tamilnadu

img

கடன்களை செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் சிறுகடன் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு...

சென்னை:
மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராக புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான சுகந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாக கடனை வசூலிக்கும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராக மகளிர் சுய உதவி குழுக்கள் அளிக்கும் புகார்களை பெற மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும், கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.சிறு கடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெறும் சுய உதவி குழுக்கள் அதன் உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பிரித்து கொடுப்பதாகவும், அதை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப வாரத் தவணையாகவோ, மாதத் தவணையாகவோ ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை திருப்பி செலுத்துவார்கள் என்றும், அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகை மூலம் கடன் அடைக்கப்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக வருமானமில்லாமல் உறுப்பினர்கள் தவித்துவரும் நிலையில், கடனை திருப்பி செலுத்த வேண்டுமென சிறு கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் ஊரக வளர்ச்சி துறையை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

;