tamilnadu

கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்...

இந்த காலம் முழுவதும் பாமகவினர் மத்திய அமைச்சர் பதவி சுகத்தை அனுபவித்தனரே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுபெற்றுத்தர சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த போது இதைசெய்ய மறுத்துவிட்டு, இப்போது, மத்தியசுகாதாரத்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இட ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறுவது அழகல்லவே! இத்தோடு நின்றாலும் பரவாயில்லை, மேலும் ஒருபடி சென்று 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரவையில் இல்லை, இருந்திருப்பாரேயானால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்திருப்பார் எனகொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியுள்ளார். பதவியில் இருந்தபோது டாக்டர் அன்புமணி அதைச் செய்ய தவறிவிட்டார் என்று மறைமுகமாக இடித்துக்காட்டியுள்ளார் போலும். 

அன்புமணி என்ன செய்தார்?
அபயநாத் வழக்கு விசாரனைக்கு வந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தஅன்புமணியின் ஆலோசனையின் அடிப்படையில்தான் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என சுகாதார துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்ததாகவும், இதை ஏற்றுக்கொண்டுதான் உச்சநீதிமன்றம் இம்மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பு வழங்கியதாகவும் போகிறபோக்கில் கோ.க.மணி அள்ளிவிட்டுள்ளார். மத்திய நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டத்தை 2006 ஆம் ஆண்டே மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த அடிப்படையில்தான் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென அபயநாத் வழக்கு தொடுத்தார். இதைஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தைநிறைவேற்றிய பிறகு நீதிமன்றத்தில் அதன் அடிப்படையில்தான் வாக்குமூலம் அளித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கு ஏதும் இருந்திருக்கவாய்ப்பில்லை. வாதத்திற்காக அன்புமணியின் செல்வாக்கினால்தான் மத்திய சுகாதாரத்துறை மேற்கண்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்றால், அதே சுகாதாரத்துறையின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என வாக்குமூலம் தாக்கல் செய்ய அன்புமணி பணித்திருக்கலாமே. அவ்வாறு செய்திருந்தால் பிரச்சனை அன்றே முடிவுக்கு வந்திருக்குமே! ஏன் இதைச் செய்யவில்லை என்ற உண்மையை இப்போதாவது கோ.க.மணி விளக்க வேண்டும்.

உரிமையை விட்டுக் கொடுப்பதல்ல நமது பணி
திரு கோ.க.மணி தனது அறிக்கையில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட அடிப்படையில்தான் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அகில இந்திய ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவதால், மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தின் படியாக 27 சதமானம் இட ஒதுக்கீட்டைதான் வழங்க முடியும் எனவும், நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவான வகையில் அன்புமணி சார்பில் 27 சதமானம் இடஒதுக்கீடு கோரி வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாவம் கோ.க.மணி அவர்கள், தமிழ்நாட்டின் போராட்டப் பாரம்பரியத்தை மறந்துவிட்டார். 1950களில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீட்டு கோட்பாடினை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பு வழங்கிய போது அதைஎதிர்த்துப்போராடி இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தினை நிறைவேற்ற வைத்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. அத்தகைய பாரம்பரியத்தை மறந்துவிட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக கோரிக்கை வைத்துள்ளோம் என்பது நமது சமூக நீதி பாரம்பரியத்திற்கு விரோதமானது என்பதை விளக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி மக்களின் நியாயங்களை எடுத்துச் சொல்லி நீதிமன்றங்களை ஏற்க வைப்பதுதான் அரசியல் கட்சிகளின் பணியே தவிர, நீதிமன்றங்கள் ஏற்பதற்கு ஏதுவாக மக்களின் உரிமையை விட்டுக்கொடுப்பதல்ல என்பதையாவது அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கோ.க.மணியின் குழப்பம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஒரு பகுதி இடங்களையும், மாநில அரசுகள் மூலம் ஒரு பகுதி இடங்களையும் பெற்று அகில இந்திய ஒதுக்கீடு உருவாக்கப்படுகிறது என்பதை கோ.க.மணி சரியாக விளக்கி உள்ளார். ஆனால் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் முழுவதையும் மத்திய அரசே நிர்வகிப்பதாக கூறி குழப்பி உள்ளார்,அது உண்மையல்ல. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பணியை மட்டுமே அகில இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்கிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ளமருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயில்கின்றனர்.

