத்தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பது, லாபகரமான விலை, கொள்முதல் உத்தரவாதம், இடுபொருட்கள் மானியம், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்கு, வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுபொருட்களாக தயாரித்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு, இத்தகைய நிறுவனங்களுக்கு வரிச்சலுகைவழங்குவது, இதன் மூலம் அம்மாவட்டங் களைச் சார்ந்தவர்களுக்கு வேலை உத்தரவாதம், விவசாய விளைநிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதை தடுப்பது, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பது போன்ற பரந்து விரிந்த தொலைநோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இச்சட்டம் இருக்க வேண்டும்.

தோண்டப்பட்ட கிணறுகள்  மூடப்பட வேண்டும்
எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கென்று தோண்டப்பட்ட கிணறுகள் மூடப்பட்டு விவசாயம் செய்ய ஏற்ற வகையில் நிலம் திருத்தம் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குழாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். எண்ணெய், எரிவாயு பணிக்கென நிறுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஏற்கனவே ரசாயன மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எதிர்காலத்திலும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் காவிரிப்படுகை யில் செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டப்பாதுகாப்பு இருக்க வேண்டும். 

வழக்குகளைத் திரும்பப் பெறுக!
தங்களது நிலத்தையும், வாழ்வாதா ரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், 28 மாவட்ட மக்களின் குடிநீர்ஆதாரத்தை பாதுகாக்கவும் தான் மக்கள் போராடினர். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய, பிரச்சாரம் செய்த ஆயிரக்கணக்கானோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் அறிவிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முன்னோடியாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டத்தினை இயற்றுவதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

;