tamilnadu

img

வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்விக் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்விக் குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை  2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை முகப்பேர், திருவள்ளூர் சூரப்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே வளாகத்திலுள்ள சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனம் லாடனேந்தலிலுள்ள வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் காலை வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை  தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குளை ஆய்வு செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது. 
நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்கள் கிடைத்து உள்ளன. அதுகுறித்து ஆய்வு நடந்து வருகிறது. இவற்றின் மொத்த மதிப்பு , அறக்கட்டளைக்கு வரும் பணங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.  சொத்து ஆவணங்களின் மதிப்பு குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. சோதனை முடிந்த பின்னர் முழுமையான தகவல் தெரியவரும்.  இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

;