tamilnadu

img

அஞ்சல் வாக்குகள் அனுப்புவதை உறுதி செய்க : தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை:

மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 15-5-2019 அன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:


மகத்தான வெற்றி உறுதி

நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என சிபிஐ(எம்) மாநில செயற்குழு நம்புகிறது. இத்தேர்தல் போராட்டத்தில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் மற்றும் பணபலத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இத்தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்கிற காரணத்தினால் சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் அஞ்சல் வாக்குகள் இதுவரை அனுப்பப்படவில்லையென அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன. உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை அனுப்புவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

இம்மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்திட தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாக்கு ஒப்புகை சீட்டு ஒப்பிட்டுப்பார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கையை துல்லியமாக பதிவு செய்வது போன்றவைகளை தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு முறையாக நடத்துவதை தேர்தல் ஆணையம் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும். 


தமிழ், ஆங்கிலப்பாடங்கள்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க சில பரிந்துரைகளை செய்துள்ளது. இன்றைய காலத்தின் சவால்களை சந்திக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென்பது மிக அவசியமானதாகும். தற்போது கல்வித்துறையின் பரிந்துரைகள் தமிழ்நாட்டில் உள்ள 6 பாடங்களை மத்திய பாடத்திட்ட வாரியம் போல் 5 பாடங்களாக குறைப்பதற்காக சிபாரிசு செய்துள்ளது. இதில் ஆங்கிலம், தமிழ் என்கிற இரண்டு பாடங்களில் எதையாவது ஒன்றை தேர்வு செய்து கொள்வது அல்லது இரண்டு பாடங்களிலும் தலா ஒரு தாளை மட்டும் ஏற்றுக் கொள்வது என்ற வகையில் செய்துள்ள பரிந்துரை ஆபத்தானதாகும். இதனால், பெரும்பகுதி மாணவர்கள் தமிழைப் புறக்கணிக்கும் நிலை உருவாகி விடும். எனவே, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை குறைக்கும் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு ஏற்கக்கூடாது என வற்புறுத்துகிறோம். 


கல்வித்தரம் கவலையளிக்கிறது

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் தொடர்ந்து விவாதப்பொருளாகவே மாறியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 245 கல்லூரிகளிலிருந்து 25 சதமான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 74 கல்லூரிகளிலிருந்து ஒற்றை இலக்க சதவிகித மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்பு மட்டுமன்றி, இதர படிப்புகளிலும் இதே போன்ற நிலை உள்ளது. எனவே, தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு ஆழ்ந்து கவனம் செலுத்துவதோடு, கல்வித்தரத்தை உயர்த்த சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து விரிவான ஆய்வுகள் நடத்தி, ஆலோசனைகளைப் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 


கமலஹாசன் பேசியது தவறல்ல

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் திரு.கமலஹாசன் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 


கமலஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு. ஆனால், கமலஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமலஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமானதாகும் என சுட்டிக் காட்டுவதோடு, இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்.


தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் பணி நியமனம்

நாடு முழுவதும் வேலையில்லா இளைஞர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதை போன்று தமிழகத்திலும் வேலையின்மை நாள்தோறும் உயர்ந்து படித்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், அரசு மற்றும் பொதுத்துறையில் காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்வதற்கு மாறாக, அப்பணிகள் முழுவதையும் அவுட்சோர்சிங் மூலம் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நிரப்பும் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வருகின்றன. இக்கொள்கையை கைவிட்டு படித்த இளைஞர்களுக்கு காலி இடங்களில் நிரந்தர வேலை வழங்கிடவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட மாநில அரசு திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும், வங்கி, ரயில்வே துறையிலும் அதிகமான பிற மாநிலத்தவர்கள் வேலையில் அமர்த்தப்படும் நிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது. கிடைக்கும் விபரங்கள் அடிப்படையில் இத்துறை அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. மத்திய அரசு கடைபிடித்து வரும் பணி நியமன கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும் இந்நிலைமைக்கு காரணமாக உள்ளது. மேலும் பணி நியமன போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கான உரிய பயிற்சிக்கான அரசு ஏற்பாடுகள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.


எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிறுவனங்கள், ரயில்வே துறை போன்ற துறைகளில் ஏற்படும் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனவும், இதற்கேற்ப பணி நியமன விதிமுறைகளில் உரிய மாற்றங்களை மேற்கொள்ளவும் தமிழக அரசு மத்திய அரசிடம் வற்புறுத்திட வேண்டும். மேலும் இப்பணி நியமன போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய பயிற்சி மையங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

;