tamilnadu

img

தமிழகத்தில் தொழில் தொடங்க 5 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை:
5 முன்னணி மின்னணு வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்களின் தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள 
தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

தற்பொழுது, ரகூட்டன் கிரிம்ஸன் ஹெளஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் உறிரோஷி மிகிடனி, பி2டபிள்யு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மரிகோ குரூஸ் மெய்ல்லஸ், சீ லிமிடெட் (ஷாப்பீ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் குழு முதன்மைச் செயல் அலுவலர் ஃபாரஸ்ட் லீ, க்யூஓஓ10 பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஹூ யங்க் பே, ஷாலண்டோ எஸ்ஈ ஹெட்குவாட்டர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ரோபர்ட் ஜேன்ட்ஸ் ஆகிய 5 முன்னணி மின்னணு வணிக  (இ-காமர்ஸ்) நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

;