tamilnadu

img

கரூர் மாவட்ட மூத்த தோழர் து.ரா. பெரியதம்பி மறைவு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை:
கரூர் மாவட்ட மூத்த தோழர் து.ரா. பெரியதம்பியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், கரூர் மாவட்டத்தில் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்த தோழர் து.ரா.பெரியதம்பி (வயது 91) அவர்கள் பிப்ரவரி 29 அன்று கரூர் பரமத்தியில்  மரணம் அடைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறது.

91 வயதை கடந்த தோழர் து.ரா. பெரியதம்பி அவர்கள் 1980 இல் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியில்  தன்னைஇணைத்துக் கொண்டவர். கரூர் பரமத்தி  பஞ்சாயத்து தலைவராக மூன்று தடவை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு செயலாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவர் கரூர் பரமத்தி ஒன்றியத்தில் குறிப்பாக, அரியூர் பஞ்சாயத்து உள்ளிட்ட இடங்களில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் வ.செ. குழந்தைசாமி பெயரில் நினைவுஅறக்கட்டளை தொடங்கி கரூர் மாவட்டத்தில் அரசு  பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு வருடம்தோறும் பரிசுகளை வழங்கி ஏழை குழந்தைகளின் கல்விக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வந்தவர். கரூரில் புத்தகக்கண்காட்சி வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர். அவரது மறைவு கட்சிக்கும், கரூர் மாவட்டத் தோழர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும், கட்சித்தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்
தோழர் து.ரா.பெரியதம்பி அவர்களதுமறைவுச்செய்தி அறிந்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.தோழரின் இழப்பு கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும், அவரைஇழந்து வாடும் குடும்பத்திற்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்கரூர் மாவட்டக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மார்ச் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு கரூர் பரமத்தியில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

;