tamilnadu

வாக்களித்த பிறகு தலைவர்கள் அளித்த பேட்டி

நாடறிந்த உண்மை!: மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஈடி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஓட்டிற்கு 500 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதையும் மீறி நோட்டுகளுக்கு அடிபணியாமல் வாக்காளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். தேர்தல் ஆணையம் மத்திய-மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவது நாடறிந்த உண்மை” என்றார்.


மக்கள் எழுச்சி அலை!: ஜி.ராமகிருஷ்ணன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “2004ல் இருந்ததை போன்ற மக்கள் அலை காண முடிகிறது. மோடி எதிர்ப்பலை வெளிப்படையாக தெரிகிறது. 38 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெல்லும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் வகையில் இந்த தேர்தல் இருக்கும்” என்றார்.


ஆட்சி மாற்றம் உறுதி!: கே.பாலகிருஷ்ணன்வாக்குசாவடிக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த கே. பாலகிருஷ்ணன், “எதிர்க்கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதில் காட்டும் அக்கறையை வாக்குச் சாவடிகளில் காட்டியிருந்தால் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு இயந்திரத்தை பொருத்துவதில் தாமதம் என குறைபாடுகள் ஏற்பட்டிருக்காது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.


மாபெரும் வெற்றி!: கே.எஸ்.அழகிரிகடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மனித நேயத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது. இது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.


;