tamilnadu

img

பொருளாதார நெருக்கடியை திசை திருப்ப பாஜக சூழ்ச்சி

கோவை:
வரலாறு காணாத வேலையின்மை உள்ளிட்ட பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்கொள்ள முடியாமல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்பரிவார அமைப்புகளை கொண்டு திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாகத்தான் இந்து மக்கள் கட்சி வள்ளுவரை அவமதித்து மலிவான விளம்பரத்தை தேடிக்கொண்டிருக்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். 

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின செங்கொடியேற்றுதல் நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் செங்கொடியினை ஏற்றிவைத்து நவம்பர்புரட்சிதின நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மனித குல விடுதலைக்கு மார்க்சியமே மாமருந்து என்பதை ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. இப்புரட்சி தின நாளை நாடு முழுவதும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது. மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாசிச பாஜகவை எதிர்த்து கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இரண்டாவது முறையாக அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக அரசுமக்கள் பிரச்சனைகளை சிறிதும் தீர்க்கவில்லை.இதன்காரணமாக 50 ஆண்டுகளில் இல்லாதவேலை இழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள் தற்போது ஏற்பட்டு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிகோடியாக சலுகையை அள்ளித்தரும் இவர்கள் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. இதன் காரணமாகவே தொழில்நசிவு, வேலையின்மை போன்ற காரணங்களால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நெருக்கடிகளை எதிர்கொள்ள திராணியற்ற பாஜக மோடி அரசு தொடர்ந்து நாடு முழுவதும் திசைதிருப்பல் நடவடிக்கை யை மேற்கொண்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில்வள்ளுவரை முன்வைத்து அரசியல் திசைதிருப்பல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  ஆர்எஸ்எஸ் சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி  அவமானப்படுத்தினார். வள்ளுவரை அவமதித்த அர்ஜூன் சம்பத் மீது சாதாரண வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவில் வழக்குப் பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும். காந்தியை கொன்ற இவர்களே காந்தியை கொண்டாடுகின்றனர். திருவள்ளுவருக்கு காவிஉடை அணிவிப்பதும், பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கக் கூடாது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற  வள்ளுவருக்கு  காவிச் சாயம் பூசி இழிவான செயலில் சங்பரிவார் அமைப்பினர் ஈடுபடுகின்றனர். இவர்களின் நடவடிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப்படுத்தும். நவம்பர் புரட்சிதின கொண்டாட்டம் அதற்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;