tamilnadu

img

தமிழகத்தை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:
பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்த ஆலோசனைகளில் கவனம் செலுத்தி கொரோனா பேரழிவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற அவசர ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஊரடங்கினால் மக்களுக்கு வாழ்வாதார இழப்பும், வாழ்க்கையில் பெரும் பின்னடைவும், மாவட்டங்களில் கடுமையான நோய்த்தொற்றும், மக்களை திரும்பிய பக்கமெல்லாம் சுற்றி வளைத்திடும் சோதனைகள் திரண்டு மிரட்டி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. கொரோனா நோய்த்தொற்று குறித்த விவரம் அ.தி.மு.க. அரசுக்கு ஜனவரி மாதத்திலேயே தெரிந்திருந்தும், பரீட்சார்த்த முறையிலான நடவடிக்கைகளில் ஒவ்வொன்றாக ஈடுபட்டு, அடுத்தடுத்து செய்த தவறுகளாலும், குழப்பங்களாலும், தற்போது மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் விபரீதமாகி, மக்களை நிம்மதியிழக்க வைத்து, அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை மட்டுமின்றி, எந்தவொரு அரசியல் கட்சியின் ஆலோசனைகளையும், காது கொடுத்து கேட்கும் ஜனநாயக பக்குவம் இன்றி நிராகரித்து, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் மனமில்லாமல் மறுத்து தன்னிச்சையாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டதால், இன்று கொரோனா நோய்த் தொற்று ‘கிராமப்புற பரவலாக’ மாறி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின் றன. இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப் பட்டு, அரைகுறை வாழ்க்கை நிலை நான்கு மாதத்திற்கும் மேல் நகருவது தொடர்கிறது.

பணப்புழக்கம் தேவை
இந்தச்சூழ்நிலையில், பொறுப்புள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், மருத்துவ, பொருளாதார, தொழில்துறை வல்லுனர்களை காணொலிக்காட்சி மூலம் அழைத்துப்பேசி அவர் களின் கருத்துரைகளை கேட்டேன். அதில், ‘உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை’, ‘தொலை நோக்காக நிறைவேற்ற வேண்டியவை’ என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை, முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது எனது கடமை என்ற அடிப்படையில் இங்கு முன்வைக்கிறேன். உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆலோசனைகள்: ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினை சமாளிப்பதற்கு, ‘அனைவருடைய கையிலும் பணப்புழக்கம் அதிகரிக்கத்‘ தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்தவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அளித்த 1,000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக பணமாக வழங்கப்படவேண்டும்.

நிலுவைத்தொகையை வழங்குக!
ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால் அறவே தடை செய்யக் கூடாது. பொருட் கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்கவேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு மத்தியமாநில அரசுகள் கொடுக்கவேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும்.கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்தவேண்டும். அரசாங்கம் அதன் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும். இது பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கும் உதவும்.

ஜிஎஸ்டியில் இருந்து விலகுக!
ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றி அமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும்.தொலைநோக்கு பரிந்துரைகளாக தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பொதுவான வருமான கட்டமைப்பு திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் நெருக்கடி நேரங்களில் மட்டுமில்லாமல் மற்ற காலங்களிலும் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை நிதி பாதுகாப்பை வழங்கமுடியும்.

அனைவருக்கும் இலவசகாப்பீடு
அனைவரும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும். அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே இலவச மருத்துவ வசதிகள் உள்ளதால், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிறந்த மருத்துவ வசதிகளை ஏழைகள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அரசு இலவச மருத்துவ பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு முழுமையான சமூக பாதுகாப்பை வழங்கும். அது எதிர்கால நெருக்கடிகளின் போது அவர்களின் பிரச்சனைகளை தணிக்க உதவும்.

வல்லுநர்களின் ஆலோசனை
கொரோனா நோய்த்தொற்றைக் குறைத்து அந்த நோயை அறவே தமிழகத்தில் ஒழித்திடவும், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பின்னடைவுகளில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்புவதற்கும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகள் மிகவும் ஆக்கப்பூர்வமானவை என்றுகருதுகிறேன்.ஆகவே, அவர்களுடைய ஆலோசனைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்டு இருக்கிறேன். எத்தனையோ ஆலோசனைகளை அவ்வப் போது தெரிவித்தும்கூட “பொறுப்புள்ள எதிர்க் கட்சி தலைவராக என்ன சொன்னார் ஸ்டாலின்” என்று, வெறுப்பு, விரோதத்துடன் ‘கொரோனா பேரிடர் நேரத்திலும்’ காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதை தவிர்த்து கருணை மிகுந்த அணுகுமுறையை வளர்த்துக்கொண்டு, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ள மேற்கண்ட ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கு தேவையான அவசர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;