tamilnadu

img

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட ரயில்வேக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை:
மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் என மதிமுகபொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “17 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற, உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது இந்தியன் ரயில்வே. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள், அந்தத் துறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள், படிப்படியாக நிறைவேற்றப்படுவதைக் காட்டுகின்றது.அதன் ஒரு கட்டமாக, ரயில்வே வாரியம் கடந்த 17ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஆணையில், இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் ரயில்களை, விரைவு ரயில்களாக மாற்றுவதற்கு, விரைந்து முடிவெடுத்து, இரண்டே நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு, பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாக மாற்றினால், பயணிகள் கட்டணமும் இரண்டு மடங்கு உயர்த்தப்படும். எடுத்துக்காட்டாக, திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு, தற்போது 40 ரூபாய் கட்டணம். இனி அது 100 ரூபாயாக உயரும்.இந்திய ரயில்வே வாரிய நிதி ஆணையாளர் அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வேயில் செலவினங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று வழிகாட்டுதல் வழங்கி இருக்கின்றார்.

அதில் ஐந்தாவது பிரிவில் வரிசை எண் ‘சி’இல், ‘வருமானம் இல்லாத பாதைகளில் ரயில் இயக்கத்தை நிறுத்தி, அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை- கோயம்புத்தூர், சென்னை- நாகர் கோவில் வழித்தடங்கள் மட்டுமே லாபம் ஈட்டக்கூடிய வழித்தடங் கள் என்று ரயில்வே கருதுகின் றது. ஆனால், சமூகத்தின் கீழ்த் தட்டு மக்கள், கிராமப்புற மக்கள், மாணவர்கள், ஏழை எளிய தொழிலாளர்கள், ரயில்களைத்தான் நம்பி இருக்கின்றார்கள்.மேலும், விரைவு ரயில்களாக மாற்றப்படுவதால், பெரிய ஊர்களில் மட்டுமே வண்டிகள் நிற்கும். அடுத்த நிலையில் இருக்கின்ற சிற்றூர் மக்கள், ரயில்களை மறந்துவிட வேண்டியதுதான். இதனால், அன்றாட வணிகத்திற் கும், தொழிலுக்கும் செல்பவர் கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இன்றைய நிலையில், தமிழ் நாட்டில் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு, ரயில் பயணமே உகந்ததாக இருக்கின்றது. கொரோனா முடக்கத்தால், வருமானத்திற்கு வழியின்றி மக்கள் தவிக்கின்ற வேளையில், இத்தகைய நடவடிக்கைகள் தேவை அற்றவை, மக்கள் ஆட்சிக்கு எதிரானவை.எனவே, மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும். பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையிலிருந்து கோவை பாலக்காடு வரையிலும், ஒருமணி நேரத்திற்கு ஒரு பயணிகள் ரயில் ஓடுவதற்கு, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம், சாலைப் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைக்கலாம் விபத்துகளைக் குறைக்கலாம். குறைந்த செலவில், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யலாம்”இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

;