tamilnadu

img

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது - திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் இன்று காலை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 


10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இந்நிலையில் இன்று காலை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில், 95.2 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும்,மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் 6100 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 


அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்

திருப்பூர்- 98.53 சதவீதம்

ராமநாதபுரம்- 98.48 சதவீதம்

நாமக்கல்-98.45 சதவீதம்

ஈரோடு -98.41 சதவீதம்

கன்னியாகுமரி -98.08 சதவீதம்


பாடவாரியான தேர்ச்சி விகிதம்: 

தமிழ் : 96.12 சதவீதம்

ஆங்கிலம் : 97.35 சதவீதம்

கணிதம்: 96.46 சதவீதம்

அறிவியல்: 98.56 சதவீதம்

சமூக அறிவியல்: 97.07 சதவீதம்


தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம். 

மேலும் இந்த பொதுத்தேர்வில் 152 சிறை கைதிகள் தேர்வு எழுதினர். இதில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளுள் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் மாணவ,மாணவிகள் மே 2ம்தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் மே 6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையத்தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

;