tamilnadu

img

5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கைவிட சிபிஎம் தலைவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.
பத்ரி ஆகியோர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.
செங்கோட்டையனை  தலைமைச் செயலகத்தில் நேரில்
சந்தித்து கடிதம் அளித்தனர். அக்கடிதம் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முற்போக்கான
நடைமுறைகளை நாம் நீண்ட காலமாக அமலாக்கி வருவதோடு, இலவச கல்வி,
கல்விக்கான உபகரண பொருட்களை இலவசமாக வழங்குதல் ஆகிய
நடைமுறைகளை அமலாக்கி வருகிறோம்.. மேலும் மாணவர்களுக்கு சத்தான
உனவுகளை பள்ளிக்கூடங்களில் வழங்கி வருவதிலும் முன்மாதிரி மாநிலமாக
உள்ளோம். கல்வித்துறையில் இதர மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம்
முன்னணி மாநிலமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முரணாக 5 மற்றும் 8ஆம்
வகுப்புகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறை மாநிலத்தின் கல்வி
நிலையை பின்னுக்கு தள்ளிவிடும் என்பதை தங்களது கவனத்திற்கு தெரிவித்துக்
கொள்கிறோம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான
பொதுத் தேர்வுகள் நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூலமாக
சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்படும் என்பதோடு, கிராமப்புற
ஏழை மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை 164 என்பது இலவச
மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு எதிரானதாக அமைந்துள்ளது
என்பதையும், குழந்தைகளுக்கான கட்டாய கல்வியை மறுக்கும் ஒரு அம்சமாக
அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புவதோடு, அரசியல் சாசனத்தில்
பிரிவு 21 A வழங்கியுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதிலிருந்தும் விலகி
நிற்கிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும் இந்த உத்தரவானது இயந்திரகதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளதேயன்றி
நடைமுறைகளை கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் கவனப்படுத்த
விரும்புகிறோம். இந்த அரசாணையானது கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி 8ம்
வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் எவ்வித தேர்வு
முறைகளும் இருக்கக்கூடாது என்பதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. இந்த
அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கல்வி உரிமை திருத்தச் சட்டம் 2009-இல்

எந்தவொரு பொதுத் தேர்வினையும் வலியுறுத்தவில்லை என்பதையும் சுட்டிக்
காட்ட விரும்புகிறோம்.
2019-20ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான
வகுப்புகளுக்கு மூன்று பருவ தேர்வு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, முதல்
பருவத்திற்கான பாடப் புத்தகங்களும் வழங்கபட்டன. அந்த
பாடப்புத்தகங்களுக்கான காலம் கடந்த 23.9.2019 அன்றோடு முடிவடைந்து,
அதற்கடுத்த பருவத்திற்கான பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில்
5 மற்றும் 8ஆம் வகுப்புகளும் உள்ளன. இத்தகைய பாடப்புத்தகங்கள்
வழங்கப்படும் போதும், அதற்கு பிறகும் கூட மாணவர்களுக்கோ அல்லது
பெற்றோர்களுக்கோ பொதுத்தேர்வு முறை அமலாக்கப்படுவது என்பது தெரியாது.
எனவே இந்நிலையில் பொதுத்தேர்வை அமலாக்குவது மாணவர்களையும்,
பெற்றோர்களையும் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாக்கும். தற்போது
நடைமுறையில் உள்ள பருவ தேர்வு முறையென்பது உருவாக்க மதிப்பீடு மற்றும்
சுருக்க மதிப்பீடு அடிப்படையில் உள்ளதோடு, இரண்டிற்கும் தனித்தனியான
மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்கள் நலன் சார்ந்த
நடைமுறைகளை அப்படியே கைவிட்டுவிட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வு முறையை புகுத்துவது என்பது அவர்களை மன உளைச்சலுக்கு
உள்ளாக்கும் என்பதோடு, கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் பிரிவு 29 மற்றும் 30
இல் குறிப்பிட்டுள்ள அம்சங்களை மீறுவதாக அமைந்து விடும்.
மேலும், வழக்கமான தேர்வுக்கும், வாரியத்தால் நடத்தப்படும் பொதுத்
தேர்வுக்கும் அடிப்படையான வேறுபாடுள்ளது. வழக்கமான தேர்வு
வகுப்பறையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரே நடத்துவது. வாரிய தேர்வு என்பது
பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நடத்துவதைப் போல மாநில
முழுவதற்குமான பொதுத்தேர்வாகும். குழந்தைப் பருவத்தினர் மீது இத்தகைய
பொதுத் தேர்வை திணிப்பது குழந்தைகள் அச்சமடைவதற்கும்,
பதற்றமடைவதற்கும் மட்டுமே உதவும்.
பதற்றமில்லாமல், அச்சமில்லாமல் தங்கள் கற்றல் விளைவுகளை
வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கித்தருவது தான்

கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். பிஞ்சு நெஞ்சங்களில் தேர்வு பயத்தை
ஏற்படுத்துவது என்பது எவ்விதத்திலும் ஏற்க இயலாதது. குழந்தைகளுக்கு கற்றல்
சுகமானதாக இருக்க வேண்டும். சுமையானதாக இருக்கக்கூடாது. அப்போதுதான்
கல்வியின் மீதும், கற்றலின் மீதும் குழந்தைகளுக்கு ஈர்ப்பு உருவாகும். 5, 8 ஆம்
வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைப்பதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியின்
மீதும், கற்றலின் மீதும் சலிப்பும், வெறுப்பும் ஏற்படவே வழிவகுக்கும்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களைக்கூட தேர்வு பயம் எந்த அளவிற்கு
ஆட்டிப்படைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும்போது
மழலை மனம் மாறாத 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மிகுந்த
அச்சத்தையும், சுமையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தும் என்பது தெளிவு.
பொதுத்தேர்வு இல்லாத நிலையிலேயே தொடக்கக்கல்வி நிலையில்
இடைநிற்றல் ஏற்பட்டு மாணவர்களது கல்வி தடைப்பட்டு விடக்கூடாது
என்பதற்காகவே 8 ஆம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற நிலை
கொண்டுவரப்பட்டது.
ஆனால், இன்று தமிழக அரசு 5 ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வைக்
கொண்டுவருவது குழந்தைகளை குறிப்பாக, ஏழை, எளிய கிராமப்புறக்
குழந்தைகளை கல்விக்கூடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி
செய்வதாக அமைந்து விடும். பொதுத்தேர்வு என்று வரும்பொழுது அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளே அதிகம்
பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவச் செல்வங்கள் குழந்தை
தொழிலாளர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் மாறும் நிலை உருவாகும்.
இது மிகப்பெரும் சமூக அநீதியை உருவாக்கிடும் என்பதை சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.
தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின்
புத்தகச்சுமையைக் குறைப்பதற்காகவும், பாடச்சுமையைக் குறைப்பதற்காகவும்
முப்பருவ முறையைக் கொண்டுவந்தது. 5 புத்தகங்கள் 2 புத்தகங்களாக
குறைக்கப்பட்டது. இதனால் ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை
மூன்று பருவங்களாய்ப் பிரித்துப் படிக்கும் நிலை தற்போது நடைமுறையில்
உள்ளது. ஒரு பருவத்தில் படித்த பாடங்கள் அந்தப் பருவத்தேர்வோடு

முடிந்துவிடும். அடுத்த பருவத்திற்கு வேறு புத்தகங்கள் வந்துவிடும். ஆனால்,
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பொதுத்தேர்வில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு
மூன்று பருவங்களிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று அறிவித்துள்ளது
உச்ச கட்ட குழப்பத்தையும் தேவையற்ற முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள நீண்ட கல்வி மரபிற்கு முரணாக, 5 மற்றும்
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை அமலாக்கி,
மாணவர்களையும், பெற்றோர்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நடைமுறையை
கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இப்பொதுத்தேர்வு முறை
மாணவர்களின் இடைநிற்றலுக்கும், படிப்பை துறப்பதற்கும் காரணமாகி
விடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு
மாநிலக்குழுவின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

;