உதாரணமாக, தமிழகத்திலிருந்து மத்தியஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவப் படிப்பு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இதில் மத்திய அரசோ, மத்திய சுகாதாரத்துறையோ எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவதில்லை.மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் படி இடஒதுக்கீடு அமலாக்கப்படுகிறது. மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்டு உருவாக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையே அமலாக்க வேண்டும் என்பதே பொருத்தமாகும். அபயநாத் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் குல்ஷ்ன் பிரகாஷ் எதிர் ஹரியானா அரசு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில்பாரா 9-ல் மிகத்தெளிவாக இது விளக்கப்பட்டுள்ளது. அதாவது, அபயநாத் வழக்கில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடானது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, இதை மாநில அரசு இடங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என்றகோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பாமகவின் புதிய கண்டுபிடிப்பு
எனவே, மத்திய அரசு மத்திய கல்வி நிறுவனங்களுக்கு பொருத்தமான இடஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களுக்கும் பொருத்திடக் கோருவது இந்த தீர்ப்புக்கு விரோதமானதாகும். மேலும் 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் 5(4)9(7) விதிகளின் படியும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில்அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை அமலாக்கிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. இந்த விதியில் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மாநிலங்களுக்கான இடங்கள் என எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இந்த விதி மாநிலங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குத்தான் பொருந்தும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு பொருந்தாது என கோ.க.மணி அவர்கள்குறிப்பிட்டிருப்பது பாமகவின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

பாஜகவின் வாதத்தை  பாமக வாந்தியெடுக்கிறது
இந்த தவறான வியாக்கியானத்தின் காரணமாகத்தான் பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதமான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாறாக 15 சதமான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய இட ஒதுக்கீடு சட்டத்தை மாநிலங்கள் வழங்கும் இடங்களுக்கு விஸ்தரித்ததன் விளைவாகும் இது. இதனை சீர்தூக்கி பார்க்கையில் பாஜக அரசின் வாதங்களை அப்படியே பாமக வாந்தி எடுப்பது கூட்டணி தர்மத்தில் விளைந்த விசுவாசப் போக்கின் விளைவாகும். மேலும் அகில இந்திய தொகுப்புக்கு தமிழ்நாடு மருத்துவப்படிப்புக்கான இடங்களை வழங்கவில்லையெனில் அந்த இட ஒதுக்கீட்டுக்கும் தமிழ்நாடு இடஒதுக்கீட்டின்படி OBC, SC, ST மாணவர்கள் பலன் பெறமுடியும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்கிவிட்டதாலேயே நமது இடஒதுக்கீட்டு உரிமையையும் பறிகொடுப்பதற்கு பாமக வக்காலத்து வாங்கி துணைபோவது ஏன்?.

மத்திய அரசோ, நீதிமன்றங்களோ அப்படிகட்டாயப்படுத்தினால் அதை எதிர்த்து தமிழகமாணவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதுதானே நியாயம்? இவ்வாறு செய்வது அறியாமை எனக் கூறும் கோ.க.மணி அவர்கள் நமதுஉரிமைகளை விட்டுக்கொடுத்து பாஜகவின் வர்ணாசிரமக் கோட்பாட்டிற்கு காவடி தூக்குவதுதான் அதிபுத்திசாலித்தனம் என்கிறாரா?

நாங்கள் எழுப்பியுள்ள அழுத்தமான கேள்விகளுக்கு முறையான பதில் சொல்ல வழியின்றி திரு கோ.க.மணி அவர்கள் ஆத்திரம்மேலிட அவதூறு புழுதிவாரி தூற்றியுள்ளார்.அவருக்கு பதில் சொல்ல முடியும் என்றாலும்இந்த விவாதத்தை திசைதிருப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஆனால்ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். கூட்டணிக்காகவோ அல்லது தேர்தல்வெற்றிக்காகவோ கொள்கையற்ற நிலையினைமார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் எடுத்ததில்லை என தெரிவித்துக்கொள்கிறோம். ஒருவேளைஇதுபற்றி தனியாக விவாதிக்க வேண்டுமென்றாலும் அதற்கும் எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி தயாராகவே உள்ளது. 

பாதிப்பை ஏற்படுத்திவிடாதீர்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறித்த தீர்ப்பு ஜூலை 27 ஆம் தேதிவழங்கப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு வழங்கும் இடங்களில் இந்தியமருத்துவக் கவுன்சில் விதிப்படி, தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின்படி ஓபிசி 50 சதம், எஸ்.சி.18 சதம், எஸ்.டி. 1 சதம் என வழங்கிட வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கறிஞர்கள் தங்களது அறிவார்ந்த வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்துள்ளனர். இவர்களோடு பாமகவும் சேர்ந்திருந்தால் இந்தகுரலுக்கு மேலும் வலுச் சேர்ந்திருக்கும். ஆனால்பாஜகவோடு சேர்ந்து பாமகவும் கூட்டணிக்கச்சேரி நடத்துவது வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே தமிழக மக்களின் கவலையாகும்.

;